9 பேருடன் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் மின்சார விமானம் வெற்றிகரமாக பறந்தது
உலகின் முழுமையான முதல் மின்சார விமானம் வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. மின்சாரத்தில் இயங்கும் இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விமானங்கள் வெளியிடும் புகை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அபாயங்களை மனதில் வைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் போக்கு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.ஆனால், வாகனங்களை போல விமானங்களை பேட்டரியில் இயங்க வைப்பதில் பல்வேறு சிக்கல்களும், பாதுகாப்புப் பிரச்னைகளும் இருக்கின்றன. எனவே, மின்சாரத்தில் இயங்கும் விமானங்களை தயாரிப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளன.

இந்த சவால்களை தவிடுபொடியாக்கும் முயற்சிகளில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான மின்சார விமானத் தயாரிப்பு திட்டங்கள் ஆராய்ச்சி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலையில், மின்சார விமானங்களுக்கான மின் மோட்டார் தயாரிப்பில் சிறந்து விளக்கும் மேக்னி-எக்ஸ் நிறுவனமும், ஏரோ-டெக் நிறுவனமும் இணைந்து புதிய மின்சார விமானத்தை உருவாக்கி இருக்கின்றன.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

முதல்முறையாக இந்த விமானத்தை பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள மோசஸ் லேக் பகுதியில் வைத்து இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.

அப்போது இந்த மின்சார விமானம் எந்த பிரச்னையும் இல்லாமல் 30 நிமிடங்கள் பறந்து அசத்தியது. செஸ்னா கேரவன் விமானத்தை பயன்படுத்தி இந்த மின்சார விமானத்தை மேக்னி-எக்ஸ் மற்றும் ஏரோடெக் நிறுவனங்கள் உருவாக்கி இருக்கின்றன.

செஸ்னா கேரவன் விமானத்தில் எஞ்சின், பெட்ரோல் டேங்க் உள்ளிட்டவற்றை எடுத்துவிட்டு பேட்டரி மற்றும் மின்மோட்டார்களை பொறுத்தி இந்த விமானத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

மேலும், தற்போதைய நிலையில், உலகின் பெரிய மின்சார விமானமாகவும் இது தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்த விமானத்தில் 9 பேர் பயணிக்கும் வாய்ப்பை தரும். ஆனால், நேற்று முதல்முறையாக பறந்தபோது விமானி ஒருவர் மட்டுமே இந்த விமனத்தை இயக்கினார். ஏரோடெக் நிறுவனத்தின் டெஸ்ட் பைலட் ஸ்டீவ் க்ரேன் இந்த விமானத்தை 2,500 அடி உயரம் வரை கொண்டு சென்று பறக்கவிட்டு சோதனை செய்தார்.

செஸ்னா மேக்னி-எக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மின்சார விமானம் மணிக்கு 290 கிமீ வேகத்தை தொட்டு அசத்தி இருக்கிறது. மேலும், 183 கிமீ என்ற சீரான வேகத்தில் தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.

இந்த விமானத்தில் உள்ள பேட்டரித் தொகுப்பை முழுமையாக சார்ஜ் செய்தால், 160 கிமீ தூரம் வரை பயணிக்கும். அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியில் சந்தைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது நிச்சயம் கோடீஸ்வர வாடிக்கையாளர்களையும், சுற்றுலாத் துறையினரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், விமானப் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை குறைப்பதற்கான முதல்படியாகவும் அமையும்.


Click it and Unblock the Notifications








