தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலங்களை எளிதாக கையகப்படுத்த ஸ்கெட்ச் போடும் மத்திய அரசு..
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் வழங்க மறுப்பு தெரிவித்து, பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் வழங்க மறுப்பு தெரிவித்து, பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நிலங்களை எளிதாக கையகப்படுத்த வசதியாக, சில நிபந்தனைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சேலம்-சென்னை இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இயற்கை வளங்களை அழித்து, இந்த சாலை அமைக்கப்படுவதாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பரவலாக புகார் எழுந்தது.

எனவே 8 வழி பசுமை சாலை அமையவுள்ள, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், தீவிரமான போராட்டங்கள் வெடித்தன. அத்துடன் இந்த திட்டத்திற்கு நிலம் வழங்க, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் திட்டமிடப்பட்டுள்ள இதர தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

இன்றைய தேதியில், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, நாடு முழுவதும் மொத்தம் 23 தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் தாமதமாகி வருகின்றன. எந்த ஒரு திட்டம் என்றாலும், நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டும், சராசரியாக ஒன்றரை வருடங்கள் பிடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்துவதை எளிதாக்கும் வகையில், புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''சாலை அமைக்க, பாலம் கட்ட என எந்த ஒரு திட்டம் என்றாலும், அதற்கான நிலத்தை கையகப்படுத்துவதற்கே சுமார் ஒன்றரை வருடங்கள் ஓடி விடுகிறது. தமிழகத்தில் கூட எங்களால் எளிதாக நிலத்தை கையகப்படுத்த முடிகிறது.

தமிழகம் தவிர, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும், நிலம் கையகப்படுத்துவதில் பெரிதாக பிரச்னைகள் எழுவதில்லை. ஆனால் பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலம் கையகப்படுத்துவதில், கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

விவசாய நிலங்கள் என்றால், மார்க்கெட் விலையை விட 4 மடங்கு அதிகப்படியான தொகை தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் நிலங்களை கையகப்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகளை தொடர்ச்சியாக சந்தித்து கொண்டிருக்கிறோம்.

எனவே அறுவடை காலத்திற்கு முன்னதாக விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். இதுதவிர நிலங்களை கையகப்படுத்துவதில் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில நிபந்தனைகளை தளர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள், விவசாயிகளின் போராட்டங்கள் வடிவில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என உறுதியாக நம்புகிறோம். இதன்மூலம் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த முடியும்'' என்றார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் (National Highways Authority of India-NHAI), அதிக அளவிலான நிலங்களை கையகப்படுத்தும் நிறுவனம். இந்நிறுவனம் ஓராண்டுக்கு சராசரியாக 10,000 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறது. இதற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








