டிக்கெட் எடுக்காமல் பயணிப்போரின் பட்டியலில் மும்பை முதல் இடம்... கோடி கோடியா அபராத தொகையை வசூலிச்சிருக்காங்க!
இந்தியாவில் ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை முன்பைவிட இப்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேபோல், ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்போரின் எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொடும் அளவிற்கு அதிகரித்து காணப்படுகின்றது. இதுமாதிரியானோரிடம் இருந்து இந்தியன் ரயில்வேஸ் மிகப் பெரிய தொகையை அபராதமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகின் மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டதாக இந்தியன் ரயில்வேஸ் இருக்கின்றது. இதன் மத்திய ரயில்வே மண்டலம் (Central Railway Zone), நடந்து முடிந்த 2023-2024 ஆம் நிதியாண்டில் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து மிகப் பெரிய தொகையை அபராதமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

46.26 லட்சம் பேரிடம் இருந்து 265.97 கோடி ரூபாயை அது அபராதமாக வசூலித்து இருக்கின்றது. இதில் டிக்கெட் இல்லாதவர்கள் மட்டுமல்ல, உரிய அனுமதி இல்லாமல் அதிக லக்கேஜை ஏற்றி வந்தவர்களும் அடங்குவர். இதேபோல் பிளாட்பாரம் டிக்கெட் இல்லாமல் பயணித்தவர்களும் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மத்திய ரயில்வே மண்டலத்தில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த மண்டலத்தின்கீழ் ஐந்து டிவிஷன்கள் உள்ளன. இதேபோல், இந்தியன் ரயில்வேஸில் மத்திய ரயில்வேஸ் உடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 12 மண்டலங்கள் உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது.
கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, வடக்கு கிழக்கு ரயில்வே, வடக்கு எல்லை ரயில்வே, வடக்கு மேற்கு ரயில்வே, தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, மேற்கு ரயில்வே மற்றும் மேற்கு மத்திய ரயில்வே ஆகியவையே அவை ஆகும்.
மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் உள்ள டிவிஷன்கள், மும்பை, நாக்பூர், புசாவல், புனே மற்றும் ஷோலாப்பூர் ஆகியவை அவை ஆகும். இந்த ஐந்து பிரிவுகளில் மட்டுமே 46.26 லட்சம் பேர் உரிய பயண டிக்கெட் இல்லாமலும், அனுமதியில்லாமல் லக்கேஜ்களை கொண்டு சென்றதற்காகவும் சிக்கி இருக்கின்றனர் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இந்த அளவிற்கு அதிகப்படியானோர் சிக்கியதன் காரணத்தினால் இந்தியாவிலேயே அதிகம் டிக்கெட் இல்லாமல் பயணிப்போரைக் கொண்ட மண்டலமாக மத்திய ரயில்வேஸ் மாறியிருக்கின்றது. இந்த மத்திய ரயில்வேஸ் மண்டலத்தில் மும்பை டிவிஷன் முதல் இடத்தைப் பிடித்து இருக்கின்றது. 115.29 கோடி ரூபாய் அபராதத் தொகை மும்பை பிரிவில் வசூலிக்கப்பட்டு இருக்கின்றது.
இங்கு 20.56 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக புசாவல் பிரிவு இருக்கின்றது. 66.33 கோடி ரூபாய் இந்த பிரிவில் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 8.34 லட்சம் வழக்குகள் இங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, 5.70 லட்சம் வழக்குகள் மற்றும் 34.52 கோடி அபராதத் தொகையுடன் மூன்றாவது இடத்தில் நாக்பூர் பிரிவும், 5.44 லட்சம் வழக்குகள் மற்றும் 34.74 கோடி ரூபாய் அபராதத் தொகையுடன் நான்காவது இடத்தில் ஷோலாப்பூரும் உள்ளன. ஐந்தாவது இடத்தையே புனே பிரிவு பிடித்திருக்கின்றது. இங்கு ஒட்டுமொத்தமாக 2.47 லட்சம் வழக்குகளும், 20.96 கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சம்பவங்களை வைத்து, இந்தியன் ரயில்வேஸில் உரிய டிக்கெட் இல்லாமல் ரிசர்வ் கோச்சில்தான் இந்த விதிமீறல்வாதிகள் பயணிக்கிறார்கள் என நினைத்தால் இப்போது பலர் டிக்கெட்டே இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, மும்பை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ரயில்வே பிரிவில் அதிகப்படியானோர் சிக்கி இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








