சூப்பர்... இந்திய மக்களின் உயிரை காப்பாற்ற மோடி அரசு கொண்டு வரும் அதிரடி திட்டம்... என்னனு தெரியுமா?
இந்திய மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக, சூப்பரான திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

உலகில் சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்கள் அதிகமாக நிகழும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னணியில் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைப்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

கடும் எதிர்ப்புகளையும் மீறி, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம். தண்டனைகள் மிக கடுமையாக இல்லாததால், வாகன ஓட்டிகளிடம் காணப்படும் அலட்சியமே, சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹெல்மெட் அணியாமலும், குடிபோதையிலும், அதிவேகமாகவும் வாகனங்களை ஓட்டுபவர்களை இங்கு சர்வ சாதாரணமாக காண முடிகிறது. அத்தகைய நபர்களை கட்டுப்படுத்தும் விதமாக, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை, புதிய மோட்டார் வாகன சட்டத்தில் பல மடங்கு உயர்த்தி மத்திய அரசு அதிரடி காட்டியது.

இந்த வரிசையில், சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பணம் இல்லாமலேயே சிகிச்சை வழங்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2.50 லட்ச ரூபாய் வரை பணம் இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதன் மூலம் சாலை விபத்துக்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தனது சொந்த பங்களிப்பின் மூலம், மோட்டார் வாகன விபத்து நிதியை உருவாக்கவுள்ளது.

அதேசமயம் இந்த திட்டத்திற்காக ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனியின் (General Insurance Company-GIC) பங்களிப்பும் பெறப்படும் என கூறப்படுகிறது. இன்சூரன்ஸ் செய்யப்பட்ட வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துக்கள் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு ஆகும் செலவை, ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர 'ஹிட் அண்டு ரன்' சம்பவங்களால் ஆகும் செலவையும் ஜென்ரல் இன்சூரன்ஸ் கம்பெனிதான் ஏற்கும் என தெரிகிறது. அதேசமயம் இன்சூரன்ஸ் செய்யப்படாத வாகனங்களால் நிகழும் விபத்துக்கள் காரணமாக ஏற்படும் செலவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் ஏற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தற்போதைய நிலையில், சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. சாலை விபத்தில் பாதிப்படைந்த ஒருவருக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டால், அவரின் உயிர் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அது நடக்காததும், இங்கு சாலை விபத்துக்கள் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது. இப்படிப்பட்ட பிரச்னைகளை எல்லாம் மத்திய அரசின் இந்த புதிய திட்டம் களையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








