சுங்கச்சாவடி கட்டணத்தை ஏற்கனவே அதிகமா குறைச்சாச்சு... இதுல இந்த வசதி எல்லாம் கூட கிடைக்குமா?
இந்தியா உள்பட எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்க கூடிய முக்கியமான இடத்தில் நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தற்போது விரைவான போக்குவரத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு, அதற்கேற்ப பெயரும் விரைவுச்சாலைகள் என மாற்றப்பட்டுள்ளது. விரைவான போக்குவரத்தை பெற வேண்டுமெனில், அதற்கேற்ப சாலையும் தரமானவை ஆக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் விபத்து-இல்லா போக்குவரத்தை பெற முடியும். நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை தரமானவைகளாக அமைப்பதற்கும், புதியதாக வெவ்வேறு பகுதிகளில் அமைப்பதற்கும் நிறைய பணம் செலவாகும். மேலும், போடப்படும் சாலைகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பணம் தேவை. அதுவும், நம் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் பல லட்ச கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும்.
இந்த பணம் எல்லாம் எங்கிருந்து போகிறது? நம்மிடம் இருந்துதான் சுங்கச்சாவடி கட்டணமாக மத்திய அரசிடம் செல்கிறது. மாநில நெடுஞ்சாலைகள், நகர மற்றும் கிராமப்புற சாலைகளை எல்லாம் மாநில அரசு அமைப்பதால், அவை தனி. நெடுஞ்சாலைகள்/ விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை பராமரிப்பதற்கும் தேவையான பணத்தை சுங்கச்சாவடிகள் மூலம் பெற்றுவரும் மத்திய அரசு, இந்த கட்டண முறையில் மிக முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதுதான், ரூ.3000 ஃபாஸ்டேக் டோல் பாஸ் (FASTag Toll Pass) முறையாகும். சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று நேரத்தை வீணடிப்பதை குறைக்கும் விதமாக ஃபாஸ்டேக் திட்டம் சில வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது. தற்போது, புதிய ஃபாஸ்டேக் டோல் பாஸ் திட்டம் மூலமாக சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டியது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
நேரம் குறைப்பை விட முக்கியமாக, புதிய டோல் பாஸ் மூலமாக சுங்கச்சாவடி கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்படும் புதிய ஃபாஸ்டேக் டோல் பாஸ் மூலமாக சுங்கச்சாவடிகளில் வெறும் ரூ.15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. ஆனால் என்ன... தனித்தனியாக ரூ.15ஐ செலுத்தாமல், மொத்தமாக ரூ.3,000 ஆக செலுத்த வேண்டியிருக்கும்.

ரூ.3,000ஐ செலுத்தி ஃபாஸ்டேக் டோல் பாஸை பெற்றுவிட்டீர்கள் என்றால், 200 சுங்கச்சாவடிகளில் இலவசமாக பயணம் செய்யலாம். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாக்குமரியில் இருந்து சென்னை வரையில் 14 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 14 டோல் பூத்களை கார் அல்லது பயணிகளை ஏற்றி செல்லும் வேனில் கடந்து செல்ல ரூ.1,110 செலவாகிறது. அதுவே, புதிய ஃபாஸ்டேக் டோல் பாஸ் மூலமாக வெறும் ரூ.210 மட்டுமே செலவாகும்.
கனரக வாகனங்கள், பேருந்துகள் போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு டோல் பாஸ் முறை கிடையாது. இந்த புதிய டோல் பாஸின் மொத்த கால வரையறை 1 வருடம் ஆகும். அதாவது, 1 வருடத்தில் 200 சுங்கச்சாவடிகளை கடக்காவிட்டாலும் பாஸ் காலவதியாகி விடும். அதேநேரம், 200 சுங்கச்சாவடிகளை சில நாட்களிலேயே கடந்துவிட்டால், மேலும் ரூ.3,000 செலவு செய்து மீண்டும் டோல் பாஸை வாங்க வேண்டும்.

இந்த விபரங்களை எல்லாம் ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். ஆனால், இதில் வாகன ஓட்டிகளுக்கு குழப்பமாக இருந்த விஷயம் என்னவென்றால், ஓரிடத்திற்கு செல்லும்போது சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக்கை பதிவு செய்துவிட்டு செல்கிறோம் எனில், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது மீண்டும் அதே சுங்கச்சாவடியில் பதிவு செய்யும்போது அது ஓர் பயணம் என பதிவாகுமா அல்லது இரு பயணம் என பதிவாகுமா என்கிற கேள்வி எழ ஆரம்பித்தது.
எத்தனை முறை சுங்கச்சாவடியை கடந்து செல்கிறீர்கள் என்பதை பொறுத்து ஃபாஸ்டேக் கட்டண முறை அமைய போகிறது எனும்போது, இருமுறை பதிவாகும் என்றால் அது 200 என்கிற வரையறையை அதிகமாக குறைத்துவிடும். இதற்கு தற்போது பதில் அளித்து மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ஒரு சுங்கச்சாவடி வழியாக சென்று, பின்னர் மீண்டும் அதே வழியில் அதே சுங்கச்சாவடியை கடந்து சென்றால் அது ஓர் பயணம் என்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் இந்த அறிவிப்பால் குழப்பத்தில் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ஓரளவுக்கு தெளிவு கிடைத்துள்ளது என சொன்னாலும், எத்தனை மணிநேரம் அல்லது நாட்களுக்குள் திரும்பிவந்தால் மட்டுமே அது ஒரேயொரு பயணமாக கருதப்படும் என்கிற கேள்வி எழுகிறது. ஏனென்றால், ஒரு சிலர் பல மாதங்கள் கழித்தே திரும்புவர். இதற்கும் மத்திய அரசு தான் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









