விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உயிரிழந்ததா? வீர முத்துவேல் சொன்ன அதிர்ச்சி தகவல்!
இனி சந்திரனில் உறங்கிக் கொண்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் தட்டி எழுப்புவது சந்தேகம் என சந்திரயான் 3 திட்ட இயக்குனரான வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானிகள் எப்படியாவது நிலவில் உறங்கிக் கொண்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை தட்டி எழுப்பி விடுவார்கள் என மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் திடீரென இப்படியான தகவலை திட்ட இயக்குனர் கூறியுள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ கடந்த மாதம் சந்திரனில் வெற்றிகரமாக திரையறங்கி உலக சாதனை படைத்த நிலையில், உலகில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது நிலவில் உறங்கிக் கொண்டிருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரை தட்டி எழுப்பும் முயற்சியை செய்து கொண்டிருக்கின்றனர். எப்படியாவது லேண்டர் மற்றும் ரோவரை விஞ்ஞானிகள் தட்டி எழுப்பி விடுவார்கள் என மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்திற்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேருக்கு சென்னையில் நேற்று தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பாராட்டு விழாவில் இஸ்ரோவின் சந்திராயன் 3 திட்ட இயக்குனரான வீர முத்துவேல் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் குறித்த ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில் :" நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்து சாஃப்ட் லேண்டிங் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக தற்போது மாறியுள்ளது. நிலவில் ரோவரை இஸ்ரோ நூறு மீட்டர் தூரத்திற்கு நகர்த்தியுள்ளோம். நிலவின் தென் துருவ பகுதியிலிருந்து தற்போது இஸ்ரோவிற்கு ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் நிலவு குறித்த எதிர்கால திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
சந்திரயான் 3யை நாம் எதற்காக ஏவினோமோ அதன் நோக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சந்திரயான் 3யின் ஆயுட்காலம் என்பது நிலவில் உள்ள ஒரு பகல் காலம் தான். அதாவது பூமியின் 14 நாட்களுக்கு நிலவின் ஒரு பகல் சமம். இதற்கு மேல் அது உள்ள கருவிகள் இயங்குவதற்கான சாத்தியம் குறைவு தான். லேண்டரும் ரோவரும் சூரிய ஒளி மூலம் மின்சக்தியை பெற்று அதன் மூலம் தான் இயங்கி வருகிறது.
நிலவில் இரவு நேரம் வந்துவிட்டால் அங்கு குளிர் மைனஸ் 150 முதல் மைனஸ் 200 டிகிரிக்கு அதிகமாக இருக்கும்/ இந்த கடும் குளிரில் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் கருவிகள் தப்பி பிழைப்பது கடினமான விஷயம். இதற்கான வாய்ப்பு பாதி தான் இருந்தது.
இந்த முயற்சியை தான் தற்போது இஸ்ரோ செய்து வருகிறது. இதுவரை லேண்டர் மற்றும் ரோவரிலிருந்து எந்த விதமான சிக்னல்களும் வரவில்லை. இனி தூங்கிக் கொண்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவரை தட்டி எழுப்புவது என்பது கடினம் தான் " என அவர் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய திருவனந்தபுரம் லிக்யூட் புரொபல்ஷன் ஆய்வு மைய இயக்குனர் நாராயணன் பேசியபோது:" சந்திரயான் 3 விண்கலத்தை பொருத்தவரை எல் வி எம்3 ராக்கெட்டில் தான் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மொத்தம் 642 டன் எடை கொண்டது.
இது பூமியிலிருந்து கிளம்பி சுமார் 3.7 லட்சம் கிலோமீட்டர் பயனுக்கு நிலவை சென்றடைந்துள்ளது. எல்விஎம் 3 ராக்கெட் தற்போது 4000 கிலோ எடை வரை உள்ள விண்கலன்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதை 5000 ஆக உயர்த்த திட்டமிட்டு வருகிறோம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்கள் அதிகபட்சம் 9ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலங்களை மட்டுமே எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை 19ஆயிரம் கிலோ எடை கொண்ட விண்கலன்களை சுமந்து செல்லும் ராக்கெட்களை உருவாக்க முடிவு செய்துள்ளோம். அப்போது உள்ள ராக்கெட்டுகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்கிறது. இனி அப்படி இல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் ராக்கெட் களை தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" எனக்கு கூறினார்.
சந்திரனில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் விழித்துக் கொண்டு தனது ஆய்வுப் பணிகளை துவங்கும் என மக்கள் எதிர்பார்த்து வந்து கொண்டிருந்த நிலையில் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் எழுந்திருப்பது சந்தேகம்தான் என தெரிவித்திருப்பது விஞ்ஞான ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இஸ்ரோ இந்த திட்டத்தில் வெற்றி பெற்று அடுத்தடுத்து தனது பயணத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமான திட்டமாக மாறி உள்ளது, இந்தியர்களுக்கு பெருமையான விஷயம் தான். தற்போது லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் செயல்பாட்டுக்கு வராதது வருத்தமான விஷயம் என்றாலும், அடுத்த சந்திரயான் திட்டங்களில் இரவு நேரங்களிலும் செயல்படும் வகையில் லேண்டர் மற்றும் ரோவர்கள் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications