பாஸ்டேக்கில் இப்படி எல்லாம் கூட பணம் போகுமா? உறைந்து போன கார் ஓனர்... என்ன நடந்தது என தெரிந்தால் கோவப்படுவீங்க
கார் உரிமையாளர் ஒருவருக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஸ்டேக் பயனர் ஒருவருக்கு அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்று கிடைத்துள்ளது. அவரது பெயர் பிரசாந்த். மஹாராஷ்டிரா மாநிலம் டாஸ்வாடே டோல்கேட்டில், சுங்க கட்டணமாக 75 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி வந்தபோது அவர் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியும் அடைந்தார்.

அவரது கார் டாஸ்வாடே டோல்கேட்டை கடந்ததற்கு சுங்க கட்டணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இது தவறுதலாக நடந்து விட்டது என நினைத்த பிரசாந்த், உடனடியாக புகாரை பதிவு செய்தார். இங்கே மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் என்னவென்றால், அவர் ஒவ்வொரு முறை புகாரை பதிவு செய்தபோதும் அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் டோல்ஃப்ரீ புகார் பிரிவில் வழங்கப்பட்ட அறிவுரையின்படி, வாட்ஸ்அப் நம்பரில் அவர் புகார் அளித்தார். கோவிட்-19 இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளதால், முரளிநகரில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து மரிப்பாலம் பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மட்டுமே கடந்த சில மாதங்களாக அவர் காரை ஓட்டி கொண்டுள்ளார்.

வெளியிடங்களுக்கு எங்கும் அவர் செல்லவில்லை. அப்படியிருக்கும்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு டோல்கேட்டில், அவரது காருக்கு பாஸ்டேக் மூலம் ஏன் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக கேட்டபோது, விசாரணை நடத்துகிறோம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விசாகப்பட்டிணம் காவல் துறையினரின் கவனத்திற்கும் பிரசாந்த் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார். பிரசாந்த் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் பாஸ்டேக் வாங்கியுள்ளார். அப்போது முதலே அதனை அவர் பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்பாக இப்படிப்பட்ட பிரச்னைகளை அவர் சந்தித்தது கிடையாது. முதல் முறையாக இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.

மொத்தம் 4 முறை அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதன் மூலமாக மற்றவர்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறாது என்று நம்புவதாக பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்டேக் வினியோகம் செய்த ஐசிஐசிஐ வங்கியின் கவனத்திற்கும் இந்த சம்பவத்தை பிரசாந்த் கொண்டு சென்றுள்ளார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கி தரப்பில் அவருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டோல்கேட்களில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரசாந்திற்கு இத்தகைய நிகழ்வு நடைபெறுவது இதுதான் முதல் முறை என்றாலும், கடந்த காலங்களில் பலர் இந்த பிரச்னையை சந்தித்துள்ளனர்.

எங்கோ ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு வேறு ஒரு பகுதியில் பாஸ்டேக்கில் சுங்க கட்டணம் எடுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்கள் பாஸ்டேக் பயனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி உரிய நடவடிக்கை எடுத்து, இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பார்கள் என நம்பலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








