தூங்கிக்கொண்டு இருந்த 12 வயது சிறுவனுடன் காரை டோயிங் வேனில் கட்டி இழுத்துச் சென்ற போலீசார்..!!
தூங்கிக்கொண்டு இருந்த 12 வயது சிறுவனுடன் காரை டோயிங் வேனில் கட்டி இழுத்த சென்ற போலீசார்..!!
12 வயது சிறுவன் உள்ளே இருக்கையில் காரை டோயிங் வேனுடன் கட்டி இழுத்த சென்ற காவலர்கள் இருவரை பணி இடைநீக்கம் செய்து சண்டிகர் நகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர் நகரில் செக்டர் 34-ம் பகுதியில் உள்ள அப்னி மண்டி என்ற இடத்திற்கு அருகே கார் ஒன்று பார்க் செய்யப்பட்டு நின்றுகொண்டு இருந்தது.

மோஹாலியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான அந்த காரில், அவரது 12 வயது மகன் தூங்கிக்கொண்டு இருந்தான்.

அப்னி மண்டி அருகே காரை பார்க் செய்துவிட்டு, தன் மனைவி உடன் ராஜேஷ் அருகிலிருக்கும் கடையில் காய்கறி வாங்க சென்றிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் இருவர் ராஜேஷின் காரை டோயிங் வேனுடன் கட்டி இழுத்து சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கார் திருடப்பட்டதாகவும், சிறுவன் ஒருவன் காருடன் கடத்தப்பட்டதாகவும், சண்டிகர் நகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

மேலும் கார் எண்ணை சரிப்பார்த்த போது, டோயிங் செய்யப்பட்டு இழுத்து வரப்பட்ட கார் தான் புகார் தெரிவிக்கப்பட்ட கார் என்பது தெரியவந்தது.

உடனே சண்டிகர் போலீசார் காரை பத்திரமாக ராஜேஷிடம் ஒப்படைத்தனர். அவர்களது மகனும் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டார்.
Recommended Video


இந்நிலையில் சண்டிகர் நகர காவல் துணை கண்காணிப்பாளர், ராஜீவ் குமார் அம்பாஸ்தா, 12 வயது சிறுவனுடன் காரை டோயிங் வேனுடன் இழுத்துக்கொண்டு வந்த காவலர்கள் சுபாஷ் மற்றும் ஜெகஷீரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பணியின் போது அலட்சியமாக இருந்ததாலும், பொதுமக்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாலும் காவலர்கள் இருவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராஜீவ் குமார் அம்பாஸ்தா கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவம் இனி சண்டிகர் பகுதியில் நடைபெறமால் இருக்கும் வண்ணம், காவலர்கள் சுபாஷ் மற்றும் ஜெகஷீர் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகரில் நடைபெற்ற இந்த சம்பவம் போலவே, மும்பை நகரில் கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை காரில் வைத்து போலீசார் டோயிங் வேனுடன் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும், அந்த பெண் மீது தான் தவறு என்பன போன்ற வீடியோக்கள் வெளியாகி, ஊடகங்களில் ஒளிப்பரப்பட்டு, அந்த செய்திக்கு மேலும் பரபரப்பைக் கூட்டின.

குறிப்பிட்ட இந்த சம்பவங்களின் மீது காவலர்கள் மீது அலட்சியம் காணப்பட்டாலும், நோ பார்க்கிங் பகுதியில் கார்களை பார்க் செய்து செல்லும் உரிமையாளர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

குறிப்பாக யாருமில்லாத பகுதியில் காரில் குழந்தையையோ அல்லது சிறுவர், சிறுமிகளையோ விட்டு செல்வது பாதுகாப்பான சூழலும் அல்ல.

பார்க்கிங் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட கார்களில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் பாதிக்கப்படும் செய்திகளை நாம் அதிகம் கடந்து வருகிறோம்.

குறிப்பாக கோடை காலங்களில் முழுவதுமாக மூடப்பட்டு, பார்க்கிங் செய்யப்படும் கார்களில் குழந்தைகள் பெரியளவில் உடல் உபாதைகளுக்கு ஆளாகுகின்றனர்.

மிக மிக ஆபத்தான இந்த செயலினை எந்தவொரு கார் உரிமையாளர்களும் செய்ய வேண்டாம் என்பதே எங்களது வேண்டுகோள்.
இடம், பொருள், சூழ்நிலையை அறிந்து எப்போதும் உங்களது குழந்தைகளை உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications