மஹிந்திரா காருக்குள் சிக்கி 2 பேர் பலி... கடுமையாக முயன்றும் வெளியே வர முடியாததற்கு காரணம் இதுதான்
மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்குள் சிக்கி 2 நெருங்கிய நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடுமையாக முயற்சி செய்தும் வெளியே வர முடியாதது ஏன்? என்பது தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பேய் மழை பெய்து வருகிறது. அங்கு இது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும் கூட, இம்முறை வரலாறு காணாத வகையில் மிக அதிகமாக மழை பொழிந்து கொண்டுள்ளது. இதனால் மும்பை நகரம்தான் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரை தற்போது பெரு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கன மழை காரணமாக மும்பையில் ரயில் மற்றும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க பேரிடர் மீட்பு குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த சூழலில் மும்பை நகரில் காரில் சென்ற 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள மலாடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் இர்பான் கான் (38), குல்சான் ஷேக் (40). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு (ஜூலை 1), மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் வீடு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர். இரவு சுமார் 11.30 மணியளவில், மலாடு பகுதியில் உள்ள சுரங்க பாதைக்கு அவர்களின் கார் வந்தது.

ஆனால் கன மழை காரணமாக சுரங்க பாதையில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. பொதுவாக மழை காலங்களில் சுரங்க பாதைகளில் வெள்ளம் சூழ்வது வழக்கம்தான். ஆனால் எவ்வளவு அடி ஆழத்திற்கு வெள்ளம் சூழ்ந்து உள்ளது என்பதை அறியாமலே, இர்பான் கான், குல்சான் ஷேக் ஆகிய இருவரும் சுரங்க பாதைக்குள் நுழைந்து விட்டனர்.

இதனால் அவர்களின் கார் வெள்ளத்தில் சிக்கி கொண்டுள்ளது. அப்போது கார் கதவுகளை திறந்து வெளியே வர அவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியாததால், அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த இர்பான் கான் மற்றும் குல்சான் ஷேக் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது.

இன்ஜின் ஏர் இன்டேக் அமைப்பிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், இர்பான் கான், குல்சான் ஷேக் ஆகிய இருவரும் பயணம் செய்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ''ஹைட்ரோ-லாக்'' ஆகியுள்ளது. ஹைட்ரோ-லாக் ஆகி விட்டால், இன்ஜினை திறந்து Combustion சேம்பரில் உள்ள தண்ணீரை அகற்றாத வரை, காரை ரீ-ஸ்டார்ட் செய்ய முடியாது.

அதே சமயம் வெள்ள நீர் மிக அதிகமாக தேங்கியிருந்ததால், காரின் எலெக்ட்ரிக்கல் சிஸ்டமும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும். எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் செயலிழந்து விட்டால், காரின் ஜன்னல்களை ஆபரேட் செய்ய முடியாது. நவீன கால கார்களில் இடம்பெற்றிருக்கும் ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

காருக்குள் சிக்கி கொண்ட நண்பர்கள் இரண்டு பேரும் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் அது இயலாததால், அவர்கள் இருவரும் காருக்கு உள்ளேயே சிக்கி உயிரிழந்துள்ளனர். இப்படி ஒரு மோசமான சூழலில் இருந்து அவர்கள் இருவரும் தப்பித்திருக்க முடியுமா? என்ற கேள்வி தற்போது எழுகிறது.
இந்த கேள்விக்கு இதுதான் பதில். நிச்சயமாக தப்பித்திருக்க முடியும். கையில் சரியான கருவிகள் இருந்திருந்தால், அவர்கள் இருவரும் இதில் இருந்து நிச்சயம் தப்பித்திருக்கலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி நவீன கால கார்களின் ஜன்னல் கண்ணாடிகளை அவ்வளவு எளிதாக உடைத்து விட முடியாது. இது மிகவும் கடினமான காரியம்.

ஆனால் விண்டோ பிரேக்கர் (Window Breaker) இதனை மிக எளிதாக செய்து விடும். எனவே காரில் எப்போதும் சிறிய விண்டோ பிரேக்கரை வைத்து கொள்வது நல்லது. விண்டோ பிரேக்கர் என்பது ஆபத்தான சூழ்நிலைகளில் கார் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியேறுவதற்காக கண்டறியப்பட்டிருக்கும் ஒரு ஸ்பெஷல் டிவைஸ்.

விண்டோ பிரேக்கர் கண்ணாடியின் ஒரு சிறிய பகுதியின் மீது அனைத்து அழுத்தத்தையும் குவிக்கும். இதன் மூலம் கண்ணாடி எளிதாக உடைந்து விடும். மேற்கண்ட சம்பவம் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளில், விண்டோ பிரேக்கர் உங்களிடம் இருந்தால் ஜன்னல் கண்ணாடிகளை எளிதாக உடைத்து விட்டு நீங்கள் காரில் இருந்து வெளியேறி விடலாம்.

சில சமயங்களில் விபத்து நேர்ந்தால், காரின் கதவுகள் திடீரென 'ஜாம்' ஆகி விடும். அப்போதும் உங்களால் காரில் இருந்து வெளியேற முடியாது. அத்தகைய சமயங்களிலும் விண்டோ பிரேக்கர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதுதவிர அவசர கால சூழல்களில், ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க நீக்க கூடிய ஹெட்ரெஸ்ட்களும் (Removable Headrests) கூட நல்ல டிவைஸ்தான்.

பொதுவாக மழைக்காலங்களில் இன்ஜின் ஏர் இன்டேக் அமைப்பிற்குள் அடிக்கடி தண்ணீர் புகுந்து விடும். இதன் காரணமாக கார் ஹைட்ரோ-லாக் ஆகும் சம்பவங்களும் மழைக்காலங்களில் அடிக்கடி நடக்கும். ஹைட்ரோ-லாக் ஆகிவிட்டால், காரை மீண்டும் சரி செய்ய அதிக செலவு ஆகும். செலவுடன் நின்று விட்டால் கூட பரவாயில்லை.

மேற்கண்ட சம்பவம் போல் உயிரை பறித்து விடுவதற்கான அபாயமும் உள்ளது. எனவே மழைக்காலங்களில் காரில் பயணம் செய்யும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மழைக்காலங்களில் சாலையில் அதிக தண்ணீர் தேங்கி நிற்கும். அத்தகைய இடங்களை கடக்கும்போது கவனமாக இருப்பது நல்லது.

முடிந்தால் அந்த சாலையை தவிர்த்து விட்டு வேறு பாதையில் கூட பயணம் செய்யலாம். இல்லாவிட்டால் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) கொண்ட கார்கள் கூட அனைத்து நேரங்களிலும் உங்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றி விடும் என சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications








