செம ட்ரிக்ஸ்! கார் வாங்கும்போது இப்படிலாம் கூட ஏமாத்தறாங்களா! இந்த விஷயம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே!
புதிய கார் வாங்க வேண்டும் என்பது நம் அனைவரின் கனவாக இருக்கிறது. இதற்காக நாம் கஷ்டப்பட்டு பணத்தை சேர்க்கிறோம். எஞ்சிய தொகையை வங்கியில் கடனாக வாங்குகிறோம். இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நாம் புதிய கார் வாங்கும் நிலையில், டீலர்கள் நம் தலையில் எளிதாக மிளகாய் அரைத்து விடுகிறார்கள்.
பெட்ரோல் பங்க்குகளை போல், கார் டீலர்ஷிப்களிலும் வாடிக்கையாளர்கள் பல வழிகளில் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த மோசடிகளுக்கு நீங்கள் ஆளாகி விட கூடாது என்பதற்காகவே இந்த செய்தி. கார்களை விரைவாக விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக டீலர்கள் செய்யும் தந்திரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இங்கே கூறப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். சரி வாருங்கள். செய்திக்குள் செல்லலாம்.

நீங்கள் புதிய கார் வாங்க செல்லும்போது, இன்னும் ஒரு சில தினங்களில் அல்லது வாரங்களில் விலை உயர்ந்து விடும் என டீலர்கள் அடித்து விடுவார்கள். குறிப்பாக மாத இறுதி என்றால், டீலர்களிடம் இந்த பொய்யை கூசாமல் சொல்வார்கள். உங்களை வேகமாக முடிவு எடுக்க வைத்து, மாதாந்திர விற்பனை இலக்குகளை எட்டுவதுதான் அவர்களின் நோக்கம். எனவே எக்காரணத்தை கொண்டும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
உண்மையிலேயே கார் விலை உயர போகிறதா? என விசாரணை செய்யுங்கள். செய்திகள் மற்றும் மற்ற டீலர்ஷிப்களின் மூலம் நீங்கள் இதை தெரிந்து கொள்ளலாம். அதே போல் நீங்கள் ஆர்வம் காட்டும் கார், சரியாக எப்போது டெலிவரி செய்யப்படும்? என்பதை டீலர்கள் தெரிவிக்க மாட்டார்கள். உங்களை விரைவாக முடிவு எடுக்க வைப்பதற்காக, மிகவும் குறுகிய காலத்திலேயே காரை டெலிவரி செய்து விடுவதாக நம்பிக்கை தருவார்கள்.

2 வாரங்கள் அல்லது 3 வாரங்களில் உங்களுக்கு கார் கிடைத்து விடும் என அடித்து விடுவார்கள். இந்த மோசடியில் நீங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால், ஆன்லைன் ஆர்டர் டிராக்கிங் சிஸ்டத்தின் உதவியை நாடுங்கள். ஒரு சில கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த சேவையை தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. உண்மையான டெலிவரி தேதி எப்போது? என்பதை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல் நீங்கள் விரும்பும் காரின் உண்மையான காத்திருப்பு காலம் எவ்வளவு? என்பதை செய்திகள் மூலமாகவும், அதே காரை வைத்திருக்கும் மற்றவர்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் காரை முன்பதிவு செய்வதற்கும், டெலிவரி பெறுவதற்கும் இடைப்பட்ட காலம்தான் காத்திருப்பு காலம் எனப்படுகிறது. அதேபோல் எங்களிடம் இன்சூரன்ஸ் வாங்குவது கட்டாயம் எனவும் டீலர்கள் அடித்து விடுவார்கள். அதையும் நீங்கள் எக்காரணத்தை கொண்டும் நம்பி விட வேண்டாம்.
புதிய காருக்கு விரிவான இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமானது மட்டுமல்ல. அவசியமானதும் கூட. ஆனால் அதை நீங்கள் எங்கே பெறுகிறீர்கள்? என்பது முக்கியமல்ல. அதாவது டீலர்ஷிப்களில்தான் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுக்கு எங்கு சௌகரியமோ, அங்கு இன்சூரன்ஸ் எடுத்து கொள்ளலாம். பொதுவாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன், கார் டீலர்ஷிப்கள் கூட்டணி வைத்திருக்கும். உங்களை இன்சூரன்ஸ் எடுக்க வைத்தால், கார் டீலர்ஷிப்களுக்கு இதன் மூலம் கமிஷன் கிடைக்கும்.
எனவேதான் டீலர்ஷிப்பிலேயே இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என உங்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதற்கு நீங்கள் ஒப்பு கொண்டால், அதிக பிரீமியம் செலுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம். எனவே நன்றாக விசாரித்து, உங்களுக்கு சிறந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். அதேபோல் மிகவும் நீண்ட நாட்களாக விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் காரை உங்கள் தலையில் கட்டுவதற்கும் கூட டீலர்கள் பல்வேறு முயற்சிகளை செய்வார்கள்.
இந்த கார்தான் தற்போது நன்றாக விற்பனையாகி கொண்டுள்ளது, இந்த கலரைதான் நிறைய வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர், இந்த கலரில் ஒரே ஒரு கார்தான் இருக்கிறது என வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி உங்களை ஏமாற்ற அவர்கள் முயற்சி செய்யலாம். எனவே அனைத்தையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து விட்டு முடிவு செய்வது உங்களுக்கு நன்மையை அளிக்க கூடியதாக இருக்கும். புதிய காருக்கு நாம் செய்யும் செலவு என்பது, நம் வாழ்க்கையில் மிகப்பெரிய முதலீடு. எனவே கவனமாக இருங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications