ஃபேஸ்புக்கில் லைவ் செய்வதற்காக உயிரை பறிகொடுத்த இளைஞர்கள்!
ஆட்டம் பாட்டத்துடன் ஃபேஸ்புக்கில் லைவ் செய்த நண்பர்களின் பயணம் கவனக்குறைவால் சோகத்தில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்திலிருந்து கற்க வேண்டிய பாடத்தை இந்த செய்தியில் காணலாம்.
சமூக வலைதளங்களுக்காக செல்ஃபி எடுப்பதும், ஃபேஸ்புக்கில் லைவ் செய்வதற்கும் சிலர் விஷ பரீட்சையில் இறங்குகின்றனர். சில சமயத்தில் இந்த விஷ பரீட்சை விபரீதத்தில் முடிந்துவிடுகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மருத்துமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரை சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்களது நண்பரின் மாருதி 800 காரில் ஜாலி ரைடு சென்றுள்ளனர். அப்போது தங்களது பயணத்தை தங்களது நண்பர்களுக்கு காட்டும் விதத்தில் ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளனர்.

காரை ஓட்டிய இளைஞருக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவர் தனது ஸ்மார்ட்போன் மூலமாக தங்களது பயணத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்து கொண்டு வந்தார். காரில் சப்தமாக மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து கொண்டு பாட்டு பாடிக் கொண்டே அனைவரும் பயணித்தனர்.
Recommended Video


காரை ஓட்டிய இளைஞரும் அவ்வப்போது ஸ்மார்ட்போனில் தனது முகத்தை காட்டிக் கொண்டே வந்துள்ளார். சாலையை பார்ப்பதைவிட, ஸ்மார்ட்போன் கேமராவை பார்ப்பதிலேயே, காரை ஓட்டியவர் ஆர்வம் காட்டியது தெளிவாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிவேகத்தில் அந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா காரை முந்தும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில், கார் மிக மோசமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் காருக்குள் இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இப்போதுள்ள கார்கள் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வரும் நிலையில், மாருதி 800 காரில் எந்தவொரு பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது. அந்த காரை அதிவேகத்தில் செலுத்தியதும், கவனக்குறைவாக செயல்பட்டதுமே அவர்களது உயிரை பறித்துவிட்டது. ஆட்டம் பாட்டத்துடன் காரில் சென்ற அவர்களது பயணம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி இருக்கின்றன. குறிப்பாக, கார் ஓட்டும்போது ஒரு நொடி கவனக்குறைவு ஏற்பட்டால் கூட அது எந்தளவு விபரீதத்தில் முடிந்துபோகும் என்பதற்கு இந்த ஃபேஸ்புக் லைவ் வீடியோவும் சான்றாக இருக்கிறது.

கார் ஓட்டும்போது இளைஞர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதையும், தாறுமாறாக செல்வதையும் தவிர்த்தால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களில் இருந்து தப்பிக்க இயலும்.

இவர்கள் செய்யும் தவறுகளால் சாலையில் வரும் பிற வாகனங்களின் பயணிப்போரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக மாறிவிடுகிறது. இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனியாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாக இருக்கிறது.
ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் ஃபேஸ்புக் வீடியோவை இங்கே காணலாம்.
Via- Rushlane


Click it and Unblock the Notifications








