மக்களை இதன் பக்கம் ஈர்க்க வேண்டுமாம்! இதற்காக மத்திய அரசு செய்ய இருக்கும் காரியம் - என்ன அது?
மின் வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் வகையில் ஓர் அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது என்ன தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க. வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களின் விற்பனை நிலையங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தளவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருந்திருந்தால் நாட்டில் எப்போதோ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

ஆமாங்க, தற்போது மின் வாகனங்களின் விற்பனை குழந்தை பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. இதற்கு, போதியளவில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணம் ஆகும். குறிப்பாக, சார்ஜிங் மையங்கள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லாதது மக்களை அதன் பக்கம் நோக்கி நகர்வதை பயனற்று என சிந்திக்க வைத்திருக்கின்றது.

எனவேதான் மின் வாகனங்கள் மீது ஆசை இருந்தாலும் அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால் அதனை வாங்க பலர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதில் தனியார் மற்றும் அரசுத்துறைகள் மிக அதிக தீவிரமாக இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுமார் 69,000 எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒரு இ-சார்ஜிங் கருவியை நிறுவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை நேற்று (திங்கள்கிழமை) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டிருந்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தகவலை அவர் கூறியிருந்தார். இந்த திட்டம் நாட்டில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் என நம்பப்படுகின்றது.

மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் மானியம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர் நிதின் கட்கரி, இதன்மூலம் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விலை 30 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் மிகவும் முக்கியமானது. எனவேதான் குறைந்தது ஒரு சார்ஜிங் கருவியையாவது ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் நிறுவ வேண்டும் என அரசு நினைக்கின்றது. இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 69 ஆயிரம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு மின்சார வாகன சார்ஜிங் கருவியைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கின்றது" என கூறினார்.

மேலும், "ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்டு ஆட்டோமொபைல் துறையை, பெட்ரோல் அல்லது எத்தனால் / சி.என்.ஜி ஆகிய எரிபொருள்களைப் பயன்படுத்தி இயங்கும் பன்முக திறன் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு" கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications








