வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மோடி அரசு அதிரடி திட்டம்... யாரெல்லாம் கட்டணும்? எவ்வளவு கட்டணும் தெரியுமா?
வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரியை (Green Tax) விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுபாட்டை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பசுமை வரி வெகு விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, எத்தனால், எல்பிஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு பசுமை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பசுமை வரி மூலமாக திரட்டப்படும் தொகை, சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை எதிர்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கும் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்னதாக, இந்த திட்டம் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அரசுகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 8 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய போக்குவரத்து வாகனங்களுக்கு, எஃப்சி (ஃபிட்னஸ் சர்டிபிகேட்) புதுப்பிக்கும்போது, சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம் பசுமை வரியாக விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய பசுமை வரி தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி பொதுமக்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஆர்சி எனப்படும் பதிவு சான்றிதழை (Registration Certificate) புதுப்பிக்கும்போது, பசுமை வரி விதிக்கப்படலாம். அதே சமயம் நகர பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பசுமை வரி குறைவாக இருக்கும்.

அதே நேரத்தில் அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50 சதவீதம்) விதிக்கப்படும். எரிபொருள் (பெட்ரோல், டீசல்) மற்றும் வாகனத்தின் வகை ஆகியவற்றை பொறுத்து, வசூல் செய்யப்படும் பசுமை வரியின் அளவு வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைப்ரிட் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, எத்தனால், எல்பிஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் மட்டுமல்லாது, விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர், ஹார்வெஸ்டர் மற்றும் டில்லர் போன்ற வாகனங்களுக்கும் இந்த பசுமை வரியில் இருந்து விலக்கு வழங்கப்படும்.

பசுமை வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் தனியாக ஒரு கணக்கில் பராமரிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையை எதிர்கொள்வதற்கு அந்த தொகை செலவிடப்படும். பசுமை வரி மூலமாக ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்கப்படுவதால், அந்த வாகனங்களை பயன்படுத்தும் ஆர்வம் மக்களிடம் குறையலாம். அதற்கு பதிலாக புதிய மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே பசுமை வரி மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில், எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








