சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை! ஒரு பைசா செலவில்லாமல் உயிரை காப்பாத்திடலாம்!
சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தற்போது மத்திய அரசு சோதனை முயற்சியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். இது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா முழுவதும் விரைவில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சாலை விபத்துகளில் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இது போக சாலை போக்குவரத்து விதிமுறையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இதன் மூலம் விபத்துக்கள், விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு வருகின்றன.

இதில் முக்கிய முயற்சியாக இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை தற்போது சண்டிகர் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதை மத்திய அரசு சோதனை முயற்சியாக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் சாலை விபத்தால் பாதிக்கப்படும் நபர்கள் எந்த சாலையில் விபத்து ஏற்பட்டாலும் அவர்கள் உடனடியாக இலவசமாக மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும். இதற்காக மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவர்கள் ரூ1.5 லட்சம் வரையில் மருத்துவ பலன்களை பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாலை விபத்து ஏற்பட்ட ஏழு நாட்களுக்குள் அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு தேசிய ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான பணத்தை மத்திய அரசு மோட்டார் வாகன விபத்து நிதியிலிருந்து வழங்குவதற்கான ஒப்புதலையும் வழங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெரும் நபர்கள் யார் யார் எவ்வளவு பணத்தை என்ன விதமான சிகிச்சைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என்ற விரிவான விபரங்களை ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன விபத்து நிதி குறித்த விதிமுறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்கான நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு மாநில அரசுடன் கைகோர்த்துள்ளது .அதன்படி மாநில அரசின் போலீசார் மற்றும் ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள மருத்துவமனைகள், மாநில சுகாதாரத்துறை மற்றும் தேசிய இன்பர்மேட்டிக் சென்டர் ஆகியவற்றுடன் இணைந்து ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலும் சேர்ந்து செயல்பட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி எந்த சாலையில் விபத்து நடந்திருந்தாலும் அதில் பாதிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஏற்படும் விபத்துகளில் மரணம் நடைபெறுவது குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. விபத்துகளில் சிக்கும் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை இல்லாமல் அல்லது பண வசதி இல்லாமல் உயிரிழக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அவர்களுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருக்கும் நிலையில் இது வெற்றிகரமாக திட்டமிட்டபடி நடந்தால் இது அடுத்தடுத்த மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சாலை விபத்துகளுக்கும் செல்லுபடியாகும் வகையில் விரிவுபடுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் மரணத்தை குறைப்பதற்காக இப்படியான முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான். இது குறித்த சரியான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









