சூப்பர் வசதி... இனி அரசு பஸ்ஸில்தான் போவேன்னு ஒத்த காலில் நிப்பீங்க... வேற லெவலுக்கு மாறிய தமிழகம்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஒரு வசதி காரணமாக, அரசு பஸ்களில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டும் சூழல் உருவாகியுள்ளது.

சென்னை மாநகருக்கு புதிதாக வருபவர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய தடுமாறுவது வாடிக்கைதான். புதிய இடம் என்பதால், எம்டிசி (Metropolitan Transport Corporation-MTC) பஸ்களில் பயணம் செய்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. வெளியூர் ஆட்கள் மட்டுமல்லாது, சென்னைவாசிகளே கூட சில சமயங்களில் தடுமாறி விடுகின்றனர்.

இதனால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக தற்போது சலோ (Chalo) என்ற செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அசத்தலாக இருப்பது உங்களுக்கு நிச்சயம் பலன் தரும். சலோ ஆப்பின் உதவியுடன் இனி எம்டிசி பஸ்களை செல்போனிலேயே டிராக் செய்து கொள்ள முடியும்.

அதாவது ஓலா, உபேர் டாக்ஸிகளை டிராக் செய்வது போன்று, சென்னை நகரில் இனி அரசு பேருந்துகளையும் சலோ ஆப் மூலம் டிராக் செய்யலாம். அருகில் உள்ள பஸ் ஸ்டாப்கள் குறித்த விபரங்களை இந்த ஆப் நமக்கு வழங்குகிறது. மேலும் அடுத்ததாக வரவுள்ள 5 எம்டிசி பஸ்கள் குறித்த விபரங்களையும் சலோ ஆப் மூலம் பெறலாம்.

அத்துடன் குறிப்பிட்ட வழித்தடங்களில், பஸ்களின் டைமிங்கையும் தேடி தெரிந்து கொள்ள முடியும். இதுதவிர குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள பஸ் ஸ்டாப்கள் குறித்த தகவல்களையும் சலோ ஆப் வழங்கும். இதற்கு 570 வழித்தடத்தை (கேளம்பாக்கம்-கோயம்பேடு சிஎம்பிடி) உதாரணமாக எடுத்து கொள்ளலாம். இந்த வழித்தடத்தில் உள்ள பஸ் ஸ்டாப்களின் பட்டியலை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சலோ ஆப்பின் லைவ் மேப் மூலம், குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் பஸ்கள் தற்போது சரியாக எங்கே உள்ளன? என்ற தகவலையும் நாம் பெறலாம். இதில், ஒரு பஸ்ஸை தேர்வு செய்தால், அந்த பஸ் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு எப்போது வரும்? என்ற தகவல் கிடைக்கும். இது ஜிபிஎஸ்ஸை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

சென்னையை பொறுத்தவரை மக்களிடம் காணப்படும் மற்றொரு பொதுவான குழப்பம் ரூட் எண்கள்தான். மதுரை, கோவையை போல் அல்லாமல், சென்னையில் 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே ரூட் நம்பர்களை நினைவில் வைத்து கொள்வது என்பது மிகவும் சவாலான காரியம்தான்.

ஆனால் இந்த பிரச்னைக்கும் கூட சலோ ஆப் தீர்வு சொல்கிறது. இரண்டு இடங்களுக்கு இடையேயான பஸ் எண்களின் பட்டியலையும் சலோ ஆப் மூலம் நாம் பெற முடியும். அதாவது நீங்கள் தி.நகரில் இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் நங்கநல்லூர் செல்ல வேண்டும். அப்படியானால் இதனை நீங்கள் சர்ச் பாக்ஸில் குறிப்பிட்டால், உடனடியாக உங்களுக்கு பதில் கிடைக்கும்.

129சி, 9எம், 79 மற்றும் 155ஏ ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன என்ற தகவலை சலோ ஆப் உங்களுக்கு தெரிவிக்கும். அத்துடன் இந்த பஸ்களில் சுமாராக கட்டணம் எவ்வளவு? என்ற தகவலையும் நீங்கள் பெறலாம். இதுகுறித்து போக்குவரத்து செயற்பாட்டளரான ரெங்காச்சாரி என்பவர் கூறுகையில், ''பஸ் தற்போது எங்கே உள்ளது? எப்போது வரும் என்ற தகவல்கள் கிடைத்து விடுகின்றன.

எனவே பேருந்தை விட்டுவிடுவோமோ? என்ற அச்சத்தில், பஸ் ஸ்டாப்களுக்கு அவசர அவசரமாக ஓட தேவை இல்லை. அதேபோல் பஸ் ஸ்டாப்களில் நீண்ட நேரம் காத்திருக்கவும் வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கணக்கிட்டு கொண்டு, அதற்கேற்ப வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து புறப்படலாம்'' என்றார்.

மொத்தம் 3,300 எம்டிசி பஸ்கள் உள்ளன. இதில், 90 சதவீதத்திற்கும் மேலான பஸ்களில் ஜிபிஎஸ் டிவைஸ்கள் பொருத்தப்பட்டு, இந்த ஆப்பின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, வெகு விரைவில் மற்ற பஸ்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதன் காரணமாக, கேப்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை காட்டிலும், இனி அரசு பேருந்துகளில் பயணிக்க பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








