ஆப்பு வைக்க வந்திருக்கும் பாரத் என்சிஏபி-யை இன்முகத்தோடு வரவேற்கும் மாருதி.. மத்த நிறுவனங்கள் என்ன சொல்றாங்க!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரத் என்சிஏபி (Bharat New Car Assessment Program) திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இன்று (ஆகஸ்டு 22) அறிமுகப்படுத்தியது. வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
பாரத் என்சிஏபி, இது ஓர் உள்நாட்டு காரை மதிப்பீடு செய்யும் திட்டம் ஆகும். அதாவது காரை மோதலுக்கு உட்படுத்தி, அது சந்திக்கும் தாக்கங்களின் அடிப்படையில் அந்த காரின் தரத்தையும், பாதுகாப்பு திறனையும் மதிப்பீடு செய்யும். இத்தகைய அமைப்பையே மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரிய ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது நாடாக இந்தியா தனக்கான மோதல் ஆய்வு அமைப்பை தானே உருவாக்கி இருக்கின்றது. இதற்கு முன்னதாக குளோபல் என்சிஏபி-யையே இந்தியா நம்பி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இனி இந்த நிலை இருக்காது.
இது பாரத் என்சிஏபி (BHARAT NCAP) அல்லது பிஎன்சிஏபி (BNCAP) என்கிற பெயர்களில் அழைக்கப்பட உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டம் இந்திய தயாரிப்பு கார்களின் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய இருக்கின்றது. இதன் வாயிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின்மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படும். மேலும், ஏற்றுமதி அதிகரிப்பதற்கான சூழலையும் இது உருவாக்கிக் கொடுக்கும்.
இத்தகைய சூப்பரான கார் மோதல் ஆய்வு திட்டத்தின் வருகையை இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் எப்படி பார்க்கின்றன என தெரியுமா? ஒவ்வொரு நிறுவனமும் குளோபல் என்சிஏபி பற்றிய என்ன கூறுகின்றது என்பதையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். மாருதி சுஸுகி தொடங்கி டாடா மோட்டார்ஸ் வரை என எந்தெந்த நிறுவனம் என்ன கூறி இருக்கின்றது என்பதையே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
மாருதி சுஸுகி (Maruti Suzuki): இந்த நிறுவனம் பாரத் என்சிஏபி குறித்த கருத்தை ஏற்கனவே தெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின், கார்ப்பரேட் விவகாரங்களின் செயல் அதிகாரி ராகுல் பார்தி, அரசாங்கத்தின் இந்த முயற்சியை வரவேற்பதாக தெரிவித்தார். அரசின் இந்த மோதல் ஆய்விற்கு தாமாக முன் வந்து முதல் லாட்டாக மூன்று கார்களை சோதனை செய்ய வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் விற்பனைச் செய்யப்படும் அனைத்து கார்களும் அரசாங்கம் நிர்ணயித்து பாதுகாப்பு வழிகளுக்கு உட்பட்டே தயாரிக்கப்படுகின்றன. அந்த வாகனங்களின் கூடுதல் பாதுகாப்பு தரம் பற்றிய தகவலை தேடுவோருக்கு இந்த பாரத் என்சிஏபி பெரும் உதவியாக இருக்கப்போகின்றது. மேலும், அதிக பாதுகாப்பான காரை தேர்ந்தெடுக்கவும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கப் போகின்றது" என்றார்.
ஹூண்டாய்: இந்த நிறுவனமும் திட்டத்தை வரவேற்பதாகவே தெரிவித்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்தியாவிற்கன எம்டியும், சிஇஓ-வுமான அன்சூ கிம், குளோபல் என்சிஏபி குறித்து கூறியதாவது, "இந்தியாவின் இந்த முயற்சி காரின் பாதுகாப்பு தரத்தை உயர்த்தும். இதுதவிர, ஓர் கார்குறித்து மிக முக்கிய தகவல்களை அறிந்துக் கொள்ளவும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்" என்றார். இத்துடன், தங்கள் நிறுவனம் உறுதியான மற்றும் பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் உறுதியாக இருப்பதையும் அவர் உறுதி செய்தார்.
ஸ்கோடா இந்தியா: மேலே பார்த்த முன்னணி நிறுவனங்களைப் போலவே இந்த நிறுவனமும் அரசின் இந்த முயற்சிக்கு வரவேற்பை வழங்கி இருக்கின்றது. மேலும், அரசின் இந்த முயற்சிக்கு அது வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கின்றது. இந்த அளவிற்கு நிறுவனம் மிக உறுதியாக இருக்க, அதன் தயாரிப்புகள் பெரும்பாலானவை பாதுகாப்பானது என்கிற பட்டத்தை பெற்றிருப்பதே காரணமாக இருக்கின்றது. நிறுவனத்தின் இயக்குநரான பீட்டர் சோல்க் இதுகுறித்து கூறியதாவது, "பிஎன்சிஏபி அறிமுகம் மிகசிறந்த முயற்சி" என்று கருத்து தெரிவித்திருக்கின்றார்.
ரெனால்ட் இந்தியா (Renault India): மற்ற நிறுவனங்களைப் போலவே இந்த நிறுவனமும் பாரத் என்சிஏபி-யை வரவேற்பதாக தெரிவித்து இருக்கின்றது. விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு குறைக்க வேண்டியது அவசிமானது என்றும், இந்த விஷயத்தின் ஓர் முக்கிய கட்டமே பாரத் என்சிஏபி என்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான வெங்ட்ராம் மாமில்லபல்லே தெரிவித்தார். மேலும், தொலைநோக்கு மற்றும் வரலாற்று முன் முயற்சிக்காக தன்னுடைய பாராட்டுக்குளையும் அவர் தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors): டாடா மோட்டார்ஸ்க்கு இதுபோல பத்து என்சிஏபி அமைப்பு வந்தாலும் கவலை இருக்காது என கூறலாம். இந்த நிறுவனம் ஏற்கனவே அதிக பாதுகாப்பான கார்களை தயாரிக்கத் தொடங்கிவிட்டது. நிறுவனத்தின் தயாரிப்புகள் பல ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவையாக இருக்கின்றன. அதேவேளையில், 4 நட்சத்திரங்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்களும் டாடாவிடம் இருக்கின்றன. இதற்காக அதன் பாதுகாப்பு தரத்தை குறைத்து எடைபோட்டுவிட முடியாது.
ஏனெனில் அந்த கார்கள் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற விபத்துகளில் அதன் பயணிகளை இரும்பு அரணாக இருந்து பாதுகாத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸும் இந்தியாவின் பாரத் என்சிஏபி-யை வரவேற்றிருக்கின்றது. நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஷைலேஷ் சந்திரா இதுகுறித்து கூறுகையில், "பாதுகாப்பு என்பது எங்கள் தயாரிப்புகளின் டிஎன்ஏ-விலேயே உள்ளது என்றும், இந்த புதிய திட்டம் நிறுவனத்தை மேலும் ஊக்குவிக்கும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்றே வாகன உற்பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் பாரத் என்சிஏபி-யை தற்போது வரவேற்றிருக்கின்றனர். புதிய என்சிஏபி இந்தியாவில் விற்கப்படும் வாகனங்களின் இப்போதைய தரத்தை இன்னும் பலமடங்கு வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பாதுகாப்பான காரை உறுதிப்படுத்தவும் பாரத் என்சிஏபி பெரும் உதவியாக இருக்கப்போகின்றது.


Click it and Unblock the Notifications








