20 வருஷம் பழைய காரை கூட பயன்படுத்தலாமா? மத்திய அரசு என்ன சொல்லுது? இந்த மாற்றத்தை சுத்தமா எதிர்பார்க்கல!!
சாலைகளில் பழைய வாகனங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் நம் இந்திய அரசு கவனமாக உள்ளது. இதன் எதிரொலியாகவே, குறிப்பிட்ட வயதை எட்டிய பழைய வாகனங்களை முறையாக அழிக்க வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், பழைய வாகனங்களில் இருந்துதான் புகை அதிகமாக வெளிவருவதாக மத்திய அரசு சார்பில் கூறப்படுகிறது. இதற்காகவே, வாகன அழிப்பு கொள்கை சில வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியென்றால், புதிய வாகனங்களில் இருந்து புகை வெளிவருவது இல்லையா? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.
இதனை யோசித்து பார்த்த மத்திய அரசாங்கம் வாகன அழிப்பு கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவர தயாராகி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, வாகனத்தின் வயதை கருத்தில் கொள்ளாமல், வாகனத்தில் இருந்து வெளிவரும் புகையின் அளவை கருத்தில் கொள்வது என மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகளவில் அதிக காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுள் ஒன்றாக இருப்பது, வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்கள் ஆகும். கடந்த 20 வருடங்களில் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றாலும், வாகனங்களின் கார்பன் உமிழ்வை முற்றிலுமாக பூஜ்ஜியமாக கொண்டுவர வேண்டும் என்பது பல நாட்டு அரசாங்கங்களின் விருப்பமாக உள்ளது.
ஏனெனில், கார்பன் உமிழ்வுகள் உலக வெப்பமயமாதல் வரையில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவை கட்டுப்படுத்த பிஎஸ் (BS - Bharat Stage) விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் அமலில் இருப்பது பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் ஆகும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் புகையை வெளியிடும் வாகனங்களுக்கு விற்பனைக்கான அனுமதியை பிஎஸ் விதிமுறைகள் தடை செய்கின்றன.

இருப்பினும், இது போதாது என எண்ணிய இந்திய அரசாங்கம் சில வருடங்களுக்கு முன் வாகன அழிப்பு கொள்கையை அறிமுகம் செய்தது. அதாவது, குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் முறையாக அழித்துவிட வேண்டும் என்பதுதான் இந்த கொள்கையின் சாரம்சம் ஆகும். இதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதமான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டன.
அதாவது, கார் போன்ற பிரைவேட் வாகனங்கள் என்றால் 20 வருடங்கள் வரையில் பயன்படுத்தலாம், அதுவே லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் என்றால் 15 வருடங்கள் வரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அவை ஆகும். வாகன அழிப்பு கொள்கை தற்போதைக்கு ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது.
அதாவது, இந்த கொள்கையை இன்னும் நாடு முழுவதும் மத்திய அரசு கட்டாயமாக்கவில்லை. இந்த நிலையில், வாகன அழிப்பு கொள்கையில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக தற்போது நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, தற்போதைய கொள்கையின்படி, 15 வருடங்களுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிப்பதற்கு முன் உடற்கூறு சோதனை மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அங்கு மேற்கொள்ளப்படும் சோதனைகளில் தேர்ச்சி பெறும் வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்; அதேநேரம் தோல்வியடையும் வாகனங்கள் அழிப்பதற்காக ஸ்க்ராப்பிங் சென்டருக்கு அனுப்பப்படும். இந்த செயல்முறையில் மாற்றத்தை கொண்டுவரும் மத்திய அரசு, வாகனங்களின் வயதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்து உள்ளதாம்.
இதனால், வாகன மாசு உமிழ்வு சோதனைகள் மேலும் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் விரும்புகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களின் கூட்டமைப்பு உடனான கலந்துரையாடலின் போது இதற்கான உதவியை ஆட்டோமொபைல் துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன அழிப்பு கொள்கையின் அடிப்படை நோக்கம் பழைய வாகனங்களை அழிப்பது கிடையாது; வாகனங்களில் இருந்து வெளிவரும் காற்று மாசுவை குறைப்பதாகும். பழைய வாகனங்களினால் தான் அதிக காற்று மாசு ஏற்படுவதாக புள்ளி விபரங்களின் மூலம் மத்திய அரசு நம்பிக் கொண்டிருக்கிறது. வாகனங்களின் வயதை காட்டிலும், வாகனங்களில் இருந்து வரும் காற்று மாசுவை அடிப்படையாக கொண்டு வாகன அழிப்பு கொள்கை செயல்பட்டால், இந்த கொள்கையை கொண்டுவந்ததற்கான முக்கியமான இலக்கை மத்திய அரசு அடையலாம்.


Click it and Unblock the Notifications









