நம்ம சென்னை ஏர்போர்ட்டில் இப்படி ஒரு வசதியா! புதுசா அறிமுகம் பண்ணியிருக்காங்க!
சென்னை விமான நிலையத்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான புதிய சார்ஜிங் ஸ்டேஷன் ஒன்றை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India - AAI) அமைத்துள்ளது. விமான நிலையத்தில் பணியில் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு இது உதவும்.
அதாவது விமான நிலையத்தில் பயணிகளை அழைத்து செல்வதற்கு பேருந்து சேவை பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் தரையில் சரக்குகளை கையாள்வது போன்ற பணிகளுக்கும் ஏராளமான வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த பணிகளில் ஈடுபட்டு வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்காகவே சென்னை விமான நிலையத்தில் தற்போது புதிய சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation) நிறுவனம் இந்த சார்ஜிங் ஸ்டேஷனை நிர்மாணித்துள்ளது.

இந்த எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷனில் DC சார்ஜர் மற்றும் AC டைப் 2 சார்ஜர் ஆகியவை இருக்கின்றன. சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் சார்ஜிங் திறன் ஆகிய அம்சங்கள், தேவையை பொறுத்து அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் அப்ளிகேஷன் (ஆப்) அல்லது RFID கார்டு மூலமாக இந்த சார்ஜர்களை இயக்க முடியும். விமான நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்த சார்ஜிங் ஸ்டேஷன் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிறுவனங்கள் மற்றும் தரையில் சரக்குகளை கையாளும் நிறுவனங்கள் உள்ளிட்டவைதான் தற்போது வாகனங்களை இயக்கி கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கொண்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உதவி செய்யும் வகையில், சென்னை விமான நிலையத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கிறது. காற்று மாசுபாடு பிரச்னைக்கு முக்கியமான காரணமாக இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தற்போது படிப்படியாக குறைத்து கொண்டுள்ளன. அதற்கு பதிலாகதான் பொதுமக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகளின் மத்தியிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய இரண்டு அம்சங்களையும் அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அரசுகள் தற்போது வழங்கி கொண்டுள்ளன. இதன் காரணமாகவும், பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகப்படியாக உள்ள காரணத்தாலும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருவதாலும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இந்திய மக்கள் மத்தியில் தற்போது அதிகமாக தொடங்கியிருப்பதை நம்மால் காண முடிகிறது.
தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் மிகவும் அதிகமாக விற்பனையாகி வருகின்றன என்றாலும் கூட, எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகங்களும் அவ்வப்போது அரங்கேற தொடங்கியுள்ளன. எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் அசைக்க முடியாத ஆதிக்கத்தை கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு வரும் காலங்களில் மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் மிக கடுமையான போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்பட தொடங்கியுள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், யமஹா (Yamaha) மற்றும் ஹோண்டா (Honda) போன்ற நிறுவனங்களிடம் இருந்து புதிய தயாரிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில், ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானை சேர்ந்த வல்லுனர்கள் குழு இதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக சந்தையில் இருந்து விடைபெறலாம்.


Click it and Unblock the Notifications








