ஆங்கிலேயரின் காவலில் இருந்து தப்பிக்க நேதாஜி பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் ஆடி!
ஆங்கிலேயரின் ஆட்சியின்போது வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மாறுவேடத்தில் தப்பிச் செல்ல பயன்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க காரை புதுப்பிக்கும் பணிகளை ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய ராணுவத்தை[INA] நிறுவி ஆங்கிலேயர்களை அதிர வைத்தார். இதையடுத்து, ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

இந்தநிலையில், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கு திட்டமிட்ட அவர் ஆங்கிலேயரின் கட்டுத்தளையிலிருந்து தப்பிக்க முடிவு செய்தார். அவரது மூத்த சகோதரரின் மகன் சிசர் போஸ் உதவியுடன், அவர் கொண்டு வந்த காரில் வீட்டிலிருந்து மாறுவேடத்தில் அங்கிருந்து தப்பினார்.

கொல்கத்தாவிலிருந்து தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள காமோ என்ற இடத்திற்கு நேதாஜி இந்த காரில்தான் தப்பிச் சென்றார். சிசர் போஸ்தான் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இதனை நேதாஜியின் 'Great Escape' என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த நிகழ்விற்கு நேதாஜிக்கு கருவியாக பயன்பட்ட BLA 7169 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவன் என்ற அவரது மூதாதையர் வீட்டு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. கடைசியாக இந்த கார் டாக்குமென்டரி படத்திற்காக 1971ம் ஆண்டு சிசர் போஸ் ஓட்டியிருக்கிறார்.

அதன்பிறகு இந்த கார் பயன்படுத்தப்படாமல், கண்ணாடி கூண்டில் வைத்து பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்த காரை புதுப்பிக்க, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட நேதாஜி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்தது.

வான்டெரர் பிராண்டின் செடான் ரக காரான அதனை புதுப்பிக்கும் பணிகளை, சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் ஏற்றுள்ளது. தற்போது அந்த காரை பழமை மாறா வண்ணம் புதுப்பிக்கும் பணிகளை ஆடி கார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றும் பணிகளும், புதிய வண்ணம் தீட்டும் பணிகளும் துவங்கியிருக்கின்றன. வரும் டிசம்பர் மாதத்தில் இந்த காரை புதுப்பிக்கும் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை புதுப்பித்து சில நூறு மீட்டர் தூரமாவது ஓடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக நேதாஜியின் உறவினர் சக்ரவர்த்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

நேதாஜி பயன்படுத்திய காரை தயாரித்த வான்டரெரர் நிறுவனம் ஜெர்மனியில் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது. 1896ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் சைக்கிள், மோட்டார்சைக்கிள், வேன் மற்றும் கார்களை தயாரித்தது.

நேதாஜி பயன்படுத்திய அந்த கார் வான்டெரர் W24 என்ற மாடலாகும். இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 42 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

4 பேர் பயணிப்பதற்கான வசதி கொண்ட இந்த கார் இரண்டு கதவுகள் மற்றும் 4 கதவுகள் கொண்ட மாடல்களில் விற்கப்பட்டது. நேதாஜி பயன்படுத்திய கார் 4 கதவுகள் கொண்டது. மொத்தம் 23,000 வான்டரெரர் W24 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த காரை நேதாஜியின் மூத்த சகோதரர் சரத் சந்திரபோஸ்தான் வாங்கினார். அதன்பிறகு அந்த காரை தனது மகன் சிசர் போஸிடம் தந்துவிட்டார். இந்த காரை 1955ம் ஆண்டு சிசர் போஸ் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- எளிய நடைமுறைகளுடன்ரி லையன்ஸ் கார் இன்ஸ்யூரன்ஸ்... !!
- அடிமாட்டு விலைக்கு ஏலம் போன மல்லையாவின் சொகுசு கார்கள்!
Photo Credit: Ashlyak/Wiki Commons and Wikipedia


Click it and Unblock the Notifications