எலெக்டரிக் வாகன விவகாரத்தில் அதிரடி முடிவு எடுக்கப்போகும் மத்திய அரசு... இனி வாகன தயாரிப்பாளர்களுக்கு ஆப்பு!
இந்தியாவில் தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எரிந்ததற்குத் தரமில்லாத பேட்டரிகளை பயன்படுத்தியது தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளுக்கு BIS தரச்சான்றைக் கட்டாயமாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது குறித்து விபரமாகக் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் தொடர்ந்து நடந்த வரும் பிரச்சனை என்றால் அது எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது தான். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல இடங்களில் எலெட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எரியும் சம்பவம் நடந்துவருகிறது. இதையடுத்து மத்திய அரசு இது குறித்து விசாரிக்க கமிட்டிகளை அமைத்தது. ஒரு நிறுவனம் மட்டுமல்ல பல நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிசையாக தீ பிடித்து எரிந்ததால் இதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என அறிந்து அதற்கான விசாரணையைத் துவங்கியது.

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர். ராணுவத் தளவாடங்களைச் செய்யும் டிஆர்டிஓவின் உதவியை இந்த விஷயத்தில் நாடியது. டிஆர்டிஓவின் ஒரு குழுவும் எரிந்த எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் குறித்து ஆய்வுகளை நடத்தத் துவங்கியது. இது போக மத்திய அரசும் தனியாக கமிட்டி ஒன்றை அமைத்து இது குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ஒரே ஒரு விஷயம் தெளிவாகத் தெரியவந்தது.

தீப்பற்றி எரிந்த எல்லா ஸ்கூட்டர்களும் பேட்டரி பிரச்சனை காரணமாகவே தீப்பற்றி எரிந்துள்ளது. அதன் பின் ஸ்கூட்டர்களுக்கு வழங்கப்பட்டும் பேட்டரி குறித்து டிஆர்டிஓ ஆய்வு நடத்தியது. அதில் பேட்டரிகளின் அமைப்பு மற்றும் தரம் குறைவாக இருக்கிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் ஓகினாவா, ப்யூர் இவி, ஜித்தேந்திரா எலெக்டரிக் வாகனங்கள், ஓலா எலெக்ட்ரிக், பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறைவான தரம் கொண்ட பேட்டரிகளை தங்கள் வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தரமான பேட்டரிகளை பொருத்தினால் வாகனத்தின் விலை அதிகரிக்கும் என நினைத்துக் குறைந்த தரம் கொண்ட பேட்டரிகளை வாகனங்களில் அவர்கள் பொருத்தி வாகனத்தின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்வினையாக தற்போது எலெக்டரிக் பைக்குகள் தீ பிடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த தகவல்களை டிஆர்டிஓ அறிக்கையாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

தற்போது இந்த ஆய்வின் அடிப்படையில் இது குறித்து விளக்கம் கேட்டு போக்குவரத்துத் துறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. முன்னதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ப்பூர் இவி மற்றும் பூம் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எலெக்டரிக் ஸ்கூட்டர் எரிந்தது குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில் தரமற்ற பேட்டரிகளை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருவதால் இதைத் தடுக்க அரசு வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கான ஓழுங்கு கடைப்பிடிக்கும் விதிமுறைகளை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களில் BIS தரச்சான்று பெற்ற பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வரத் தயாராகி வருகிறது.

இதற்காக பேட்டரிகளுக்கு BIS தரச்சான்று வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசின் நிதி அயோக் அமைப்பு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி பேட்டரியின் சைஸ், கனெக்டர், செயல் திறன், பேட்டரியில் பயன்படுத்தப்படும் செல்களின் எண்ணிக்கை மற்றும் அளவு, பேட்டரியின் கொள்ளளவு ஆகியவை இந்த தரச்சான்றின் கீழ் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

மேலும் இந்தியாவில் எதிர்காலத்தில் பேட்டரி ஸ்வாப்பிங் என்பது மிகப்பெரிய விஷயமாக மாறி வரும் என்பதால் தற்போதே பேட்டரி ஸ்வாப்பிங் செய்யும் போது பின்பற்ற வேண்டிய விஷயம் குறித்தும் நடவடிக்கை குறித்தும் BIS தரச்சான்று வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது கொண்டு வரப்படும் பேட்டரிகளுக்கான கட்டுப்பாடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமல்ல எலெக்டரிக் கார்களுக்கும் பொருந்தும். எதிர்காலத்தில் இந்த பேட்டரிகளில் நடக்கும் விபத்துக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. இப்படியான விதிமுறைகள் வந்தால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் விலை அதிகரிக்கும். இதனால் வாகனத்தின் விலையும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








