தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு இதுதான்! பெற்றோர் வயிற்றில் பால் வார்த்த நீதிபதிகள்
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவது கிடையாது. குறிப்பாக தமிழகத்தில்.

தமிழகத்தில் டூவீலர்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அரசால் அனைவரையும் ஹெல்மெட் அணிய வைக்க முடியவில்லை.

எனவே டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது, தமிழக அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றம் கடுமையான அதிருப்தி தெரிவித்தது.

கட்டாய ஹெல்மெட் விதியை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு மற்றும் காவல் துறை தவறி விட்டது என நீதிபதிகள் கூறினர். எனவே தமிழகத்தில் இனி கட்டாய ஹெல்மெட் விதியை மிக கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்க கூடியதுதான். இருந்தபோதும் சில வாகன ஓட்டிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாய ஹெல்மெட் விதி தொடர்பான உத்தரவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போது மற்றொரு அதிரடியான உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும், இது தொடர்பான உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்துவதை கட்டாயமாக்கி அதற்கான அறிவுறுத்தல்களை, அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு போக்குவரத்து கமிஷனருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் மணி குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

முன்னதாக இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இதில், பேருந்துகளில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துவதை கட்டாயமாக்கி அதற்கான அறிவுறுத்தல்களை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என முதன்மை பள்ளி கல்வி செயலாளர் மற்றும் போக்குவரத்து கமிஷனர் ஆகியோரிடம் பள்ளி கல்வி இயக்குனர் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அனைத்து நேரங்களிலும் நல்ல முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர பள்ளி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை மூலமாக பஸ்களின் இயக்கம் நெருக்கமாக கண்காணிப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். எனினும் இந்த உத்தரவை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யும். எனவே பெற்றோர்கள் மத்தியில் இந்த உத்தரவுகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








