காருக்குள் டிரைவர் இருந்த நிலையை பார்த்து பதறிய வாகன ஓட்டிகள்! கொஞ்ச நேரத்துல எல்லாமே முடிஞ்சிருக்கும்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, ஹெரியர் (Harrier) ஆகும். இருப்பினும், ஹெரியர் காரை மக்கள் நிறைய பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஹெரியர் காரை வைத்திருக்கக்கூடிய ஒருவர், அதனை சாலையில் மடிக்கணினி (Laptop) பயன்படுத்திக் கொண்டே ஓட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. கொஞ்ச நேரத்தில் விபத்தை ஏற்படுத்திவிட கூடியதாக அமைந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
உலகம் எந்த அளவிற்கு மாடர்னாக மாறிக் கொண்டே வருகிறதோ அதே அளவிற்கு மக்களிடையே மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. எல்லாமே உள்ளங்கையில் இருப்பது போன்றதுதான் உள்ளது; ஆனால், அவற்றை எப்போதும் உள்ளங்கைக்கு உள்ளேயே வைத்திருக்க தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, வீட்டில் இருந்தே பணி புரியும் வசதி வந்த பிறகு பலருக்கு அது பெரிய சாபமாக மாறி வருகிறது. வாழ்வதற்கு பணம் தேவை என்பதையே மறந்து, பணத்தை சம்பாதிப்பதற்காகவே வாழ்கின்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகையவர்களுள் ஒருவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் செல்லும் நீல நிறத்திலான டாடா ஹெரியர் கார் காட்டப்படுகிறது. ஆனால், அந்த ஹெரியர் காரை ஓட்டிவரும் டிரைவரின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஏனெனில், அவர்தான் லேப்டாப்பிற்கு பின்னால் மறைந்து உள்ளாரே...

பேருந்து, இரயில்களில் பயணம் செய்யும்போது சிலர் லேப்டாப் உபயோகிப்பதை பார்த்திருக்கிறோம். பின்னர் அது, பைக்/ ஸ்கூட்டரில் பயணம் செய்யும்போது கூட பயன்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. தற்போது ஒரு கட்டத்திற்குமேல் சென்று, கார் டிரைவிங்கின் போது கூட லேப்டாப்பை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இன்றைய அலுவலக பணிகள் ஒரு மனிதனை எந்த அளவிற்கு ஆட்கொள்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த உதாரணம் ஆகும்.
இந்த குறிப்பிட்ட ஹெரியர் காருக்கு எதிரே வந்த வேறொரு வாகனத்தின் டேஸ்போர்டில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறான செயல்களினால் சம்பந்தப்பட்டவர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அப்பாவி மக்களும் பாதிக்கப்பட கூடும். இந்த சம்பவத்தில் கூட, இந்த ஹெரியர் கார் டிரைவரினால் சாலையில் நடந்துச் செல்லும் பெண் கிட்டத்தட்ட மோதலுக்கு உள்ளாகி இருப்பார்.
டிரைவரின் செயலுக்காக டாடா ஹெரியர் காரை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா ஹெரியர் கார் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்று பாதுகாப்பான காராக விளங்குகிறது. இந்த வீடியோவில் காட்டப்பட்டு இருப்பது முன்பு விற்பனையில் இருந்த பழைய தலைமுறை டாடா ஹெரியர் கார் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து நெரிசலில் நேரம் வீணாகக் கூடாது என்பதற்காக இந்த ஹெரியர் கார் டிரைவர் இவ்வாறு லேப்டாப்பை பயன்படுத்தியப்படி சென்றிருக்கலாம். ஆனால், எப்படியிருந்தாலும் இது தவிர்க்கப்பட வேண்டிய குற்றமாகும். செல்போனில் பேசியப்படி பயணிப்பதே தவறு எனும் பட்சத்தில், முற்றிலுமாக சாலையை மறைத்தப்படி லேப்டாப்பை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.


Click it and Unblock the Notifications








