மாஸ் காட்டப்போகும் தமிழக அரசு... இன்னும் மூன்றே வாரங்களில் வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு இதுதான்...
தமிழக அரசு மாஸ் காட்ட தயாராகி வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை ஓரளவிற்கு குறைய தொடங்கியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய மைனஸே அதன் அதிகப்படியான விலைதான். ஆனால் மத்திய அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பியுள்ளது.

கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்கள் தவிர பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து முறையையும் மின்சார மயமாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் 66 நகரங்களுக்கு 5,065 எலெக்ட்ரிக் பஸ்களை மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் நேற்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டது.

இதில், தமிழக மக்களுக்கும் உற்சாகம் அளிக்க கூடிய அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆம், தமிழ் நாட்டிற்கு என மொத்தம் 525 எலெக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்கள் தலா 100 எலெக்ட்ரிக் பஸ்களை பெறவுள்ளன. அதே சமயம் ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் ஆகிய சிறு நகரங்களுக்கு தலா 50 எலெக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

எஞ்சிய 25 எலெக்ட்ரிக் பஸ்கள், ஃபேம் இந்தியா (FAME India-Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் நகருக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. நீளத்தை பொறுத்து இந்த எலெக்ட்ரிக் பஸ்களின் விலை வேறுபடுகிறது. அதாவது ஒரு எலெக்ட்ரிக் பேருந்தின் விலை சுமார் 1.5-2 கோடி ரூபாய் வரை வருகிறது.

இவற்றை கொள்முதல் செய்ய ஒவ்வொரு மின்சார பேருந்துக்கும் மத்திய அரசு சார்பில் சுமார் 55 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை அந்தந்த மாநில போக்குவரத்து கழகங்கள்தான் நிர்வகிக்கும். அவற்றின் மூலமாகவே இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்.

தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் தற்போது அவல நிலையில் உள்ளன. ஓட்டை, உடைசல் பஸ்களில் மக்கள் வேண்டா வெறுப்பாகதான் பயணித்து கொண்டுள்ளனர். ஆனால் சமீப காலமாக இந்த நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. முதல்வராக பொறுப்பேற்றது முதலே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அவ்வப்போது புதிய பஸ்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. ஏசி உள்பட பல்வேறு வசதிகளுடன் கூடிய எஸ்இடிசி பேருந்துகளின் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இவை பல்வேறு அதிநவீன வசதிகள் நிறைந்த தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், தமிழக மக்கள் மின்சார பஸ்களில் பயணம் செய்யும் காலமும் தற்போது கனிந்துள்ளது. இந்த முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ''நிச்சயமாக இது ஒரு திருப்புமுனை. தமிழக அரசு பஸ்களை நவீனப்படுத்தவும், மறுசீரமைப்பு செய்யவும் இது உதவும்'' என்றனர்.

இதனுடன் சேர்ந்து மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 525 மின்சார பேருந்துகள் தவிர, ஜெர்மன் நிதி உதவியுடன் மேலும் 300 எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தமும் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்னும் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 எலெக்ட்ரிக் பஸ்கள் இம்மாதத்திற்குள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவான்மியூர்-சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோயம்பேடு-பிராட்வே ஆகிய இரண்டு வழித்தடங்களில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான அசோக் லேலண்ட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த பேருந்துகளை எம்டிசி எனப்படும் பெருநகர போக்குவரத்து கழகம் (MTC - Metropolitan Transport Corporation) நிர்வகிக்கவுள்ளது. இனி நமது ஊரிலும் நவீன எலெக்ட்ரிக் பஸ்களை பார்க்க முடியும் என்பதால், தமிழக மக்கள் மத்தியில் இந்த செய்திகள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








