மஞ்சள் கோட்டை தாண்டியதால் வந்த வினை... ஓவர்டேக் செய்யும்போது கவனம்!
உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் தேசங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மோசமான சாலைகள், விதிமுறைகளை காற்றில் பறக்கவிடும் வாகன ஓட்டிகளால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடந்த விபத்தும், இதற்கு உதாரணமாக அமைந்துவிட்டது.
அம்மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா என்ற இடத்தில் சமீபத்தில் கோர விபத்து நடந்தது. சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய டாடா நானோ கார் ஒன்று எதிரே வந்த டிரக்குடன் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தும், இது வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் விஷயத்தையும் தொடர்ந்து பார்க்கலாம்.

நெஞ்சை பதற செய்யும் இந்த கோர சம்பவத்தில், டாடா நானோ காரை ஓட்டி வந்த பெண்மணியும், அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். மங்களூரில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் அந்த காரை சர்வீஸ் செய்துகொண்டு, வீட்டிற்கு திரும்பும்போதுதான் இந்த கோர விபத்தில் சிக்கியிருக்கின்றனர்.

முன்னால் சென்ற வாகனத்தை ஓவர்டேக் செய்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டிரக்குடன் டாடா நானோ கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கிராஷ் டெஸ்ட்டில் பூஜ்ய தர மதிப்பீடு பெற்ற இந்திய தயாரிப்பு கார் மாடல்களில் ஒன்றான டாடா கார், இந்த விபத்தில் மிக மோசமாக உருக்குலைந்தது.

இந்த விபத்தில் உருக்குலைந்த காரில் இருந்து உடலை மீட்பதற்கே போலீசாரும், மீட்புக்குழுவினரும் பெரும் பாடு பட்டனர். அந்தளவுக்கு மோசமான விபத்தாக அது அமைந்துவிட்டது.

விபத்தில் சிக்கிய டாடா நானோ காரில் எல் போர்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. எனவே, காரை ஓட்டியவருக்கு போதிய அனுபவம் இல்லை என்பதும் புலனாகிறது. இதுபோன்று, ஓவர்டேக் செய்யும் சமயங்களில் டாடா நானோ காரை மிக எச்சரிக்கையாக இயக்குவதும் அவசியமாகிறது.

ஏனெனில், இதுபோன்ற குறைவான திறன் கொண்ட கார்களில் ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்று கோர விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.

எந்த காராக இருந்தாலும், போதிய இடைவெளி இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்ய வேண்டும். மேலும், முன்னே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் எந்தளவு எச்சரிக்கையாக வருவார்கள் என்பதும் சந்தேகம்தான்.

குறிப்பாக, வளைவுகளிலும், தொடர்ந்து வாகனங்கள் செல்லும்போதும் ஓவர்டேக் செய்ய வேண்டாம். சற்று தாமதமானாலும் போதிய பார்வை திறனும், இடைவெளியும் இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்யவும்.

இன்னொன்றையும் மனதில் வைக்கவும். பெரும்பாலும் இதுபோன்ற விபத்துக்கள் ஒருவழித்தடம் கொண்ட சாலைகளில்தான் அதிகம் நடக்கிறது. இதுபோன்ற சாலைகளில் சின்ன விஷயத்தை மனதில் வைத்தால் எச்சரிக்கையுடன் செயல்பட முடியும்.

அதாவது, நடுவில் வெள்ளைக்கோடு இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தால், எதிரில் வாகனங்கள் வரவில்லை என்றால் கோட்டை தாண்டி சென்று ஓவர்டேக் செய்யலாம். இடைவெளி இல்லாமல் மஞ்சள் கோடு போடப்பட்டிருந்தால், மஞ்சள் கோட்டை தாண்டாமல் ஓவர்டேக் செய்ய வேண்டும் அல்லது போதிய இடவெளி கிடைக்கும் வரை பின்தொடர வேண்டும்.

டாடா நானோ கார் மோதியிருக்கும் இடம் கூட மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும் இடம்தான். அது அபாயகரமான இடம் என்பதை குறித்த மஞ்சள் கோடு போட்டிருக்கின்றனர்.

மேலும், இரட்டை மஞ்சள் கோடு அல்லது வெள்ளைக்கோடு போட்டிருந்தாலும் இதுபோன்று தாண்டிச் செல்லக்கூடாது. வளைவு அல்லது போதிய பார்வைதிறன் இல்லாத பகுதி. அந்த கோடுகளை சுவராக நினைத்துக் கொண்டு ஓட்ட வேண்டும்.


Click it and Unblock the Notifications