தானியங்கி முறையில் கார் டெலிவிரி வழங்கும் பிரம்மாண்ட மையம் திறப்பு!
அமெரிக்காவில் தானியங்கி முறையில் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவிரி தரும் பிரம்மாண்ட மையம் ஒன்றை கார்வானா கார் விற்பனை தளம் திறந்துள்ளது.
இப்போது எல்லாமே எந்திரமயமாகிவிட்டது. பணம் வழங்குவது, பயண டிக்கெட் கொடுப்பது முதல் உணவுப் பொருட்களை வழங்குவது வரை இப்போது தானியங்கி எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கார்களை டெலிவிரி வழங்குவதற்கான தானியங்கி மையம் ஒன்று அமெரிக்காவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. டென்னிஸி நகரில் உள்ள நாஷ்வில்லே என்ற பகுதியில் இந்த டெலிவிரி தரும் தானியங்கி மையம் கார்வானா என்ற ஆன்லைன் கார் விற்பனை தளம் நிறுவியது.

இந்த நிலையில், இரண்டாவது கார் டெலிவிரி வழங்கும் எந்திரம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரில் இப்போது திறக்கப்பட்டு இருக்கிறது. முதல் கார் வழங்கும் மையத்தை விட இது மிக பிரம்மாண்டமானதாக இருக்கிறது.

டெலிவிரி கொடுக்கப்படுவதற்கான கார்களை நிறுத்துவதற்காக 8 தளங்களை கொண்ட கட்டடம் விசேஷ தானியங்கி கட்டமைப்புடன் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தானியங்கி கார் டெலிவிரி தரும் மையத்தில் ஒரேநேரத்தில் 30 கார்களை நிறுத்தி வைத்து டெலிவிரி கொடுக்க முடியும்.

ஆன்லைனில் கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாணயம் போன்ற வில்லை ஒன்று வழங்கப்படுகிறது. அதனை தானியங்கி கார் டெலிவிரி தரும் மையத்தில் உள்ள எந்திரத்தில் போட்டால் போதுமானது. உங்களுக்கு பிடித்தமான கார் அடுத்த சில நிமிடங்களில் உங்களுக்கு முன்னால் டெலிவிரிக்கு வந்துவிடுகிறது.

ஒரே நேரத்தில் 3 கார்களை டெலிவிரி கொடுக்கும் வசதி இந்த மையத்தில் உள்ளது. மேலும், 20 நிமிடங்களுக்குள் காரை வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெற்றுவிட முடியும்.

கார்வானா ஆன்லைன் தளத்தில் கார் முன்பதிவு செய்யும்போது, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கான வசதியும், கடன் திட்டத்தையும் தேர்வு செய்வதற்கான வசதிகள் உண்டு. அத்துடன், வீட்டிற்கே கார் டெலிவிரி பெறும் வசதியையும் கார்வானா தளம் அளிக்கிறது.

ஆனால், இந்த தானியங்கி கார் வழங்கும் எந்திரம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தையும், மறக்க முடியாத அனுபவத்தையும் வழங்கும் என்றால் மிகையில்லை. காரை விரைவாக டெலிவிரி பெறுவதற்கும் இந்த மையம் சிறப்பானதாக கருதப்படுகிறது.

உலக அளவில் இதுபோன்ற கார் டெலிவிரி வழங்கும் தானியங்கி மையங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியாவில் இப்போது வெர்ச்சுவல் ஷோரூம்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்து இந்த திட்டத்தை கார் நிறுவனங்கள் அல்லது ஆன்லைன் கார் விற்பனை தளங்கள் இந்த முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications








