கெத்துக்காட்ட நினைத்து போலீஸாரிடம் வசமாக சிக்கிய கார் உரிமையாளர்!! நம்பர் ப்ளேட்டில் மட்டும் கை வைக்காதீங்க!
உத்தரகாண்டில் சட்டத்திற்கு புறம்பான ஸ்டைலில் எண்ணை கொண்ட நம்பர் ப்ளேட்டை பயன்படுத்திவந்த வாகன ஓட்டி மீது போலீஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான புதிய வாகனங்கள் விற்பனையாகுகின்றன. அவை ஒவ்வொன்றையும் வேறுப்படுத்தி காட்டுவது, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், தனித்துவமாக அடையாளப்படுத்தி காட்டுவது நம்பர் ப்ளேட்களே ஆகும். ஆனால் இதனை வாகன ஓட்டிகள் பலர் உணர்வதே இல்லை என்பதே கசப்பான உண்மை.

நம்பர் ப்ளேட்டில் தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை ஒட்டுவது, மற்ற வாகனங்களில் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக பதிவெண்ணை ஸ்டைலாக மாற்றுவது என சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுப்படுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட ஒருவர் தான் உத்தரகாண்டில் போலீஸாரிடம் சமீபத்தில் சிக்கியுள்ளார். ரெனால்ட் கிகர் கார் உரிமையாளரான இவர் தனது காரின் நம்பர் ப்ளேட்களில் ‘4141' என்ற பதிவெண்ணை மேலே ஒரு கோடு சேர்த்து ‘पापा' என மாற்றியுள்ளார்.

ஹிந்தி மொழியில் இதன் அர்த்தம் தந்தை என்பதாகும். இத்தகைய நம்பர் ப்ளேட்டுடன் காரை சாலையில் கண்ட மற்றொரு வாகன ஓட்டி உடனே இந்த காரை பின்பக்கத்தில் இருந்து படம்பிடித்து, டுவிட்டரில் போலீஸாருக்கு புகாராக அனுப்பியுள்ளார். இதனை கண்ட போலீஸார் சம்மந்தப்பட்ட கார் பதிவெண்ணை கொண்டு உரிமையாளரை அடையாளம் கண்டு, அவரை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, நம்பர் ப்ளேட்டை மாற்றியதுடன் அபராதத்தையும் விதித்துள்ளனர்.

மேலும், இதனை உத்தரகாண்ட் போலீஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவும் செய்துள்ளனர். இந்த டுவிட்டர் பதிவில், "தனது மகன் பிரபலமாகுவான், ‘தந்தை' என பதிவு செய்யப்பட்ட நம்பர் ப்ளேட்டை அவன் பெறுவான் என அவரது தந்தை கூறியுள்ளார். ஆனால் இத்தகைய ப்ளேட்கள் அபராதத்திற்கு உள்ளாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை" என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், "டுவிட்டர் வாயிலாக புகார் பெறப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் போலீஸார் இந்த வாகன உரிமையாளரை சம்மந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திற்கு வரவழைத்து, நம்பர் ப்ளேட்டை மாற்றி, அபராதமும் விதித்துள்ளனர்" என மற்றொரு பதிவில் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளுக்கு நெட்டிசன்கள் தங்களது பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989இன் படி, ஒவ்வொரு வாகன பதிவெண்ணிலும் முதல் இரு எழுத்துகள் வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலம் (அ) யூனியம் பிரதேசத்தையும், அடுத்த இரு எழுத்துகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்தையும் குறிக்கின்றன. இவற்றை தொடர்ந்து 4 பதிவெண்கள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கே நன்கு தெரிந்தவை. நம்பர் ப்ளேட்டில் எழுத்துகள் & எண்கள் அனைத்தும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட எழுத்துருக்களில் இருத்தல் வேண்டும்.

நம்பர் ப்ளேட்டில் மாநிலம்/யூனியம் பிரதேசம் மற்றும் மாவட்டத்தை குறிக்கும் எழுத்துகளை மாற்ற இயலாது. ஆனால் பதிவெண்ணை வேண்டுமென்றால், முறையான அனுமதியுடன், கூடுதல் கட்டணத்தை செலுத்தி உரிமையாளர்கள் தங்களுக்கு பிடித்தவாறு பெற்று கொள்ளலாம். இதற்கு பல லட்சங்கள் வரையில் செலவாகக்கூடும். ஆனால் அப்போதும் கூட எண்ணை வேண்டுமாயின் மாற்றலாமே தவிர்த்து, எண்ணின் எழுத்துருவை மாற்றிக்கொள்ள இயலாது.

ஏனெனில் எளிமையான & தடிமனான பதிவெண்களையே எல்லாராலும் எளிமையாக உடனே அடையாளம் காண முடியும். அப்போதுதான் போக்குவரத்து விதிமுறைகளில் தவறு செய்பவர்களுக்கு உடனடியாக போலீஸாரால் தண்டனைகளை வழங்க முடியும். ஆதலால்தான் நம்பர் ப்ளேட் எந்தவொரு நாட்டிலும் அந்த அளவிற்கு முக்கியமானதாக உள்ளது. மேலும், நம்பர் ப்ளேட்டில் குளறுப்படிகளை செய்வோர்க்கு போலீஸார் மிக அதிகப்படியான அபராதத்தையும், தண்டனையையும் வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications








