அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதன்படி சாலை விபத்தில் காயம் அடையும் நபர்களுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்படியாக நடக்கும் சாலை விபத்துகளில் உயிர் பலிகளின் எண்ணிக்கையும் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு சாலையில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும், விபத்து ஏற்பட்டால் அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்படியாக சாலை விபத்துகளில் உயிர் பலி ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது விபத்து நடந்த உடன் உதவி கிடைக்காததும், அது மட்டுமல்லாமல் அருகில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை செய்ய வசதி இல்லாமல் அரசு மருத்துவமனையை நோக்கி அனைவரும் செல்லும் நேரம் தான் உயிர் பலி நடப்பதற்கான முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
விபத்து நடந்த அடுத்த ஒரு சில மணி நேரங்கள் மிக முக்கியமான நேரமாக பார்க்கப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் கோல்டன் ஹவர் என அழைக்கிறார்கள். இந்த கோல்டன் ஹவர் நேரத்திற்குள் தக்க உதவி கிடைத்தால் அந்த உயிரை காப்பாற்றி விட முடியும். அப்படியான நேரத்தை தவறி மருத்துவமனையை அடையும்போது, குறிப்பிட்ட நபர் உயிரிழப்பதற்கான அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் தற்போது மத்திய அரசு அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்கு வரும் நபர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள குடிமகன் யார் வேண்டுமானாலும் விபத்தில் சிக்கினால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள எந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் சரி, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அவரது உயிரைக் காப்பாற்றுவதே தலையான நோக்கமாகக் கொண்டு அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் விபத்தில் சிக்கியவரிடம் ஒரு பைசா கூட பணமாக வாங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உயிரை காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு மனிதருக்கும் தலா ரூபாய் 1.5 லட்சம் வரை செலவு செய்ய தற்போது அரசு தயாராக இருக்கிறது.

இப்படியாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்ற பின் அந்த சிகிச்சைக்கான செலவை அரசை ஏற்றுக்கொள்ளும். நேரடியாக மருத்துவமனைகள் அரசிடம் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து சிகிச்சைக்கான பணத்தை கிளைம் செய்து கொள்ள முடியும் என தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தற்போது சோதனை முயற்சியாக மட்டுமே இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இந்த திட்டம் சண்டிகர் பகுதியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் எப்படியாக இந்த திட்டம் பயன்படுகிறது என்பதை பார்த்து அதன் பின்னர் இது நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் விபத்தில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பெறப்பட்ட தரவுகளின் படி மொத்தம் 4.61 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1.68 லட்சம் உயிர்கள் பலியாகி உள்ளன. 4.43 லட்சம் பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் இனி விபத்துகளில் சிக்கும் மனிதர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்து, அவர்கள் உயிர் காப்பாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருப்பதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்களை குறைக்க பல்வேறு விதமான கட்டுமான வசதிகள், ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு ஆகியவை தேவை என்றாலும், தற்போது நடக்கும் விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்க வேண்டியது மிக முக்கியமான அவசியமாக இருக்கிறது. அதற்கு அரசு எடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்.


Click it and Unblock the Notifications









