பாஸ்ட்டேக் கோல்மால்... அரசு அதிகாரி கணக்கில் இருந்த பணம் அபேஸ்... ஷாக் அடிக்க வைக்கும் பகீர் சம்பவம்
அரசு அதிகாரி கணக்கில் இருந்த பணம் டோல்கேட்டில் பாஸ்ட்டேக் மூலம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக பாஸ்ட்டேக் திட்டம் கொண்டு வரப்பட்டது. பாஸ்ட்டேக் திட்டத்தால், டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் குறைவது மட்டுமின்றி இன்னும் ஏராளமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பாஸ்ட்டேக் அட்டையை பெற்றிருந்தால், டோல்கேட்களில் கட்டணம் செலுத்த காத்திருக்க வேண்டியதில்லை.

நீங்கள் தொடர்ந்து பயணித்து கொண்டே இருக்கலாம். எனவே உங்கள் நேரம் மிச்சமாகும். இதன் மூலமாக வாகனங்களின் தடையற்ற இயக்கமும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் டோல்கேட் கட்டணம் செலுத்த கையில் பணம் எடுத்து செல்ல வேண்டிய அவசியமும் பாஸ்ட்டேக் திட்டத்தால் இல்லாமல் போகிறது. இதுதவிர சுற்றுச்சூழலுக்கும் கூட பாஸ்ட்டேக்கால் நன்மை ஏற்படும்.

நீங்கள் கட்டணம் செலுத்த காத்திருக்க வேண்டியது கிடையாது என்பதால், உங்கள் வாகனத்தின் எரிபொருள் மிச்சம் பிடிக்கப்படுகிறது. மேலும் காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது. அத்துடன் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை இது ஊக்குவிப்பதாகவும் அமையும். இவ்வாறு பாஸ்ட்டேக்கின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

பாஸ்ட்டேக்கால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாக, கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் அந்த உத்தரவு அமலுக்கு வரவில்லை. அதற்கு பதில் 15 நாட்கள், அதாவது டிசம்பர் 15ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் டிசம்பர் 15ம் தேதிக்கு முன்பாக மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி பாஸ்ட்டேக் பெறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி வரும் ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. பாஸ்ட்டேக் திட்டத்தால் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், அவ்வப்போது ஒரு சில குளறுபடிகளும் அரங்கேறி கொண்டுதான் உள்ளன.

இந்தவகையில் தற்போது அரங்கேறியுள்ள ஒரு குளறுபடி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் டோல்கேட்டை கடந்து சென்றதாக கூறி அரசு அதிகாரி ஒருவரின் கணக்கில் இருந்து கட்டணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர் இது தொடர்பாக நுகர்வோர் கோர்ட்டை நாட திட்டமிட்டுள்ளார்.

ஹரியானா மாநில அரசில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சட்பிர் ஜங்ரா. இவருக்கு கடந்த டிசம்பர் 30ம் தேதி மாலை மெசேஜ் ஒன்று வந்தது. அதில், அவரது ஆல்டோ கே10 (CH01-AF2392) காருக்கு, அவரது கணக்கில் இருந்து, மனேசரில் உள்ள சுங்கசாவடியில் 65 ரூபாய் கட்டணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சட்பிர் ஜங்ரா அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் கட்டணம் எடுக்கப்பட்ட சமயத்தில், அவரது கார் சண்டிகரில் உள்ள அவரது வீட்டில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது. எனவே இந்த விவகாரத்தை சட்பிர் ஜங்ரா விடுவதாக இல்லை. இதற்கு நியாயம் கேட்டு கோர்ட் படியேறுவது தொடர்பாக சட்பிர் ஜங்ரா திட்டமிட்டு வருகிறார்.

இதுகுறித்து சட்பிர் ஜங்ரா கூறுகையில், ''எனக்கு மெசேஜ் வந்தபோது, சண்டிகரின் செக்டர் 39ல் உள்ள எனது வீட்டில்தான் எனது கார் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் எனது காரின் விண்டுஸ்க்ரீனில் ஒட்டப்பட்டிருந்தது. எனவே புகாரை பதிவு செய்வதற்காக, ஹெல்ப்லைன் எண்ணை நான் தொடர்பு கொண்டேன்.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆனால் திருப்திகரமான பதில் எதுவும் தற்போது வரை எங்கிருந்தும் கிடைக்கவில்லை. இதனால் நிவாரணம் கேட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்ற வக்கீலுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளேன்'' என்றார். பாஸ்ட்டேக் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்ட்டேக் வரவேற்க கூடிய ஒன்றுதான் என்றாலும் கூட, அவ்வப்போது இதுபோல் தொடர்ச்சியாக நடக்கும் குளறுபடிகள் வாகன உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கண்டிப்பாக இருக்கிறது.

இது போன்ற குளறுபடிகளை தவிர்த்து விட்டு பார்த்தால், பாஸ்ட்டேக் ஒரு நல்ல திட்டம் என்றுதான் பலரும் கூறி வருகின்றனர். பாஸ்ட்டேக் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.

பாஸ்ட்டேக்கில் இதுபோன்ற குளறுபடிகள் இருந்தாலும் கூட, நீங்கள் யோசித்து பார்க்க முடியாத வகையில் ஒரு சில நன்மைகளும் அதில் இருக்கவே செய்கின்றன. இந்த வகையில் காணாமல் போன கார் ஒன்று, பாஸ்ட்டேக்கின் உதவியால் வெறும் 5 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது எப்படி என்பது குறித்து தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும். இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணம் செலுத்தும் முறைக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஃபாஸ்ட் டேக். இது, சிறிய ஸ்கேனிங் கோடிங் முறை மூலம் தானாகவே டோல் கட்டணத்தைச் செலுத்த உதவும். இதில், பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அலை தொழில்நுட்பம் இதற்கு உதவும்.

ஏற்கனவே, இரு முறை இத்திட்டத்தை கட்டாயமாக்குவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு டோல்கேட்டுகளில் அரங்கேறும் முறைகேடுகள் மற்றும் கட்டண கொள்ளைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இந்த ஃபாஸ்டேக் திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. இது கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் டிசம்பர் 15ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், பலர் ஃபாஸ்ட்டேக் திட்டத்திற்கு மாறாத காரணத்தால் இந்த கால அவகாசத்திலும் மாற்றம் செய்யப்பட்டு வரும் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருவாரியானோர் இந்த ஃபாஸ்டேக்கைப் பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் அறிந்துக் கொள்ளாமலே இருக்கின்றனர். இந்நிலையில், காணாமல் போன புத்தம் புதிய ஸ்கார்பியோ காரை ஃபாஸ்டேக்கின் உதவியால் புனே நகர போலீஸார் வெறும் 5 மணி நேரங்களில் கண்டுபிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் உள்ள கர்வேநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜக்டப். அதே பகுதியில் வீடு கட்டுமான அலுவலகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர், நடப்பாண்டின் ஆகஸ்டு மாதத்தில் புத்தம் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியிருந்தார்.

தொடர்ந்து, அந்த காரில் மத்திய அரசின் அறிவிப்பின்படி, டோல்கேட்டில் விரைவாக பணம் செலுத்துவதற்காக ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரையும் ஒட்டினார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 23ம் தேதி விடியற்காலை 4.38 மணியளவில் ஜக்டாபின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், அவரது ஸ்கார்பியோ கார் தலேகன் டோல்பிளாசாவைக் கடந்திருப்பதாகவும். அதற்காக சுங்கக் கட்டணம் ரூ.35 ஃபாஸ்ட் டேக் மூலம் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குறுஞ்செய்தி விளக்கியிருந்தது.

தொடர்ந்து, மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அன்றைய தினத்தின் காலை 5.50 மணியளவிலேயே ஃபாஸ்ட்டேக்கில் இருந்து அவருக்கு வந்துள்ளது. அப்போது அவர் விழித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், குறுஞ்செய்திகளைக் கண்டு குழப்பமடைந்த அவர், நாம் தான் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளேமே, ஏன் இப்படி குறுஞ்செய்திகள் வருகின்றன என்ற கேள்வியுடன், வெளியேச் சென்று காரைப் பார்த்துள்ளார்.

ஆனால், அப்போது அவர் நிறுத்திய இடத்தில் கார் இல்லை. இதனால், கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜேந்திர ஜக்டப், சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். காரின் ஜிபிஎஸ் மற்றம் ஃபாஸ்ட்டேக் மூலம் கட்டணம் செலுத்திய டோல் விவரங்களைக் கொண்டு போலீஸார் துப்பு துலக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து, அந்த கார் கடைசியாக தானே பகுதியில் சென்றிருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து, கார் குறித்த அனைத்து தகவலையும் மும்பரே பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கர்வேநகர் போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி, மும்பரே பகுதி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து, குறிப்பிட்ட இடத்திற்கு அருகாமையில் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இவ்வாறு, கடைசியாக காணாமல் போன கார் ஹிரநந்தனி எஸ்டேட்டிற்கு அருகில் உள்ள கோத்பந்தர் என்ற பகுதியில் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர். அப்போது, நேரம் 8 மணி என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த காரை களவாடி சென்ற திருடர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். ஆகையால், காரை மட்டும் மீட்டு போலீஸார் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

காணாமல் போன காரை மீட்பதற்கு பெரும் உதவியினை ஃபாஸ்ட் டேக் வழங்கியுள்ளது. ஃபாஸ்ட் டேக் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் பரவிய வண்ணம் இருந்தாலும், டோல் கேட்டில் கட்டண கொள்ளையைத் தடுக்கவும், சொந்த காரின் திருட்டைக் கண்டுபிடிக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, டோல்கேட்டுகளில் கட்டணத்தைச் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய அவலநிலையை இந்த ஃபாஸ்ட்டேக்குகள் நீக்கும்.


Click it and Unblock the Notifications