"கேப்டன் சும்மா ஒன்னும் வாழ்ந்துட்டு போகல ராசா கணக்கா வாழ்ந்துட்டு போயிருக்காரு" - மனச தேத்த இதுதான் மிச்சம்!
ஒரு மாபெரும் சகாப்தம் நம்மை விட்டு பிரிந்திருக்கின்றது. ஆமாங்க, இந்த ஆண்டின் மாபெரும் இழப்பாக கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றார். பல நாட்களாக தீவிர உடல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் விஜயகாந்த் இன்று காலை உலகை விட்டுச் சென்றார்.
இவரை வெறுத்தவர்களும் இப்போது அவரின் மறைவால் வாட தொடங்கி இருக்கின்றனர். சொல்லப் போனால் ஒட்டுமொத்த தமிழகமும் இவரின் இழப்பால் கண்ணீர் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இவருடைய இழப்பு சினிமா திரையுலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மாபெரும் இழப்பாகும். சிறந்த நடிகர், சிறந்த அரசியல்வாதி மற்றும் சிறந்த நிர்வாக திறமைக் கொண்டவர் என இவரை சினிமாவைச் சேர்ந்தவர்களும், தமிழக மக்களும் புகழ்பாடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பேர்பட்ட மாமனிதரையே தற்போது தமிழகம் இழந்திருக்கின்றது. இவர் மேலே பார்த்த விஷயங்களில் மட்டுமே சிறந்தவர் இல்லைங்க. கொடை அளிப்பதிலும் மிகப் பெரிய வள்ளலாக இருக்கின்றார். புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஒவ்வொரு முறையும் தமிழகம் பாதிக்கப்பட்டபோது ஓடி வந்து முதல் ஆளாக நன்கொடை வழங்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
தமிழகத்திற்கு மட்டுமில்லைங்க, நம்முடைய அண்டை மாநிலங்கள் சிலவற்றிற்கும் இவர் பேரிடர் காலங்களில் உதவி செய்திருக்கின்றார். அந்தவகையில், கேரளா பெரும் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டபோது இவர் பல லட்ச ரூபாயை அம்மாநிலத்திற்கு கொடையாக வழங்கினார். இதுமட்டுமா, அண்டை நாட்டிற்கே கொடை வழங்கியவர் என்கிற பெருமை நம்முடைய கேப்டைன் விஜயகாந்த்திற்கு உண்டு.

நிதிபற்றாக்குறையால் சிக்கி தவித்த இலங்கைக்கே லட்சக் கணக்கான ரூபாயை இவர் நிதியாக வழங்கினார். இத்தகைய மிகப் பெரிய கொடையாளியே தற்போது நம்முடன் இல்லாமல் போயிருக்கின்றார். இந்த சோகமான சம்பவம் நம்முடைய மனதை வருடிக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில், அவர் இந்த தமிழ் மண்ணில் சும்மா வாழ்ந்துவிட்டு போகவில்லை, அவர் ஓர் ராஜா கணக்கா வாழ்ந்துவிட்டே சென்றிருக்கின்றார் என்கிற தகவல் நம்முடைய மனசை லேசாக இலகாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதற்கு சான்றாக அவர் பயன்படுத்தி வந்த கார் மாடல்கள் இருக்கின்றன. ஆமாங்க, நம்முடைய கேப்டன் விஜயகாந்த் அரண்மனைப் போன்ற அனுபவத்தை வழங்கக் கூடிய பல வகையான கார்களை பயன்படுத்தி வந்திருக்கின்றார். அவற்றின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆடி க்யூ (Audi q7): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் சொகுசான மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சொகுசு கார் மாடல்களில் ஆடி க்யூ7-ம் ஒன்றாகும். இதனால்தான் இந்த காருக்கு இந்திய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் பள்ளம் மற்றும் மேடுகள் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஓர் கார் மாடலே க்யூ7 ஆகும். கரடு-முரடான சாலையில் பயணித்தாலும் சிறிதும் அலுங்கள், குலுங்கல்கள் இன்றி பயணிக்க முடியும். ஆடி க்யூ7 ஓர் சொகுசு வசதிகள் நிரம்பிய எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதில் ஒட்டுமொத்தமாக 7 பேர் வரை ஒரே நேரத்தில் அமர்ந்து பயணிக்க முடியும்.

இதன் சந்தை மதிப்பு ரூ. 84.70 லட்சம் ஆகும். இந்த கார் அதிக சொகுசு வசதியைத் தாங்கியது மட்டுமில்லைங்க, இதன் லேட்டஸ்ட் வெர்ஷன் பாதுகாப்பிற்காக ஐஐஎச்எஸ் உயரிய விருதையும் வென்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய ஓர் வாகனத்தையே கேப்டன் தன்னுடைய பயணங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350 சிடிஐ (Mercedes Benz S350 CDI): கேப்டன் பயன்படுத்தி வந்த அதிக சொகுசு வசதிகள் நிறைந்த சொகுசு கார் மாடல்களில் இதுவும் அடங்கும். இதன் விலையும் சற்று அதிகம் ஆகும். எக்ஸ்-ஷோரூமிலேயே இதன் விலை ரூ. 1.6 கோடியை நெருங்கும்.
இத்தகைய மாபெரும் விலைக் கொண்ட காரிலேயே கடந்த காலங்களில் வலம் வந்திருக்கின்றார் கேப்டன் விஜயகாந்த். 2014ஆம் ஆண்டிலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது சொகுசு கார் காதலர்கள் பலரை இந்த கார் தன்னுடைய வசீகரிக்கும் தோற்றத்தாலும், லக்சூரி அம்சத்தாலும் கவர்ந்திழுத்தது.
அந்தவகையில், நம்முடைய கேப்டனையும் இந்த கார் கவர்ந்திழுத்தது. இதனாலேயே அவரின் கார் சேகரிப்பில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350 சிடிஐ இடம்பிடித்தது. இந்த காரும் அமர்ந்து பயணிக்கும் ரதத்தில் பயணிப்பதைப் போன்ற அனுபவம் கிடைக்கும். இதற்கேற்ற மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் இருக்கைகளே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதிலேயே அமர்ந்து ராசா கணக்கா நம்முடைய கேப்டைன் விஜயகாந்த் தமிழகத்தை வலம் வந்திருக்கின்றார்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5): கேப்டன் விஜயகாந்திற்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் அழகர்சாமி என இருமகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரால் கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கார் மாடலே இந்த அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய எக்ஸ்5 கார் மாடல் ஆகும்.
இந்தியர் சொகுசு பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் இந்த எக்ஸ்5-ம் ஒன்றாகும். இதன் சந்தை மதிப்பு ரூ. 90 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதன் உயர்நிலை தேர்வு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.
இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை ரூ. 93.9 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், இதன் உயர்நிலை வேரியண்ட் எக்ஸ்-ஷோரூமிலேயே ரூ. 1.06 கோடிக்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹர்மன் கர்டோன் மியூசிக் சிஸ்டம் மற்றும் ஆம்பியன்ட் லைட் பார் என ஏகப்பட்ட வசதிகளைத் தாங்கிய கார் மாடலே இது ஆகும். இதுதவிர, காரில் அமர்ந்து பயணிக்கும்போது கசகசப்பான அனுபவம் ஏற்படக் கூடாது என்பதற்காக வென்டிலேட் மற்றும் எலெக்ட்ரிக் கன்ட்ரோல் வசதிக் கொண்ட இருக்கைகள் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றுடன், 4ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங்-ரிவர்ஸ் அசிஸ்டன்ஸ், சரவுண்ட் வியூ கேமிரா, டிரைவ் ரெக்கார்டு மற்றும் ரிமோட் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளும் எக்ஸ்5 காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய அம்சங்களைக் கொண்ட கார் மாடலின் முந்தைய வெர்ஷனையே கேப்டன் பயன்படுத்தி வந்தார். இதில் தற்போதைய நவீன கால அம்சங்கள் சற்றுக் குறைவு என்றாலும், லக்சூரியான ரைடு அனுபவத்தை வழங்குவதற்கான அம்சங்கள் மிக தாராளமாக இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour): பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு காரைபோல பிள்ளைகளால் பரிசளிக்கப்பட்ட மற்றுமொரு ஆடம்பர கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதேவேளையில், ஒரு சிலர் இந்தியாவில் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவராகவே நம்முடைய கேப்டன் இருந்தார். ஆனால், இனி இந்த காரால் அவரை ஏற்றிச் செல்ல முடியாது. ஃபோர்டு நிறுவனத்தை போலவே விஜயகாந்தும் நமக்கு எட்டா தூரத்திற்கு சென்றுவிட்டார்.
வால்வோ எஸ்90 (Volvo S90): கேப்டன் விஜயகாந்த் பயன்படுத்திய சூப்பரான செடான் ரக கார் மாடலாக இருக்கின்றது. இதில் பிரீமியம் அம்சங்களும், சொகுசு வசதிகளும் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் ஆடம்பர கார்களை தேடுவோர் மத்தியில் இந்த காருக்கு என தனி இடம் இருக்கின்றது.
இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 68 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இந்த காரில் ஒரே நேரத்தில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். குடும்பத்துடன் செல்ல நேரங்களில் இந்த காரையே கேப்டன் பயன்படுத்தி வந்திருக்கின்றார். அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்குவதிலும் இந்த கார் மிக சிறந்தது.
இந்த கார் மாடல்களை மட்டுமில்லைங்க கேப்டன் தன்னுடைய சமீபதத்திய பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta MPV)-வை அதிகளவில் பயன்படுத்தி இருக்கின்றார். குறிப்பாக, உடல்நிலை குன்றிய பின்னர் அவர் அதிக அளவில் இந்த கார் மாடலையே பயன்படுத்தி இருக்கின்றார்.
பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது தொடங்கி பலவற்றிற்கு இந்த காரையே அவர் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இதுதவிர, ஹூண்டாய் சேன்டா எஃப்இ (Hyundai Santa FE) கார் மாடலையும் கேப்டன் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இந்தியாவில் விற்பனையில் இல்லாத கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய தனித்துவமான கார் மாடலையே அவர் தமிழகத்தில் பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்றும், நாளையும் அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மரியாதைச் செலுத்தும் விதமாக அங்கு வைக்கப்பட உள்ளது. மேலும், இறுதிச்சடங்கானது நாளை நடைபெற இருக்கின்றது.
இதில் எண்ணற்ற கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. நம்ம கேப்டன் விஜயகாந்த் இந்த உலகத்துல சும்மா வாழ்ந்துட்டு போகலைங்க. ராசா கணக்கா நம்ம மனசுலையும், இந்த உலகத்துலையும் வாழ்ந்துட்டு போயிருக்காரு. இதற்கு சான்றாக மேலே பார்த்த கார் மாடல்கள் உள்ளன. மேலும், இதுபோன்று இன்னும் பல கார்கள் அவருடைய பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









