நாயை காரில் கட்டி தரதரவென இழுத்து சென்றதற்கு காரணம் இதுதானாம்... வெளிவந்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
கேரள மாநிலத்தில் நாய் ஒன்றை காரில் கட்டி தரதரவென இழுத்து சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நாயை காரில் கட்டி தரதரவென இழுத்து செல்லும் காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நேற்று (டிசம்பர் 11) நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு சமூக வலை தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கேரள காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரை காவல் துறையினர் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மோட்டார் வாகன துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நாய் ஒன்று காரை துரத்தி சென்று கொண்டிருப்பதை போன்ற காட்சியை இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் அந்த சமயத்தில் பார்த்துள்ளார். ஆனால் அவர் காருக்கு அருகே வந்தபோது, அந்த நாய் இழுத்து செல்லப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது.
ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!
நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, அதனை காருடன் இணைத்து ஓட்டுனர் இழுத்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இரு சக்கர வாகன ஓட்டி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை பின்தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் காரை தடுத்து நிறுத்திய அவர், காரின் ஓட்டுனரிடம் நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறீர்கள் என கூறினார்.

இதன்பின் காரில் கட்டப்பட்டிருந்த நாயை அவர் அவிழ்த்து விட்டார். அந்த சமயத்தில் காரின் ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றார். நாயை காப்பாற்றிய இரு சக்கர வாகன ஓட்டியின் பெயர் அகில் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவங்களை அகில் காணொளியாக பதிவு செய்துள்ளார். நாய் வலியால் துடிப்பதையும், அதற்கு ரத்த கசிவு ஏற்பட்டதையும் இந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

அந்த நாய்க்கு மோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அந்த நாயின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி, காரின் உரிமையாளருக்கு எதிராக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்தான் காரை ஓட்டி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காவல் துறையினர் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தன்னுடைய குடும்பத்தினர் நாய் மீது பல்வேறு புகார்களை கூறியதால், அந்த ஆத்திரத்தில் இப்படி ஒரு கொடூரமான காரியத்தை அவர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாயை இழுத்து சென்ற கார், டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கேரள மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாயை காரில் கட்டி இழுத்து சென்ற நபருக்கு சமூக வலை தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாய் எவ்வளவு துன்பத்தை சந்தித்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் வகையில், அவருக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என சமூக வலை தளங்களில் தற்போது பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications