ஒட்டுமொத்த போலீஸ் கண்ணிலும் விரல் விட்டு ஆட்டும் கொள்ளையன்... தீரன் படத்தையே மிஞ்சும் சம்பவம்! சிக்கினால் காலி
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட பாணியில் தற்போது நடைபெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் தற்போது அதிநவீன பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. எனவே முன்பு போல் அல்லாமல், கார்களை திருடுவது என்பது கொள்ளையர்களுக்கு சவாலான காரியமாக மாறியுள்ளது. எனினும் ஒரு சில கொள்ளையர்கள் ஏதாவது ஒரு வழியை கண்டறிந்து, கார்களை சாமர்த்தியமாக கொள்ளையடித்து விடுகின்றனர்.

இந்த சூழலில் சொகுசு கார்கள் பலவற்றை திருடியதாக குற்றம்சாட்டப்படும் ஒரு நபரை பிடிக்க முடியாமல் ஐதராபாத் காவல் துறையினர் தற்போது தடுமாறி வருகின்றனர். கடந்த ஜனவரி 26ம் தேதியன்று ஐதராபாத் நகரின் பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) பகுதியில் டொயோட்டா பார்ச்சூனர் கார் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டது.

இது கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மஞ்சுநாதாவிற்கு சொந்தமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கப்பட்ட காரின் பதிவு எண் KA 04 MX 1000 ஆகும். இந்த காரின் உரிமையாளர் பிரபலமான நபர் என்பதால், கொள்ளையடிக்கப்பட்ட கார் மற்றும் கொள்ளையனை கண்டுபிடிப்பதற்காக பஞ்சாரா ஹில்ஸ் காவல் துறையினர் தீவிரமாக முயன்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சத்யேந்திர சிங் ஷெகாவத் என காவல் துறையினர் குற்றம் சாட்டினர். இவர் பல்வேறு மாநிலங்களில் கார்களை கொள்ளையடித்து கைவரிசை காட்டியவர் என கூறப்படுகிறது. அதே சமயம் சத்யேந்திர சிங் ஷெகாவத், எம்பிஏ படித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆராய்ந்தனர். இதன்பின் சத்யேந்திர சிங் ஷெகாவத்தான் காரை கொள்ளையடித்தது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இவர் பிரபலமான கார் கொள்ளையன் ஆவார். கடந்த காலங்களில் டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர் சிக்கியுள்ளார்.

தற்போது இவர் ஜாமீனில் வெளிவந்திருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டிய நிலையில், ஐதராபாத் நகரிலும் கார்களை கொள்ளையடிக்க சத்யேந்திர சிங் ஷெகாவத் முடிவு செய்தார். ஐதராபாத் நகரில் பல்வேறு கார்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக பஞ்சாரா ஹில்ஸ் காவல் துறையினர் ராஜஸ்தான் சென்றனர்.

அப்போது சத்யேந்திர சிங் ஷெகாவத் காவல் துறையினரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. 'உங்களால் முடிந்தால் என்னை பிடித்து பாருங்கள்' என அவர் சவால் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 'நான் ராஜஸ்தானில்தான் இருக்கிறேன்' எனவும் சத்யேந்திர சிங் ஷெகாவத் கூறியதாக தெரிகிறது.

இதன்பின் சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் தந்தையை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் குற்ற செயல்களில், அவரது மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

ஆனால் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் இதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் மனைவியை விட்டு விட்டனர். இதற்கிடையே சத்யேந்திர சிங் ஷெகாவத்தை பிடிப்பதற்காக இன்னும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காவல் துறையினரும் முயன்று வருகின்றனர். இதன்படி ஐதராபாத்திற்கு அருகே உள்ள நாச்சாரம் காவல் துறையினரும் சமீபத்தில் ராஜஸ்தான் சென்றனர்.

சத்யேந்திர சிங் ஷெகாவத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். நாச்சாரம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் (Isuzu D-Max V-Cross) வாகனத்தை சத்யேந்திர சிங் ஷெகாவத் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை நாச்சாரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

எனவேதான் சத்யேந்திர சிங் ஷெகாவத்தை பிடிப்பதற்கு அவர்கள் ராஜஸ்தான் சென்றனர். சத்யேந்திர சிங் ஷெகாவத் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட கார்களை திருடியுள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் பதுங்கி அவர் செயல்படுகிறார்.

போதை பொருள் கடத்தல் கும்பல் மற்றும் பெண்களை கடத்தும் கும்பல்களுக்கு சத்யேந்திர சிங் ஷெகாவத் கார்களை விற்பனை செய்வதாக காவல் துறையினர் கருதுகின்றனர். சத்யேந்திர சிங் ஷெகாவத்தின் கொள்ளை சம்பவங்களும், அவரை பிடிக்க காவல் துறையினர் திணறும் சம்பவங்களும் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் உள்ளன.


Click it and Unblock the Notifications








