கவலைகொள்ளாதீர்கள்... சந்திராயன் 2 திட்டம் தோல்வியல்ல!
உலகமே ஆவலோடு எதிர்நோக்கி இருந்த சந்திராயன் 2 திட்டம் கடைசி நிமிடத்தில் சிறிய பின்னடவை சந்தித்துவிட்டது. இது இந்தியர்களின் மனதை நொறுங்கச் செய்தது என்றாலும், சந்திராயன் 2 திட்டத்தை தோல்வியாக கருத முடியாது. லேண்டர் இல்லாமலே பல்வேறு ஆராய்ச்சிகளை சந்திராயன்-2 ஆர்பிட்டர் மூலமாக மேற்கொள்ள இயலும்.

சிறப்பான செயல்பாடு
நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22ந் தேதி சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த இரு மாதங்களாக திட்டமிட்டப்படி அனைத்தும் சிறப்பாக இருந்தது. கடந்த மாதம் 20ந் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு திருப்பப்பட்டது. அப்போதும் கூட சிறப்பாகவே செயல்பட்டது.

வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட லேண்டர்
சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த 2ந் தேதி சந்திராயன்-2 ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் என்று பெயரிடப்பட்ட லேண்டர் சாதனம் தனியாக பிரிக்கப்பட்டது. இதுவும் மிகவும் வெற்றிகரமாகா நிகழ்ந்தது.

நிலவை நெருங்கிய லேண்டர்
இதையடுத்து, விக்ரம் என்ற அந்த சாதனத்தை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்குவதற்கான பணிகள் நடந்தன. இன்று அதிகாலை 1.50 மணிவாக்கில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க நேரம் குறிக்கப்பட்டது. விக்ரம் லேண்டரும் மிகச் சிறப்பாக நிர்ணயிக்கப்பட்ட பாதையில் நிலவின் மேற்பரப்பை நோக்கி இறங்கத் தொடங்கியது.

திக் திக் நிமிடங்கள்
இதனால், விஞ்ஞானிகளும், அனைத்து இந்தியர்களும் பெருமிதத்துடன் அந்த இறுதி நிமிடங்களை மனதில் ஒரு வித பதற்றத்தடனும், ஆரவாரத்துடன் கடந்தனர். இந்தநிலையில், எதிர்பாராதவிதமாக சில நிமிடங்கள் முன்னதாக விக்ரம் லேண்டரின் ரேடியோ சிக்னல் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மோடி அதிர்ச்சி
விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை நேரில் பார்வையிட வந்திருந்த பிரதமர் மோடியும் அதிர்ச்சியடைந்தார். இந்த சூழலில், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முயற்சி தோல்வியாக கருதினாலும், நிலவு குறித்த ஆராய்ச்சிக்கான சந்திராயன் 2 திட்டம் முழுமையான தோல்வியாக கருத முடியாது.

ஆர்பிட்டர் ஆறுதல்
ஏனெனில், ஏற்கனவே நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சந்திராயன்-2 ஆர்பிட்டர் செயற்கைகோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆர்பிட்டர் கருவியானது ஓர் ஆண்டுக்கு நிலவு பற்றிய ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும். மேலும், தனது 95 பணிகளை ஆர்பிட்டர் செய்து முடிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரோவரின் பணிகள்
விக்ரம் லேண்டரில் வைத்து அனுப்பப்பட்ட பிரக்யான் ரோவர் என்ற சிறிய வாகனம் போன்ற கருவியானது நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இருந்தது. மொத்தம் 14 நாட்கள் ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கை நழுவிய வாய்ப்பு
இதன்மூலமாக, நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பை மிக நெருக்கமாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்யும் வாய்ப்பு இருக்கும் என்று கருதப்பட்டது. இதனால், உலகமே விக்ரம் லேண்டரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தது.

லேண்டரின் நிலை என்ன?
ஆனால், விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழுந்து நிலவில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கான காரணங்களை, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இதுதான் பெரிய இழப்பாக இருக்கிறது. ஆறுதலாக ஆர்பிட்டர் கருவி தொடர்ந்து இயங்கும் என்பதால், இந்த திட்டத்தை முழுமையான தோல்வியாக கருத முடியும். நிலவு பற்றிய புதிய விஷயங்களை ஆர்பிட்டர் மூலமாக அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சிவனை தேற்றிய பிரதமர்
விக்ரம் லேண்டர் கருவியானது கடைசி நேரத்தில் தோல்வியாக அமைந்தது இந்தியர்களின் மனதை நொறுங்கச் செய்துள்ளது. இஸ்ரோ தலைவரான சிவன் கண்ணீர் விட்டதை பார்த்து பிரதமர் மோடியே கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கை அதானே எல்லாம்...
பிரதமர் மோடி கூறியதை போல, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்த தேசமே உடன் நிற்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு நிச்சயம் வீண்போகாது. எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பான திட்டத்துடன் புதிய உத்வேகத்துடன் நிலவு ஆராய்ச்சியை இஸ்ரோ செவ்வனே செய்யும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








