கொஞ்சம் அசந்தா கூட என்ன வேணாலும் நடக்கும்... காரில் க்ரூஸ் கண்ட்ரோலை யூஸ் பண்ணும்போது செய்ய வேண்டிய விஷயங்கள்!
காரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி தற்போது பிரபலமாகி வருகிறது. முன்பு விலை உயர்ந்த கார்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, தற்போது ஓரளவு விலை குறைவான கார்களிலும் இடம்பெற தொடங்கியுள்ளது. க்ரூஸ் கண்ட்ரோல் வசதி எப்படி செயல்படுகிறது? என்பது உங்களுக்கு தெரியும் என நம்புகிறோம்.

தெரியாதவர்களுக்காக சிறிய அறிமுகம். தொலை தூர பயணங்களின்போது ஓட்டுனர்கள் சோர்வடைவதை தடுப்பதற்கு க்ரூஸ் கண்ட்ரோல் வசதி பயன்படுகிறது. இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட வேகத்தை 'செட்' செய்து கொண்டு, அதே வேகத்தில் தொடர்ந்து பயணிக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் 70 கிலோ மீட்டர் வேகத்தை 'செட்' செய்து விட்டால், கார் 70 கிலோ மீட்டர் வேகத்திலேயே பயணிக்கும்.

நீங்கள் ஆக்ஸலரேட்டர் பெடலை மிதிக்க தேவையில்லை. இதன் மூலம் உங்கள் கால்களுக்கு நன்றாக ஓய்வு கிடைக்கும். ஆனால் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி நெடுஞ்சாலைகளுக்கு மட்டும்தான் ஏற்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் நகர சாலைகளில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்த முடியாது. பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

தினசரியோ அல்லது அடிக்கடியோ நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு க்ரூஸ் கண்ட்ரோல் வசதி ஒரு வரப்பிரசாதம். க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட கார் உங்களிடம் இருந்தாலோ அல்லது இதற்கு முன் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியிருந்தாலோ, இது எவ்வாறு செயல்படும்? என்பது உங்களுக்கு மிக நன்றாக அறிமுகமாகியிருக்கும்.

ஆனால் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பற்றி முழுமையாக தெரியாமல் ஒரு சிலர் தவறு செய்து விடுகின்றனர். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியில் நிறைய நன்மைகள் உள்ளன. அந்த வசதியை சரியாக பயன்படுத்த தவறினால், அதே அளவிற்கு தீமைகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வசதியை பயன்படுத்தும்போது, செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரேக் பெடலுக்கு பக்கத்திலேயே கால்கள் இருக்கணும்!
தொலைதூர பயணங்களின்போது உங்கள் கால்களுக்கு ஓய்வு கொடுக்க க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இது கவர்ச்சிகரமாக இருந்தாலும், எப்போதும் பிரேக் பெடல்களுக்கு அருகிலேயே உங்கள் கால்களை தயாராக வைத்து கொள்வது நல்லது. தேவைப்படும் நேரங்களில் நீங்கள் துரிதமாக செயல்படுவதற்கு இது உதவி செய்யும்.

உங்கள் காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (Adaptive Cruise Control) வசதி இருந்தாலும் கூட, பிரேக் பெடலுக்கு அருகிலேயே காலை வைத்து கொண்டிருப்பது சிறந்தது. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை, க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் மேம்பட்ட வெர்ஷன் என்று சொல்லலாம். உங்களுக்கும், உங்கள் முன்னால் உள்ள வாகனத்திற்கும் இடையே பாதுகாப்பான இடைவெளியை இது பராமரிக்கும்.

இதுபோன்ற வசதிகள் இருந்தாலும் கூட, கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மை பயக்கும். எனவே எப்போதும் காரை உங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு தயாராக இருங்கள். காரின் பிரேக் பெடலுக்கு அருகிலேயே உங்கள் கால்கள் இருப்பது, எப்போது தேவைப்பட்டாலும் காரை நீங்களே கட்டுப்படுத்த உதவி செய்யும்.

டெஸ்லா அளவிற்கு ஸ்மார்ட் கிடையாது!
அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை போல், சாதாரண க்ரூஸ் கண்ட்ரோல், உங்கள் முன்னால் இருக்கும் வாகனத்தை அதுவாகவே கண்டறியாது. அத்துடன் உங்கள் முன்னால் இருக்கும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியையும் பராமரிக்காது. எனவேதான் உங்கள் கவனம் மிகவும் அவசியம் என நாங்கள் சொல்கிறோம்.

இதன் மூலம் உங்கள் காருக்கும், உங்கள் முன்னால் உள்ள வாகனத்திற்கும் இடையே மிகவும் பாதுகாப்பான இடைவெளியை நீங்களாகவே பராமரிக்கலாம். இரண்டு வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி மிக குறைவாக இருப்பது ஆபத்தானது. குறிப்பாக அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது, காரை உடனடியாக நிறுத்த முடியாத சூழல் ஏற்படலாம்.

எனவே உங்கள் முன்னால் இருக்கும் வாகனங்களுடன் பாதுகாப்பான இடைவெளியை பராமரியுங்கள். விலை குறைவான கார்களில் இருக்கும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி, டெஸ்லா கார்களில் காணப்படும் வசதியை போன்று 'ஸ்மார்ட்' கிடையாது. டெஸ்லாவின் ஆட்டோபைலட் சிஸ்டமே ஏராளமான விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

கால்களுக்கு மட்டுமே ஓய்வு... கைகளுக்கு அல்ல!
நேரான பாதையில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஸ்டியரிங் வீலில் இருந்து கையை எடுத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும். எனினும் எக்காரணத்தை கொண்டும் நீங்கள் அதை செய்யக்கூடாது. இதை நீங்கள் மீறினால், கார் செல்லும் திசை மாறுபடலாம். எனவே 2 கைகளையும் ஸ்டியரிங் வீலின் மீது வைத்திருப்பது சிறந்தது.

க்ரூஸ் கண்ட்ரோல் வசதி உங்கள் கால்களுக்கு ஓய்வு அளிப்பதற்கானது மட்டுமே. உங்கள் கைகளுக்கு அல்ல! ஸ்டியரிங் வீலில் இருந்து நீங்கள் கைகளை எடுத்தால், 'லேன்' மாறலாம். இது விபத்திற்கு வழிவகுக்கும் என்ற விஷயத்தை மறந்து விட வேண்டாம். தொலை தூர பயணங்களின்போது கைகளில் வலி ஏற்பட்டால், காரை சிறிது நேரம் நிறுத்தி விட்டு ஓய்வு எடுக்கலாம்.

ஸ்பீடு லிமிட்டை மீற வேண்டாம்!
க்ரூஸ் கண்ட்ரோல் இருக்கிறது என்பதற்காக, வேக வரம்பை மறந்து விட வேண்டும். குறிப்பிட்ட சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற வேக வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 60 கிலோ மீட்டர் வேக வரம்பு என்றால், அதனை மீற வேண்டாம். மீறினால் அபராதம் செலுத்துவதற்கு தயாராக இருங்கள். இது விபத்திற்கும் வழிவகுக்கலாம்.

சுற்றுப்புறத்தின் மீது கவனம் அவசியம்!
க்ரூஸ் கண்ட்ரோல் அல்லது அதன் அடாப்டிவ் வடிவம் இருக்கிறது என்பதற்காக, காரே ஆட்டோமேட்டிக்காக செயல்படுகிறது என தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். ஸ்டியரிங் வீலை நீங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும். எனவேதான் உங்களை சுற்றிலும் என்ன நடக்கிறது? என்பதை கண்காணித்து கொண்டு மிக கவனமாக இருங்கள் என்று கூறுகிறோம்.

க்ரூஸ் கண்ட்ரோல் வசதியின் மூலம் உங்கள் கால்களுக்கு ஓய்வு கிடைத்தாலும், அருகில் வரும் வாகனங்கள் மீதும் கவனம் செலுத்துங்கள். க்ரூஸ் கண்ட்ரோல் வசதியால் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. பயணம் முடியும் வரை எப்போதும் போல் கவனமாகவே இருக்க வேண்டும். உங்கள் கண்கள் சாலையைதான் நோட்டமிட வேண்டுமே தவிர, செல்போன்களை அல்ல!


Click it and Unblock the Notifications