சாலையை கடக்க முயன்ற சிறுமி.. காற்றில் தூக்கி வீசிய அதிவேக கார்! பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!
சாலையைக் கடக்க முயன்ற சிறுமியை அதிவேகமாக வந்த கார் ஒன்று தூக்கிய வீசும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் உள்ள சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சந்திக்கும் மிக பெரிய பிரச்னைகளில் ஒன்றாக ஜே வாக்கிங் (பொறுமையாக சாலையை கடக்கும்) உள்ளது.
பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், ஒரு சிலரோ சாலையையே விலைக்கு வாங்கியதைப் போல் மிகவும் ஜாலியாக தற்போதுதான் நடக்க பயிலுவதைப் போல் பொறுமையாக ஆடி அசைந்தவாறு கடப்பார்கள். இதுபோன்ற பாதசாரிகளால் இதுவரை பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

எதிரில் வரும் வாகன ஓட்டிகள் இத்தகையோர் சாலையை கடக்கும்போது, அவர்கள் எந்த பக்கம் செல்கின்றனர் என்பதை கணிக்க முடியாமல், ஒரு கட்டத்தில் விபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது, பாதசாரிகளின் அஜாக்கிரதையான செயல்பாட்டினாலயே நடைபெறக் கூடிய நிகழ்வாகும்.

இந்நிலையில், அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற சிறுமியை அடித்து தூக்கி வீசுவதைப் போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட பகுதி எதுவென்ற தகவல் இதுவரை தெரியவில்லை.
சாலையை கடக்க முயலும் அச்சிறுமி சாலையின் இரு புறமும் பார்க்கின்றார். அப்போது அவரின் இடப்பக்கம் ஒரு சில ஆட்டோக்கள் வருகின்றன. அதைப் பார்த்த சற்று காத்திருந்து பின்னர் சாலையைக் கடக்க முயல்கின்றார்.

அவ்வாறு, ஆட்டோக்கள் கடந்த சில நொடிகளிலேயே வேகமாக ஓடிய அச்சிறுமி எதிர்புறத்தில் கார் ஒன்று வேகமாக வருவதைக் கண்டுக் கொள்ளவில்லை. அப்போது சிறுமி வருவதையும் உணராத கார், வந்த வேகத்திலேயே அவர் மீது மோதியது. இந்த விபத்தில், காற்றில் தூக்கி வீசப்பட்ட அச்சிறுமி சில அடி தூரம் பறந்து சென்று தரையில் மோதினார்.

இதில், நிலைக்குலைந்த சிறுமி தூக்கி வீசப்பட்ட இடத்திலேயே எந்தவொரு அசைவுமின்றி மயக்கநிலைக்கு சென்றார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இக்காட்சிகள் அனைத்தும் சம்பவ நடைபெற்ற இடத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது.
மேலும், அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அதே பகுதியில் வந்த ஆட்டோ மூலம் சிறுமியை மருத்துவமனை அழைத்துச் சென்றார். தற்போது சிறுமியை பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த விபத்தில், சிறுமி மற்றும் கார் ஓட்டி ஆகிய இருவர் மீதும் தவறு இருப்பதை நம்மால் உணர முடிகின்றது.
ஜீப்ரா கிராஸிங் எனப்படும் பாதசாரிகள் கடப்பதற்காக உறுவாக்கப்பட்ட பாதை மூலமே சிறுமி கடந்தாலும், இரு புறமும் சாலையைப் பார்த்த பின்னர் கடந்திருக்க வேண்டும். மாறாக, ஆரம்பத்தில் மட்டும் சாலையின் இரு புறத்தைப் பார்த்த சிறுமி சிறிது இடைவெளிக்கு பின்னர் சாலையை பார்க்காமல் கடந்ததும் இவ்விபத்திற்கு முக்கிய காரணம்.
அதேபோன்று, சிறுமி வந்ததை உணர்ந்த காரின் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்த முயற்சிக்காமல் வளைத்துச் செல்ல முயன்றதும் இவ்விபத்திற்கு ஓர் காரணமாக உள்ளது. மேலும், காரை வளைத்த பின்னரே, அதனை நிறுத்தவும் முயற்சிக்கின்றார் ஓட்டுநர். ஆனால், அதற்குள் அனைத்தும் கையை விட்டு நழுவி, அரங்கேறி முடிகின்றது.


Click it and Unblock the Notifications








