வாழ்க்கையில ஒரு தடவையாச்சும் இந்த பாலத்துல போற ரயில்ல போயிடனும்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டமைத்து வரும் இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த பாலத்தை இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகில் மிக உயரமான இடத்தில் இருக்கும் இந்த பாலம் பல்வேறு அதிசயமான அம்சங்களையும், தொழில் நுட்பங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த பாலம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில்வே பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் காட்ரா - பானிஹல் பகுதியை இணைப்பதற்காக உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதியையும் இணைக்கும் இடத்தில் செனாப் என்ற நதி ஓடி வருகிறது. இந்த நதி இரு மலைகளுக்கு இடையே ஓடிவரும் நிலையில், இதை இரு மலைகளையும் இணைக்கும் வகையில் ரயில்வே பாதை அமைக்கப்படுகிறது.

இந்த ரயில்வே பாலம் உலகின் மிக உயரமான இடத்தில் இருப்பதால், பலர் கவனத்தை பெற்றுள்ளது. இதில் பல்வேறு தொழில்நுட்பம்சங்கள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு விஷயங்கள் கொண்டதாக இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் குறித்த அனைத்து தகவல்களையும் வரிசையாக காணலாம் வாருங்கள்.
இந்த பாலம் நதியிலிருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த உயரம் என்பது பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை விட 35 மீட்டர் அதிகமாகும். இந்தப் பாலம் ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் இந்தியாவின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இமயமலை பகுதியில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த பாலத்தில் ரயில் போகும் போது இயற்கை காட்சி பார்க்க ரம்மியமாக இருக்கும் வகையில் இருக்கிறது.

இந்த பாலம் கட்டமைப்பதற்காக 93 டெக் செக்மென்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு செக்மென்ட்டும் 85 டன் எடை கொண்டதாக இருக்கிறது0 இந்த டெக்குகளுக்கு இடையே மிகப் பெரிய அளவு ஸ்டீல் ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆர்ச் மட்டும் 467 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.
இந்தப் பாலத்தின் கோல்டன் ஜாயிண்ட் எனப்படும் பகுதி சுமார் 785 மீட்டர் நீளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தூரத்தை தான் மிக வித்தியாசமான இன்ஜினியரிங் கொண்டு வடிவமைத்துள்ளார்கள்0 இதுதான் மிக ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக இதை இணைப்பதற்காக சிரமப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் இதை இணைக்கும் பணி முடிவடைந்தது.

இந்த செனாப் ரயில் பாலம் என்பது நில நடுக்கம் வந்தாலும், வெடிகுண்டுகள் வெடித்தாலும் எந்தவித சேதாரம் ஆகாத வகையில் திடமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேல் ரயில் 266 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தாலும் ரயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் பயணம் செய்ய முடியும். இந்தப் பாலத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் பயணிக்க அனுமதி இருக்கிறது.
இந்த ரயில் பாலம் அடுத்த 120 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்பாட்டில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலத்தை கட்டமைக்க ரூபாய் 1486 கோடி ரூபாயை இந்திய ரயில்வே நிர்வாகம் செலவு செய்துள்ளது. மொத்தமாக இதில் 26 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகளும் 400 மீட்டருக்கு குகையும் அமைத்து இந்த ரயில் பாலத்தை கட்டமைத்துள்ளனர்.

இந்த ரயில் பாலத்தை வடிவமைக்க ஐஐடி வல்லுநர்கள், டிஆர்டிஓ வல்லுநர்கள், ஜியாலஜி சர்வே ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு துறையினர் சேர்ந்து பணியாற்றி இந்த பாலத்தை வடிவமைத்துள்ளனர். இந்த பாலத்தில் முதல் ரயிலாக வந்தே பாரத் ரயில் தான் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறப்புக்கு தயாராக இருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு அமைந்த உடன் முதல் 100 நாட்களில் அந்த அரசு செய்யப் போகும் சாதனைகளை பட்டியலிட வேண்டும் என்பதால் அந்தப் பட்டியலில் இந்த பாலம் திறப்பது குறித்த நிகழ்ச்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தற்போது மிச்சம் இருக்கும் பணிகள் எல்லாம் வேகமாக நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications









