டோல் கட்டணம் பாதி கட்டினால் போதுமா? என்னங்க இது... சூப்பரான மேட்டரா இருக்கே!!
சுங்கச்சாவடி கட்டணம் (Toll Fee) செலுத்துவதில் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பல தரப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எங்களது வரி பணத்தில் சாலையை அமைத்து, அதில் பயணிக்க எங்களிடமே கட்டணம் வசூலிக்கிறீர்களே என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. ஆனால், நாடு முழுவதும் நல்ல தரமான விரைவுச்சாலைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அவசியமாகின்றன என்பது அரசாங்கத்தின் பதிலாக உள்ளது. இருப்பினும், முடிந்தவரையில் குறைவான கட்டணங்களையும், குறைவான இடங்களில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவும் முயற்சிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறையின் தெரிவிக்கிறது.
அந்த வகையில் தற்போது ஒரு பிரமாதமான அறிவிப்பை சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, சுங்கச்சாவடி கட்டணத்தை பாதியாக 50% குறைத்துக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது சூப்பரான அறிவிப்பாச்சே என மிகவும் சந்தோஷப்பட வேண்டாம்; இந்த கட்டண குறைப்பானது எல்லா இடங்களுக்கும் கிடையாது.

பொதுவாக, இந்த கட்டணம் ஆனது சுங்கச்சாவடிகள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளன என்பதை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. அதேபோல், நெடுஞ்சாலை/ விரைவுச்சாலை அமைந்துள்ள பகுதியை பொறுத்தும் கட்டணங்கள் அமைகின்றன. பெரும்பாலும் சுங்கச்சாவடி கட்டணங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும்; ஆனால் சில பகுதிகளில் மட்டும் சிறிய வித்தியாசங்கள் இருக்கும்.
இந்த நிலையில், இனி சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் உயரத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணங்கள் பாதியாக குறைத்துக் கொள்ளப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நெடுஞ்சாலையின் குறிப்பிட்ட பகுதி சாலையின் நீளத்தில் சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் உயரத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை எவ்வளவு தூரத்திற்கு அமைந்து உள்ளன என்பதை பொறுத்து கட்டணம் குறைத்துக் கொள்ளப்பட்டு இனி வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதன் மூலமாக, அத்தகைய பகுதிகளில் சுங்கச்சாவடி கட்டணம் ஆனது தற்போது இருப்பதை விட 50% வரையில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள்/ விரைவுச்சாலைகளில் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிப்பதற்கான வழிமுறைகளை கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வரையறை செய்தது. அந்த வழிமுறைகளில் தற்போது மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் மேலே உயர்த்தப்பட்ட சாலைகளை அமைப்பதற்கு கூடுதலாக செலவாகும். இதற்காக கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலிக்காமல், வழக்கத்தை விட கட்டணத்தை மத்திய அரசு குறைத்துக் கொண்டுள்ளது. இது உண்மையில் மிகவும் ஆச்சிரியமான விஷயமாகும்.
சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் மேலே உயர்த்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை கட்டுமான துறையின் சிறப்பம்சங்களாக விளங்கினாலும் உண்மையில் அவை பயணத்தை நேரத்தை சில நிமிடங்களுக்கு தாமதப்படுத்துகின்றன. இதனால் சுங்கச்சாவடி கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது, சுரங்கப்பாதைகள், பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் மேலே உயர்த்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றால் அவற்றை பயன்படுத்தாத வாகன ஓட்டிகள் சந்திக்கும் அலைச்சல்களுக்காக இந்த கட்டணம் குறைக்கப்பட்டு இருக்கலாம்.
Source: Mint (https://www.livemint.com/)
Translated and published for our readers in Tamil.


Click it and Unblock the Notifications









