அதை பாத்ததும் மெய் மறந்துட்டாரு... நின்னுகிட்டு இருந்த லாரி மீது காரை மோதிய டிரைவர்!
பொது சாலைகளில் நாம் எக்காரணத்தை கொண்டும் ரேஸ்களில் ஈடுபட கூடாது. அதேபோல் கவனமும் சிதற கூடாது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தால், அதுவும் ஈரமான சாலையில் நடந்தால் என்ன ஆகும்? என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று வெகு சமீபத்தில் நடந்துள்ளது.
மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்6 (BMW X6) கார் ஒன்றை, பின்னால் மற்றொரு காரில் வந்தவர்கள் விரட்டி சென்றுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார் மிகவும் வேகமாக சென்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பின்னால் வந்த காரின் டிரைவரால், பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் அளவிற்கு வேகமாக செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 மிகவும் வேகமாக சென்று கண்ணில் இருந்தே மறைந்து விட்டது. இதனால் பின்னால் வந்த காரின் டிரைவர் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரை தேட தொடங்கினார். எனவே அவரது கவனம் சிதறி விட்டது.
அந்த சமயத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரியை அவர் சரியாக கவனிக்கவில்லை. லாரி நின்று கொண்டிருந்தது சற்று தாமதமாகத்தான் அவருக்கு தெரியவந்தது. எனவே சரியான நேரத்தில் பிரேக் பிடித்து அவரால் லாரியை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக லாரியின் பின் பகுதியில் கார் மோதியது.

இது ஓரளவிற்கு குறைவான வேகத்தில் நடந்த விபத்து என்பதால், நல்ல வேலையாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து விட்டால் நமது கவனம் முழுக்க முழுக்க சாலையில்தான் இருக்க வேண்டும். கவனம் சிதறினால் இப்படிதான் நடக்கும்.
அதிலும் குறிப்பாக மழை பெய்யும் சமயங்களில் சாலைகள் மிகவும் ஈரமாக இருக்கும். அப்போது உங்கள் கவனம் சிதறினால், விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கவனம் சிதறிவிட்டால், காரை நிறுத்த வேண்டிய இடத்தில் உங்களால் நிறுத்த முடியாமல் போகலாம். பிரேக் பிடிக்க உங்களுக்கு போதிய கால அவகாசம் இருக்காது என்பதுதான் இதற்கு காரணம்.
எனவே காரின் டிரைவர் இருக்கையில் அமர்கிறீர்கள் என்றால் எப்போதும் கூடுதல் கவனத்துடன் இருங்கள். அதுதான் உங்களுக்கும், உங்களை நம்பி உங்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் நல்லது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் அப்போதுதான் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
பொதுவாக வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கும்போது, சாலையில் மிகவும் விலை உயர்ந்த கார்களை பார்க்கும்போது நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவது இயல்பான ஒரு விஷயம்தான். இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரின் ஆரம்ப விலை கூட 1 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது போன்ற சமயங்களில் நாம் நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்துவது நல்லது. ஒருவேளை அரிதான கார்கள் சாலையில் நின்று கொண்டிருக்கிறது என்றால், வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பார்த்து ரசிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் எந்த ஒரு வாகனத்துடனும், குறிப்பாக மிகவும் விலை உயர்ந்த கார்களுடன் எப்போதும் ரேஸில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் விலை உயர்ந்த கார்களில் பாதுகாப்பு வசதிகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை எக்காரணத்தை கொண்டும் மறந்து விட வேண்டாம்.


Click it and Unblock the Notifications








