வேணும்னே வழி விட மறுத்த கார் டிரைவருக்கு பாடம் புகட்டிய பஸ் டிரைவர்! இதை எல்லாம் செய்யறதுக்கு தைரியம் வேணும்!
இந்திய சாலைகளில் ஒரு சிலர் வாகனங்களை தாறுமாறாக ஓட்டுகின்றனர். குறிப்பாக வேண்டுமென்றே மற்ற வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் காரியத்தை பலர் செய்து கொண்டுள்ளனர். அப்படி செய்த கார் டிரைவர் ஒருவருக்கு, உடனடியாக தண்டனை கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கேரள மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோவில், சிகப்பு நிற ரெனால்ட் க்விட் (Renault Kwid) காரும், பஸ் ஒன்றும் ஒன்றன் பின் ஒன்றால் சென்று கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

பஸ்சுக்கு உள்ளே இருந்த பயணி ஒருவரால், இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பஸ் டிரைவர் ஓவர்டேக் செய்ய கூடாது என்ற நோக்கத்துடன், கார் டிரைவர் மிகவும் மெதுவாக ஓட்டுவது இந்த வீடியோவில் அப்பட்டமாக தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த பஸ் டிரைவர், வழி விடும்படி பல முறை ஹாரன் அடிக்கிறார்.
ஆனால் கார் டிரைவர், தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருவதாக இல்லை. இதற்கிடையே ஒரு கட்டத்தில் பஸ் ஸ்டாப் ஒன்றில், பேருந்து நிறுத்தப்பட்டது. பஸ் நிறுத்தப்பட்டதும், கார் டிரைவரும் வேண்டுமென்றே 'ஸ்லோ' ஆகி விட்டார். பஸ் மீண்டும் காருக்கு பின்னாலேயே வர வேண்டும் என்ற அவரது எண்ணத்தை இதன் மூலம் நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

கார் டிரைவரால் இந்த விபரீத விளையாட்டால், ஒரு கட்டத்தில் பஸ், காரின் பின் பகுதியில் மோதி விட்டது. கார் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டும் விதமாக, பஸ் டிரைவர் வேண்டுமென்றே கூட இதை செய்திருக்கலாம். இந்த வீடியோவில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கையில், கார் டிரைவரின் மீதுதான் தவறு என்பது நமக்கு தெளிவாக புரிகிறது.
ஆனால் இப்படி நடந்து கொள்ளும்படி அவரை தூண்டிய நிகழ்வு எது? என்பது நமக்கு தெரியவில்லை. உண்மையில் வாகன ஓட்டிகள் யாரும் இப்படி நடந்து கொள்ள கூடாது. ரெனால்ட் க்விட் கார் டிரைவரின் இந்த செய்கையால், பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இதற்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முடிவில் தவறு யார் மீது இருக்கிறதோ, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர கால வாகனங்களுக்கு கூட வேண்டுமென்றே ஒரு சிலர் வழி விட மறுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்படிப்பட்ட வாகன ஓட்டிகள் மீது காவல் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவசர கால வாகனங்களுக்கு வழி விட மறுப்பவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அபராத தொகை என்பதையும் தாண்டி, யாருக்கும் பாதிப்புகள் ஏற்பட கூடாது என்பதை மனதில் வைத்து, அவசர கால வாகனங்கள் உள்பட தேவைப்படும் நேரத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வழி விடுவதுதான் நல்ல வாகன ஓட்டிக்கு அழகு!


Click it and Unblock the Notifications








