சந்திராயன்-2 தாமதமாவதற்கு காரணம் இதுதான்... கழற்றி விட்ட ரஷ்யாவுக்கு பாடம் புகட்ட இந்தியா ரெடி...
இந்தியாவின் சந்திராயன்-2 திட்டம் தாமதமாகி கொண்டே வருகிறது. இதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தையும், பெருமிதத்தையும் ஒருசேர ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation), நாளுக்கு நாள் பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டு வருகிறது. மிகவும் குறைந்த செலவில், இஸ்ரோ செயல்படுத்தும் வெற்றிகரமான திட்டங்கள் உலக நாடுகளை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகின்றன.

தற்போது பூமியின் துணை கோளான நிலவை ஆய்வு செய்யும் பணிகளில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திராயன்-1 செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏவப்பட்ட சந்திராயன்-1 செயற்கைகோள் நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்தது.

நிலவின் சுற்று வட்டப்பாதையில், சந்திராயன்-1 செயற்கைகோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியபோது, அனைத்து நாடுகளும், இஸ்ரோ மற்றும் இந்தியாவை ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தன. நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா நிகழ்த்திய மிகப்பெரிய சாதனையாக சந்திராயன்-1 திட்டம் கருதப்படுகிறது.

ஏனெனில் நிலவில் தண்ணீர் இருப்பதை, சந்திராயன்-1 செயற்கைகோள் கண்டறிந்தது. நிலவில் நீர் வழி தடங்கள் தெரிவதாக உலகிற்கு முதல் முறையாக எடுத்துரைத்தது இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைகோள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமும் கூட. ஏனெனில் உலகில் வேறு எந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், நிலவில் நீர் வழி தடங்கள் இருப்பதை கண்டறியவில்லை. சந்திராயன்-1 செயற்கைகோள் மூலமாக இந்தியாதான் அதனை முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தது.

உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்பான அமெரிக்காவின் நாசாவும் கூட இந்த கண்டுபிடிப்பை ஏற்றுக்கொண்டது. சந்திராயன்-1 திட்டத்திற்காக இந்தியா செலவிட்ட தொகை வெறும் 386 கோடி ரூபாய்கள் மட்டுமே.

உலக நாடுகள் ஆச்சரியம் அடைந்ததற்கு இதுவும் மிக முக்கியமான காரணம். ஏனெனில் வெறும் 386 கோடி ரூபாய் செலவில், நிலவை ஆராய்ச்சி செய்ய செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

சந்திராயன்-1 திட்டத்தினுடைய வெற்றியின் எதிரொலியால் இஸ்ரோ உற்சாகம் அடைந்தது. சந்திராயன்-1 செயற்கைகோள் நிலவை சுற்றி மட்டுமே வந்தது. எனவே நிலவில் இறங்கி, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் செயற்கைகோள் ஒன்றை மீண்டும் ஏவ இந்தியா முடிவு செய்தது.

இதற்காக இஸ்ரோ கையில் எடுத்துள்ள ஒரு திட்டம்தான் சந்திராயன்-2. சந்திராயன்-2 செயற்கைகோளுடன், தானாகவே இயங்கும் ரோபோ போன்ற லேண்ட் ரோவர் என்ற கருவியையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இது நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். நிலவில் களமிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம். இதனால் உலக அளவில் இதுவரை 3 நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன.

இந்த வகையில், நிலவில் விண்கலங்களை வெற்றிகரமாக தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை, சந்திராயன்-2 திட்டம் மூலமாக இந்தியா பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திராயன்-2 திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது.

அமெரிக்கா, சீனா உள்பட உலக நாடுகள் அனைத்தும் சந்திராயன்-2 திட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டுள்ளன. ஆனால் சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவுவது தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் அது தாமதமாகி, 2018 அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும் அப்போதும் சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படவில்லை.

இதுபோல் பலமுறை இலக்கு ஒத்திவைக்கப்பட்டு கொண்டே இருந்தது. இறுதியாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2019ம் ஆண்டின் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள்ளாக சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது.

ஆனால் ஜனவரி அல்லது பிப்ரவரிக்குள்ளாக, சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படாது என இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது அறிவித்துள்ளார். அதாவது வருகின்ற ஏப்ரல் மாத இறுதி வரை சந்திராயன்-2 கண்டிப்பாக விண்ணில் ஏவப்படாது.

அதன்பின்புதான் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும். உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் கவனித்து கொண்டிருக்கும் சந்திராயன்-2 செயற்கைகோள், அனேகமாக வரும் ஜூன் மாதத்தில்தான் விண்ணில் ஏவப்படும் என கூறப்படுகிறது.

சந்திராயன்-2 திட்டம் தாமதமாகி கொண்டே வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலில் எதிர்பார்ப்பு. உலகின் அனைத்து நாடுகளும் சந்திராயன்-2 திட்டத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதால், இதில் தோல்வியடைந்து விடக்கூடாது என இஸ்ரோ கருதுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, இஸ்ரோவின் 2 செயற்கைகோள் திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. அத்தகைய நிலை சந்திராயன்-2 திட்டத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என இஸ்ரோ விரும்புகிறது. எனவே ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து கொண்டுள்ளது இஸ்ரோ.

சந்திராயன்-2 செயற்கைகோளை விண்ணில் ஏவும் முன்பாக பல்வேறு பரிசோதனைகளை இஸ்ரோ செய்து வருகிறது. இதில், சில சோதனைகள் இன்னும் செய்யப்படவில்லை. இந்த சோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகுதான் சந்திராயன்-2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்.

முன்னதாக 2018ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், பல்வேறு விண்வெளி ஆய்வு திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தியது. சந்திராயன்-2 திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகள் தாமதமாகி கொண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இதுதவிர முதலில் சந்திராயன்-2 திட்டம் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில்தான் உருவாவதாக இருந்தது. அதாவது ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ராஸ்காம்ஸ், சந்திராயன்-2 செயற்கைகோளுடன் பயணிக்கும் லேண்ட் ரோவர் கருவியை வழங்குவதாக இருந்தது.

ஆனால் பின்னாளில் ராஸ்காம்ஸ் விலகி கொள்ள, லேண்ட் ரோவர் கருவியை இஸ்ரோவே சுயமாக தயார் செய்து வருகிறது. லேண்ட் ரோவர் மட்டுமல்லாது, சந்திராயன்-2 திட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள அனைத்து கருவிகளும், முழுக்க முழுக்க இந்தியாவில்தான் தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற காரணங்களால்தான் சந்திராயன்-2 திட்டம் தற்போது தாமதமாகி வருகிறது. அனேகமாக ஜூன் மாதத்திற்குள்ளாக சந்திராயன்-2 திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். அதுவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதியாக கூறியுள்ளனர்.

சந்திராயன்-2 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்த பிறகு, நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்படும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சந்திராயன்-1 திட்டத்தின் செயல் இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சிவனும் தமிழகத்தை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.
Note: Images for symbolic purpose only.
Image Courtesy: ISRO


Click it and Unblock the Notifications








