மோசடி வழக்கில் பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா அதிரடி கைது!
பிரபல கார் டிசைனர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபல நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் வாகனங்கள் மற்றும் கார்களை சொகுசு வசதிகளுடன் ஆடம்பரமாக மாற்றித் தருவதில் டிசி டிசைன் நிறுவனம் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் உரிமையாளர் திலீப் சாப்ரியா கார் வடிவமைப்புத் துறையில் நெடிய அனுபவம் வாய்ந்தவர்.

மும்பையில் டிசி டிசைன் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் கார் கஸ்டமைஸ் செய்து தரும் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சொந்தமாக ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் பணியிலும் டிசி டிசைன் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், டிசி டிசைன் நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சாப்ரியா மோசடி வழக்கு ஒன்றில் மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 420, 465, 467, 468, 471, 120(B) மற்றும் 34 உள்ளிட்ட மோசடி மற்றும் ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவது தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது விலை உயர்ந்த கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மும்பை மாநகர தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ந் தேதி திலீப் சாப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த வழக்கு யார் தொடுத்தார்கள், என்ன பிரச்னை என்பது உள்ளிட்ட விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டிசி அவந்தி ஸ்போர்ட்ஸ் காரை ரூ.5 லட்சம் தொகையை செலுத்தி முன்பதிவு செய்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் கார் டெலிவிரி கொடுக்கப்படவில்லை என்று கூறி, டிசி நிறுவனத்தின் மீது மோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








