சந்திரயான்-3ஐ விண்ணுக்கு அனுப்பியவர் இட்லி விற்கும் அவலம்!! நாட்டின் மானம் தள்ளுவண்டியில் போகுது!
சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமாக விளங்கிய தொழிற்நுட்ப வல்லுநர் ஒருவர் சாலை ஓரத்தில் இட்லி சுட்டு விற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைக்கு காரணமாக விளங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்கு உறுத்துணையாக இருந்தவர், இவ்வாறு அன்றாட பிழைப்பை நடத்தி வருவது பலரை மனம் உருக வைத்துள்ளது.
தீபக் குமார் உப்ராரியா, ஹெவி என்ஜீனியரிங் கார்பிரேஷன் லிமிடெட் என்ற மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றும் தொழிற்நுட்ப வல்லுநர். இஸ்ரோ சார்பில் சமீபத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்டு வெற்றியடைந்த சந்திரயான்-3 விண்கலத்தை பூமியில் இருந்து விண்ணுக்கு அனுப்ப பயன்படுத்தப்பட்ட லாஞ்ச் பேட் (Launch Pad)-ஐ உருவாக்கிய குழுவில் தீபக் குமார் உப்ராரியாவும் ஒருவர்.

இவ்வளவு முக்கியமான பொறுப்பை வகித்த இவர், ராஞ்சியில் தான் வசிக்கும் பகுதியில் சாலை ஓரத்தில் தள்ளுவண்டியில் இட்லி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ராஞ்சியில் துர்வா என்ற பகுதியில் ஜார்காண்ட் மாநிலத்தின் பழைய சட்டமன்றத்திற்கு எதிரே உப்ராரியாவுக்கு சொந்தமாக ஒரு கடை உள்ளது.
இந்த கடை உள்ள இடத்தில் தான் ஓர் தள்ளுவண்டியை வைத்து இட்லி விற்கும் தொழிலை தற்சமயம் தீபக் குமார் மேற்கொண்டு வருகிறார். உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்திரயான்-3 நிலவு பயணத்தில் ஓர் அங்கமாக விளங்கியவர் எவ்வாறு இந்த நிலைமைக்கு ஆளானார் என உங்களுக்கு கேட்க தோன்றலாம். இதற்கு முக்கிய காரணம், ஹெவி என்ஜீனியரிங் கார்பிரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிலவும் சம்பள பிரச்சனை ஆகும்.

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியதை நம் இந்திய மக்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகள் உற்றுக் கவனித்தன. பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார். மொத்த இந்தியாவும் சந்தோஷ கடலில் மூழ்கியது. ஆனால், அந்த சமயத்தில் தீபக் குமார் உப்ராரியா உள்பட ஹெவி என்ஜீனியரிங் கார்பிரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுமார் 2,800 பணியாளர்கள் சம்பளத்திற்காக போராடிக் கொண்டிருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா!!
ஏதோ... 1, 2 மாத சம்பள பாக்கியை கொடுக்காமல் விட்டுவிட்டார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை... சுமார் 18 மாதங்களுக்கான சம்பள பாக்கி தீபக் குமார் உள்பட 2,800 பணியாளர்களுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சோதனை செய்து, ஸ்லீப் மோடுக்கு கூட சென்றுவிட்டது. ஆனால், ஹெவி என்ஜீனியரிங் கார்பிரேஷன் லிமிடெட் பணியாளர்களின் இந்த போராட்டம் முடிந்த பாடில்லை.
போராட்டம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வேலையை விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அலுவலக பணிகளை மேற்கொண்டுவரும் தீபக் குமார், குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக சைடில் ஒரு பிஸ்னஸ் செய்து வருகிறார். அதுதான், இட்லி வியாபாரம் ஆகும். பகல் நேரங்களில் அலுவலகத்திற்கு சென்றுவிடும் இவர், காலையிலும், அலுவலக பணிகளை முடித்த பின் மாலையிலும் இட்லி வியாபாரத்தை மேற்கொள்கிறார்.
சுமார் 18 மாதங்களுக்கு சம்பளம் கிடைக்காததால், வங்கியில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 லட்சத்திற்கு தீபக் குமார் கடன் வாங்கியுள்ளார். இது இல்லாமல், தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களிடம் இருந்து மேலும் ரூ.2 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். அத்துடன், தீபக் குமார் உப்ராரியா மனைவியின் நகைகளும் அடமானத்தில் உள்ளன.
இட்லி வியாபாரம் குறித்து தீபக் குமார் பேசுகையில், "எனது மனைவி நன்றாக இட்லிகளை செய்வார். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் நாள் ஒன்று ரூ.300இல் ரூ.400 வரையில் சம்பாதிக்கிறேன். இலாபம் என்று பார்த்தால், ரூ.50இல் இருந்து ரூ.100 வரையில் கிடைக்கும். இந்த வருமானத்தில் தான் எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான்-3 நிலவு பயணத்தில் பணியாற்றியவர் சாலையோரத்தில் இட்லி விற்பது பல விதமான கேள்விகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. மறந்துவிட வேண்டாம்... இந்த நிலை தீபக் குமார் உப்ராரியாவுக்கு மட்டும் அல்ல, ஹெவி என்ஜீனியரீங் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் 2,800 பணியாளர்களுக்கும் ஆகும். இவ்வாறு 18 மாதங்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








