ஈபிள் டவரை விட பெரிய பாலம்! முதல் சோதனை ஓட்டமே வெற்றி! ரயில்வே நிர்வாகத்தின் புதிய சாதனை!
இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் காஷ்மீர் வேலை பகுதியையும் இணைப்பதற்காக அமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்தது. இந்த சோதனையில் ரயில் இன்ஜின் வெற்றிகரமாக பாலத்தின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு சென்றது. விரைவில் இந்தப் பாதை வழியாக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியமான ரயில் பாதையாக இந்த பாதை மாறி வருகிறது. பலர் இது குறித்து ஆர்வமாக படித்து வருகிறார்கள் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக ரயில்வே வசதி தான் இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் பகுதியை இந்திய ரயில்வே நெட்வொர்க் உடன் இணைப்பதற்காக திட்டம் ஒன்று போடப்பட்டது. அதன்படி உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த ரயில் பாதை அமைப்பதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் செனாப் நதியை கடப்பது தான். இந்த நதி இரண்டு மிகப்பெரிய மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நதியை கடக்க வேண்டும் என்றால் மிக உயரமான பாலம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக திட்டம் போடப்பட்டு பாலத்தின் வடிவமைப்பு எல்லாம் தயார் செய்யப்பட்டு, சென்னாப் நதி பகுதியை கடக்கும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்திற்காக கீழே வரை தூண் அமைக்காமல் இரு மலைகளுக்கும் இடையே மட்டும் தூண்களை அமைத்து அரைவட்ட வடிவிலான தூண் இணைப்பு பில்லர்களை அமைத்து இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் கீழே உள்ள நதியிலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த உயரம் என்பது பாரிஸில் உள்ள ஈபில் டவரை விட சுமார் 35 மீட்டர் அதிகமாகும்.

இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு இதில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் எலெக்ட்ரிக் லைன்கள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் முதற்கட்ட சோதனை ஓட்டமாக சங்கல்டான் தான் முதல் ரெய்சி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் செனாப் நதியை கடக்கும் வகையில் தான் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சோதனை தற்போது வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உயரமான பாலம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகின்றன. அனைத்து கட்ட சோதனைகளும் முடிவடைந்த பிறகு இந்த பாலம் வழியாக பயணிக்கும் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ம் ஆண்டில் இந்த பாலம் வழியாக ரயில் பயணிக்க அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.
இந்தப் பாலத்தில் ரயில் பயணம் செய்யும் வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தனது ட்விட்டர் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காண்பதற்கு பிரம்மாண்டமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்த பாலம் வழியாக ரயில் பயணம் செய்யும்போது இது பயணிகளுக்கு மிக ஆச்சரியமான அனுபவமாக இருக்கும்.
குறிப்பிட்ட இந்த ரயில் பாதை இமயமலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் இந்த பகுதி வழியாக ரயில் பயணிக்கும் போது பயணிகளுக்கு மிக அழகான காட்சிகள் தெரியும். இதனால் இந்த பகுதி வழியாக இயங்கும் ரயில் ரூட்டுகள் ஒரு முக்கியமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ரூட்டாக பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக இந்த ரூட் வழியாக ரயில் எப்பொழுது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த ரூட் வழியாக வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல் தான் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ரூட் வழியாக வந்தே பாரத் இயக்கப்பட்டால் அதிக உயரத்தில் பயணிக்கும் ரயிலாக வந்தே பாரத் ரயில் மாறும். மேலும் இந்த ரூட் வழியாக பயணிக்கும் ரயில் டிக்கெட் புக்கிங்கும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து குறித்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த பகுதி வழியாக ரயில் இயக்கப்படும் பட்சத்தில் இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படும். இந்திய ரயில்வே நிர்வாகத்தின் மிக முக்கிய மைல் கல்லாக இந்த நிகழ்வு இருக்கும்.


Click it and Unblock the Notifications








