இந்தியா வரும் டால்கோ ரயில்... மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கும்!!
புல்லட் ரயில் இயக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பான், சீனா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரயில் நிறுவனங்களும், அரசுகளும் இந்தியாவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை கைப்பற்ற போட்டி போட்டு வருகின்றன.
ஆனால், புல்லட் ரயில்களுக்கான பிரத்யேக தண்டவாள கட்டமைப்பு உருவாக்குவதற்கு பெரும் முதலீடு தேவைப்படுவதுடன், திட்டம் நிறைவடைவதற்கான கால அளவும் மிக அதிகமாக உள்ளது. இந்தநிலையில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் முற்றிலும் புதிய தீர்வை மத்திய அரசிடம் வழங்கியிருக்கிறது. அதாவது, இப்போதுள்ள ரயில் தண்டவாளங்களை பயன்படுத்தி அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை அளித்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சொந்த செலவில் சோதனை
ஆரம்ப கட்ட சோதனைகள் நடத்துவதற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க உள்ளது. டெல்லி- மும்பை இடையில் டால்கோ நிறுவனம் தனது சொந்த செலவிலும், பொறுப்பிலும் இந்த சோதனைகளை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த சோதனைகள் நடத்தப்பட உள்ளன.

பிரசித்தம்...
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டால்கோ நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்க உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு அதிவேக ரயில்களை தயாரித்து வழங்கியுள்ளது.

நவீன ரயில்பெட்டிகள்
டால்கோ ரயில்கள் பெட்டிகள் நவீன தொழில்நுட்பத்தில் மிக இலகுவானதாகவும், கட்டுறுதி கொண்டதாகவும் தயாரிக்கப்படுகிறது. எனவே, சாதாரண தண்டவாளங்களிலும் இயக்குவதற்கான தொழில்நுட்பம் கொண்டது.

தண்டவாள கட்டமைப்பு
தற்போதுள்ள தண்டவாளங்களிலேயே இந்த டால்கோ ரயில்களை இயக்க முடியும் என்பதே இதன் சிறப்பு. இதனால், பிரத்யேக தண்டவாள கட்டமைப்பு தேவைப்படாது. ஆனால், பக்கவாட்டில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.

முதலீடு குறையும்
புல்லட் ரயில் தண்டவாளங்களை அமைப்பதற்கு பல லட்சம் கோடி மதிப்பிலான பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், டால்கோ ரயில்களை தற்போதிருக்கும் தண்டவாளங்களிலேயே இயக்க முடியும் என்பதால் முதலீடு பெருமளவு குறையும்.

அதிகபட்ச வேகம்
தற்போது சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்கள் 130 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. ஆனால், டால்கோ ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ முதல் 250 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.

பயண நேரம்
சாதாரண ரயில்களின் பயண நேரத்தைவிட டால்கோ ரயில்களின் பயண நேரம் 30 சதவீதம் குறையும். உதாரணத்திற்கு டெல்லியிலிருந்து மும்பை நகருக்கான சராசரி பயண நேரம் 17 மணி நேரம் என்பது 12 மணி நேரமாக குறையும்.

விரைவில் சோதனை
இந்த ஆண்டு இறுதியில் தண்டவாளங்களில் டால்கோ நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களும் சோதனைகள் நடத்த உள்ளனர். மேலும், டால்கோ ரயில் பெட்டிகளும் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. அப்படி, சோதனைகள் வெற்றி பெறும் பட்சத்தில், நம் நாட்டு மக்களின் அதிவேக ரயில் கனவு அடுத்த அடுத்த சில ஆண்டுகளில் மெய்ப்படும் வாய்ப்பு இருக்கிறது.

புல்லட் ரயிலுக்கு மாற்று...
புல்லட் ரயில்கள் மணிக்கு 350 கிமீ வேகத்தில் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான கால அளவு மிக அதிகமாக இருக்கும். ஆனால், டால்கோ ரயில்கள் வேகத்தில் சற்றே குறைவாக இருந்தாலும், நம் நாட்டு தண்டவாளங்களில் விரைவில் பறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








