புல்லட் பைக்குகளை மட்டும் குறி வைத்து திருடிய கொள்ளையர்கள்... காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்...
தமிழகத்தில் புல்லட் பைக்குகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் மோட்டார்சைக்கிள் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் புல்லட் பைக்கை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்து வந்த 3 பேர் அடங்கிய கும்பல் தற்போது சிக்கியுள்ளது.

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரின் புல்லட் பைக், கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இது தவிர பல்வேறு பகுதிகளிலும், வீட்டிற்கே வெளியே நிறுத்தப்பட்டிருந்த புல்லட் பைக்குகளை மட்டும் குறி வைத்து ஒரு கும்பல் இரவு நேரங்களில் கைவரிசை காட்டி வந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு மற்றும் அபிராமபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏராளமானோர் தொடர்ச்சியாக புகார்களை அளித்தனர்.

இதனால் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதன்படி தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் (அக்டோபர் 3ம் தேதி) வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது புல்லட் பைக்கில் வந்த ஒருவரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே காவல் துறையினர் சந்தேகம் அதிகரித்தது. எனவே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதில், புல்லட் பைக்கில் வந்த நபர், தஞ்சாவூரை சேர்ந்த சஃபி என்பது தெரியவந்தது. 27 வயதாகும் சஃபி, புல்லட் பைக் திருட்டு கும்பலை சேர்ந்தவர் என்பதையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

அவர் ஓட்டி வந்தது வேறொருவரிடம் இருந்து திருடப்பட்ட புல்லட் பைக் ஆகும். சஃபி தனது கூட்டாளிகளுடன் இணைந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் 65க்கும் மேற்பட்ட புல்லட் பைக்குகளை திருடியுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கேரளாவை சேர்ந்த சிபி (23) மற்றும் விருதுநகர் பகுதியை சேர்ந்த அமீர்ஜான் (36) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் சென்னையில் புல்லட் பைக்குகளை திருடி, பல்வேறு மாவட்டங்களில் அதனை விற்பனை செய்து வந்துள்ளனர். புல்லட் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். எனவே திருடப்பட்ட புல்லட் பைக்குகளை விற்பனை செய்வதற்காக, வாட்ஸ் அப்பில் குழு ஒன்றை இவர்கள் மூவரும் உருவாக்கியுள்ளனர்.

இதில், பலர் புல்லட் பைக்குகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆர்டர் வருவதற்கு ஏற்ப, இவர்கள் 3 பேரும் சென்னையில் தங்கி, புல்லட் பைக்குகளை மட்டும் குறி வைத்து கொள்ளையடித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இவர்கள் மூவரும் சென்னையில் புல்லட் பைக்குகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 7 புல்லட் உள்பட 10 இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர். புல்லட் பைக்குகளுக்கு இருக்கும் கிராக்கியை பயன்படுத்தி கொண்டு, அவற்றை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நபர்களிடம் இருந்து தப்ப வேண்டுமானால், உங்கள் பைக்கை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.

வீடு மற்றும் அலுவலகங்களில் பைக்கை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வையுங்கள். அத்துடன் டிராக்கிங் டிவைஸ்களை பொருத்தி கொள்வதும் சிறந்தது. அதேபோல் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்கும் போது, கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் உணர்த்துகிறது. இதுபோன்ற கொள்ளையர்கள் திருட்டு வாகனங்களை யார் தலையிலாவது கட்டி விடுகின்றனர்.

திருடப்பட்ட வாகனம் என்பதை அறியாமல் அவற்றை வாங்கினால், பின் நாட்களில் நீங்கள் சிக்கலில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை மனதில் கொள்ளுங்கள். குறைவான விலையில் கிடைப்பதால் சிலர் இதுபோன்ற திருட்டு வாகனங்களை தெரியாமல் வாங்கி சிக்கலில் சிக்கி கொள்வது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








