நம்ம கோயம்புத்தூர் கலைஞர் அசத்திட்டாருங்க!! சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தங்கத்தில் கண்முன் நிறுத்திட்டாரு!
தமிழ்நாடு, கோயம்புத்தூரை சேர்ந்த மினியேச்சர் கலைஞர் ஒருவர், நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லூனார் லேண்டரை அச்சு அசலாக அதேபோன்று, அளவில் சிறியதாக தங்கத்தில் வடிவமைத்து அசத்தியுள்ளார். யார் அந்த மினியேச்சர் கலைஞர் என்பதையும், எவ்வாறு அவருக்கு இந்த யோசனை வந்தது என்பதையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மொத்த இந்தியாவும் தற்சமயம் சந்திரயான் 3 விண்கலத்தின் சந்திர பயணத்தை எதிர்நோக்கி உள்ளது. ஏனெனில், நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஏற்கனவே அடைந்துவிட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லூனார் லேண்டர் மட்டும் தனியாக பிரிந்து நிலவில் இன்று (ஆகஸ்ட் 23) மாலை தரையிறங்கவுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்திற்கு அருகே இஸ்ரோ தனது லேண்டரை தரையிறக்குகிறது.

இதனால், சந்திரயான் 3 விண்கலத்தின் பயணம் வெற்றிக்கரமாக அமைய வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் உள்ளது. இதன் வெளிப்பாடாக, சந்திரயான் 3 பயணத்திற்கு பலர் தங்களது பிராத்தனைகளையும், தங்களது ஆதரவுகளையும் வெவ்வேறு விதமான வழிகளில் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த மினியேச்சர் கலைஞர் மாரியப்பன் தனது கை வண்ணத்தில் விக்ரம் லேண்டரை சிறிய அளவில் உருவாக்கியுள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், மினியேச்சர் படைப்புக்கு மாரியப்பன் தங்கத்தை பயன்படுத்தி உள்ளார். இவர் உருவாக்கி இருக்கும் மினியேச்சர் விக்ரம் லூனார் லேண்டரின் உயரம் வெறும் 1.5 இன்ச் மட்டுமே ஆகும். இதனால் அவருக்கு 4 கிராம் தங்க மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இன்றைய தின தங்க விலை நிலவரப்படி பார்த்தோமேயானால், 4 கிராம் 22-கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.22,000 என்ற அளவில் வரும். மினியேச்சர் கலைஞர் மாரியப்பனின் படைப்பு குறித்து டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
வீடியோவில் தனது படைப்புகள் குறித்து மாரியப்பன் கூறுகையில், நாட்டில் எப்போது முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் தனது மினியேச்சர் படைப்புகளை தங்கத்தில் உருவாக்குவதை பேஷனாக இவர் கொண்டுள்ளார். இந்த முறை, சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கியதிலும், அதனை வெற்றிக்கரமாக நிலவை நோக்கி அனுப்பியதிலும் முக்கிய பங்கு வகிக்கும் விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த விக்ரம் லூனார் லேண்டர் மினியேச்சர் மாதிரியை மாரியப்பன் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து மாரியப்பன் அளித்துள்ள பேட்டியில், "இது எந்தவொரு இந்தியருக்கும் பெருமையளிக்கக்கூடிய தருணம் ஆகும்" என கூறியுள்ளார். வெறும் 1.5 இன்ச் நீளத்தில், அளவில் சிறியதாக இருப்பினும், விக்ரம் லூனார் லேண்டரின் இந்த மினியேச்சரை உருவாக்குவதற்கு மாரியப்பனுக்கு சுமார் 48 மணிநேரங்கள் தேவைப்பட்டுள்ளது. மாரியப்பனின் கலை படைப்பு குறித்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதில் பலர், மாரியப்பனின் படைப்பு மிகவும் கற்பனை திறன் உடன் உள்ளதாகவும், தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நிலவின் வெளி சுற்று வட்ட பாதையுடன் நின்றுவிடும் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லூனார் லேண்டர் மட்டும் தனியாக நிலவை நோக்கி செல்லும் என கூறினோம் அல்லவா. நிலவின் மேற்பரப்பை விக்ரம் அடைந்த பின், இந்த லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் ஒன்று வெளியே வந்து நிலவை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கும். இந்த ரோவருக்கு பிராக்யான் என பெயர் வைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 பயணத்தில் எல்லாமே சீராக சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், சந்திரயான் 3 திட்டம் எதிர்பார்த்தப்படி வெற்றிக்கரமானதாக அமையும். இதற்கு மத்தியில், தமிழக மினியேச்சர் கலைஞர் மாரியப்பன் போன்றோரது செயல்கள் நமக்கு மேலும் தேசிய உணர்வை ஊட்டுவதோடு, சந்திரயான் 3 பயணத்தை உற்று நோக்கவும் வைக்கின்றன.


Click it and Unblock the Notifications








