ஏர்பேக் ஒன்றின் விலை ரூ.800 தான்... கார்களில் ஏன் 6 வழங்க மாட்றீங்க? அமைச்சர் நிதின் கட்கரி கேள்வி!!
காற்றுப்பைகள் (Airbags) ஒன்றின் விலை வெறும் ரூ.800 ஆக உள்ள நிலையில், கார்களில் அவற்றை ஏன் 6 எண்ணிக்கையில் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குவதில்லை என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி காட்டமாக கேள்வியெழுப்பி உள்ளார்.

வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களின் நிலைகளை மேம்படுத்துவதில் மத்திய அரசாங்கம் தொடர்ந்து முனைப்புக்காட்டி வருகிறது. இதன்படி, முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை அனைத்து பயணிகள் கார்களிலும் நிலையான பாதுகாப்பு அம்சமாக கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றை தொடர்ந்து பக்கவாட்டு & ஜன்னல் கண்ணாடி ஏர்பேக்குகளையும் நிலையான அம்சங்களாக நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதாவது, 6 ஏர்ப்பேக்குகள் கட்டாயமாக அனைத்து பயணிகள் கார்களிலும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமாக மாறி வருகிறது.

6 ஏர்பேக்குகள் இந்தியாவில் விற்பனையில் உள்ள சில கார்களில் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை சற்று விலைமிக்க கார்களாகும். காற்றுப்பைகள் அதிகம் வழங்குவது காரின் விலையை அதிகரிக்கும் என்று வாடிக்கையாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் அது அவ்வாறு இல்லை... சந்தையில் தற்சமயம் ஒரு ஏர்பேக்கின் விலை ரூ.800 மட்டுமே என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அனைத்து பயணிகள் கார்களிலும் பக்கவாட்டு & ஜன்னல் கண்ணாடி காற்றுப்பைகள் நிலையான தேர்வுகளாக கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை இன்னும் சில மாதங்களில் மத்திய அரசு அறிவிக்க உள்ளதை அறிய முடிகிறது.

டெல்லியில் ராஜ்ய சபையின் கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து பயணிகள் வானங்களிலும் முன்பக்கத்தில் இரு ஏர்பேக்குகளை அரசாங்கம் ஏற்கனவே கட்டாயமாக்கிவிட்டது. இருப்பினும், பின்பக்கத்தில் அமரும் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக பக்கவாட்டு & ஜன்னல் கண்ணாடி பகுதிகளில் ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் கொள்கையை அரசாங்கம் கொண்டுவருகிறது.

இது பயணிகள் கார்களில் கட்டாய ஏர்பேக்குகளின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிக்கும். இதுகுறித்து இறுதி அறிவிப்பை வெளியிடுவது குறித்த முடிவில் தற்போது மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது என கூறியுள்ளார். எங்களுக்கு தெரிந்தவரையில், சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்த புதிய விதிமுறையை வருகிற அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவரலாம்.

ஆனால் உண்மையில் இந்தியாவில் பயணிகள் கார்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது தயாரிப்பு வாகனங்களில் 6 காற்றுப்பைகளை நிலையான தேர்வுகளாக வழங்க ஆரம்பித்துவிட்டன. உதாரணத்திற்கு கியா நிறுவனம் அதன் சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களில் சில வேரியண்ட்களில் 6 காற்றுப்பைகளை நிலையான தேர்வாக வழங்க ஆரம்பித்துவிட்டது.

ஹூண்டாயும் விரைவில் தனது அதிக விற்பனை கார்களில் பக்கவாட்டு & ஜன்னல் கண்ணாடி காற்றுப்பைகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருந்து தென்கொரிய நிறுவனங்கள் 6 ஏர்பேக்குகள் என்ற கட்டுப்பாட்டிற்கு தயாராகிவிட்டன என்பது தெரிய வருகிறது. இவற்றை தொடர்ந்து மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் என உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயாராகிவிடும்.


Click it and Unblock the Notifications








