சந்திரயான் 4 திட்டத்தில் நடக்கப்போவது இது தான்! இஸ்ரோ மட்டுமல்ல வேறு ஒரு நாடும் இதில் இணைகிறது!
சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலக அளவில் புகழ்பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த விண்வெளி ஆய்வுகளை இஸ்ரோ செய்து வரும் நிலையில் சந்திரன் குறித்த அடுத்த ஆய்வாளர் சந்திரயான் 4 ஆய்வு குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிலவு குறித்த ஆய்வாளர் சந்திரயான் 3 திட்டத்தின் படி பூமியிலிருந்து ராக்கெட் மூலம் விண்கலத்தை அனுப்பி அதை சந்திரனில் பத்திரமாக தரையிறங்க வைத்து மிகப்பெரிய சாதனை படைத்தது. குறிப்பாக நிலவின் தென் துருவப் பகுதியில் இது தரை இறங்கியதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 2019-ம் ஆண்டு சந்திரயான் 2 வெற்றிகரமாக அமையவில்லை. நிலவில் சென்று மோதியது. அதன் மூலம் கற்ற பாடத்தை வைத்து சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக இஸ்ரோ சாதித்து காட்டியது. நிலவில் சாஃப்ட் லேண்டிங் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
ஆனால் அதை இஸ்ரோ மிக சாதாரணமாக செய்து காட்டியது. சரி இஸ்ரோ நிலவிற்கு ராக்கெட் மூலம் விண்கலத்தை அனுப்பி தரையிறக்கி சாதனை படைத்து விட்டது. அடுத்து என்ன என யோசித்த பலருக்கு இஸ்ரோ தற்போது சந்திராயன் 4 என்ற திட்டத்தை கையில் எடுத்து பணியாற்றி வருகிறது.

சந்திரயான் 4 திட்டத்தை இஸ்ரோ தனியாக செய்யப்போவதில்லை. இது ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான ஜாக்ஸா என்ற அமைப்புடன் சேர்ந்து அந்த அமைப்பின் நிலவிற்கான மிஷனான லூபஸ் என்ற மிஷன் உடன் சேர்ந்து இந்த சந்திரயான் 4 திட்டத்தை நிறைவேற்றப் போகிறது. இந்த ஒரே திட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் பயன்பட போகிறது.
இந்த சந்திரயான் 4 திட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என நாம் கேட்டால் தற்போது சந்திரயான் 3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. ஆனால் சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி அங்கு சில சாம்பிள்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து கிளம்பி பத்திரமாக பூமிக்கு வருவது தான் இந்த சந்திரயான் 4 திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தில் சுமார் 30 கிலோ எடை கொண்ட லேண்டர் மற்றும் ரோவர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சந்திரயான் 4 திட்டத்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட லேண்டர் மற்றும் ரோவர் பயன்படுத்தப்பட உள்ளது. இது நிலவில் பத்திரமாக திரையிறங்கி அங்கு சில சாம்பிள்களை எடுத்துக்கொண்டு பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பும்.
இதில் இருக்கும் பெரிய சவாலே இந்த அதிக எடை கொண்ட லேண்டரை பத்திரமாக நிலவில் தரையை இறக்குவது தான். இதற்காக சந்திரயான்3 திட்டத்தில் சுமார் 500 க்கு 500 மீட்டர் அளவில் நிலவின் மேற்பரப்பை கண்காணித்து தானியங்கியாக லேண்டர் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சந்திரயான் 4 திட்டத்தில் இது ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கிலோமீட்டர் என்ற வகையில் நிலவின் மேற்பரப்பை கண்காணித்து தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 4 விண்கலம் ஏற்கனவே சந்திரயான்3 விண்கலம் தரையிறங்கிய சிவசக்தி என்ற பகுதிக்கு நெருக்கமான பகுதியில் தான் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான் 4 திட்டம் செயல்பாட்டிற்கு வர 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என கணிக்கப்படுகிறது. அதுவரை இதற்கான ஆய்வு பணிகளை இந்தியாவில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானின் ஜாக்ஸா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து பணியாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக இஸ்ரோவின் மிக முக்கியமான திட்டமாக இருப்பது ககன்யான் திட்டம். தற்போது இந்த திட்டத்தில் தான் இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் படி பூமியிலிருந்து சுமார் 400கி.மீ உயரத்திற்கு மனிதர்களை கூட்டிச் சென்று விண்வெளியில் ஆய்வுகளை நடத்தி மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களை பத்திரமாக பூமிக்கு திருப்புவதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்திற்கான ஆயத்த பணிகள் தான் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் தற்போது ஆதித்யா எல்1 என்ற விண்கலம் நிலவின் எல்1 பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் தனது இலக்கை அடைந்து சூரியனை ஆய்வு செய்ய துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதித்யா எல் ஒன் திட்டத்திற்கு பிறகு இஸ்ரோ தனது கவனத்தை ககன்யான் திட்டத்தில் தான் செலுத்த உள்ளது. இந்த இரு திட்டமும் எதிர்பார்த்தபடி வெற்றி அடையும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்திற்கான ஆயத்த பணிகளை செய்து வருகிறது. இது செயல்பாட்டிற்கு வர 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இது இந்தியாவின் அடுத்த கனவு திட்டமாக இருக்கிறது.
இது நிச்சயம் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும் என்றே கூறலாம். இது எல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகி உள்ளது. அவர்களது உழைப்புக்கு நிச்சயம் ஒரு சல்யூட்


Click it and Unblock the Notifications









