ஹெல்மெட் அணியாமல் வந்ததாக கார் உரிமையாளருக்கு இ-செல்லான்: போலீஸின் அபரீதமான நடவடிக்கையால் அதிர்ச்சி!
காரில் வந்தவருக்கு ஹெல்மெட் அணியாமல் வந்ததாகக் கூறி அபாரதத் தொகை விதித்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூன்றாவது கண் என்ற சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கேமிராக்களைக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் கண்கானிக்கப்பட்டு வருகிறது. மூலைமுடுக்கெங்கும் பொருத்தப்படும் கேமிராக்களை போலீஸார் ஒரு அறைக்குள்ளிருந்தே கண்காணிக்க முடியும்.

இதேபோன்று, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக போக்குவரத்து துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சாலை மற்றும் சிக்னல்களில் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தியுள்ளனர்.

இந்த கேமிராக்கள் மூலம், சாலையில் முறைகேடுகளில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கற்ற செயல்களைக் கண்கானிப்பு செய்து வருகின்றனர். மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வாகன பதிவெண்ணை பதிவுசெய்து இ-செல்லான் முறையில் அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அவ்வாறு, அவர்களுக்கான அபராதத்தொகைக்கான ரசீதை அவர்களின் வீட்டு முகவரிக்கே போலீஸார் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநில போக்குவரத்து போலீஸார், காரில் வந்த ஒருவருக்கு ஹெல்மெட் அணியாமல் வந்ததாகக்கூறி இ-செல்லானை அனுப்பி வைத்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த காரின் உரிமையாளர், இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரியிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, அவர் தன்னிடம் பைக் இல்லை என்றும் கார் மட்டுமே வைத்திருப்பதாகவும் விளக்கமளித்தார். இந்த சம்பவத்தால் சற்று குழப்பமடைந்த காவல் துறையினர். இதுகுறித்த ஆய்வு செய்தனர். ஆய்வில் சம்பந்தபட்டவர் அவரது ஃபோக்ஸ்வேகன் காரை சாலையின் ஓரத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரோந்து போலீஸார் அந்த காரின் புகைப்படத்தை கேமிராவில் எடுத்து இ-செல்லான் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, அந்த கார் மீது இ-செல்லான் ஜெனரேட் செய்யப்பட்டு, ரசீது பிரிண்ட் செய்யப்பட்டது. ஆனால், அந்த ரசீதில் நோ பார்க்கிங்கிற்கான அபராதத்தைக் குறிக்கமால், ஹெல்மெட் அணியாமல் வாகன இயக்கியற்தான அபராதத் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கவனிக்காத போக்குவரத்து காவல் துறையினர் அதனை அப்படியே அந்த வாகன ஓட்டியின் விலாசத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கும் விதமாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, "போக்குவரத்து காவலர்கள் சாலை சீரமைப்பு பணி மட்டுமின்றி, ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுவார்கள். அந்த நேரத்தில் ஏதேனும் வாகனங்கள் போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபட்டாலோ அல்லது வேறு ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டலோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் கேமிரா மூலம் புகைப்படம் எடுப்பார்கள். தொடர்ந்து, அவர்களே மேனுவலாக அபராதம் விதிக்கும் காரணத்தையும் தேர்வு செய்வார்கள்.

அப்போது, காவலர் ஏதேனும் தவறான ஆப்ஷனை தேர்வு செய்திருக்கலாம். இதன்காரணமாகவே, இதுபோன்ற தவறு ஏற்பட்டு இருக்கலாம். இதைத்தவிர்த்து வேறு எந்த காரணமும் இல்லை" என விளக்கமளித்தார்.


Click it and Unblock the Notifications








