மாலையில் சென்னையில் டீ குடித்துவிட்டு வந்தே பாரத் ரயிலில் ஏறினால் இரவு டின்னர் சாப்பிட பெங்களூரு போயிடலாம்!
சென்னை பெங்களூர் இடையே கடந்த 12ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டாவது வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. மாலை டீ குடித்துவிட்டு சென்னையில் இந்த ரயிலில் ஏறினால், இரவு உணவிற்கு பெங்களூருக்கு சென்று விடலாம். இந்த ரயில் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்திற்கு முதல் வந்தே பாரத் ரயிலாக சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி காட்பாடி வழியாக பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மைசூருக்கு சென்று வருகிறது.

இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது தென்னக ரயில்வே நிர்வாகம் சென்னை-மைசூர் இடையே இரண்டாவது வந்தே பாரத் ரயிலை கடந்த 12ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. பிரதமர் மோடி கடைசியாக துவக்கி வைத்த 10 வந்தே பாரத் ரயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த ரயில் தற்போது பெங்களூருவில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மைசூர்-சென்னை இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயில் வரும் ஏப் 5ம் தேதிக்கு பிறகு அதிகாலை 6:00 மணிக்கு மைசூரிலிருந்து கிளம்புகிறது. பின்னர் இது பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வழியாக பெங்களூருவை கடந்து மதியம் 12:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. வெறும் 6 மணி நேரம் 20 நிமிடத்தில் இந்த ரயில் மைசூர்-ல் இருந்து சென்னைக்கு வரும்.

தற்போது இந்த ரயில் சென்னை- பெங்களூரு வரை மட்டுமே இயங்கி வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு கிளம்பி பெங்களூர் எஸ்எம்விடி ரயில் நிலையம் வரை தற்போது பயணிக்கிறது. ஏப் 5ம் தேதிக்கு பிறகு மைசூர்விற்கு இரவு 11:20 மணிக்கு சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு இடையேயான முதல் வந்தே பாரத் ரயில் பகல் நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பும் நிலையில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் இரவு நேரத்தில் பயணிக்கும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இரண்டாம் வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜபுரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் சரியாக இரவு 8:48 மணிக்கு கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.

அதாவது வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இந்த ரயில் சென்றடைகிறது. பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் பலர் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சுற்றியுள்ள அவுட்டர் ரிங் ரோடு, ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் தான் பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
பகல் நேரத்தில் சென்னையில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது, இதனால் அந்த ரயிலில் பயணிப்பவர்கள் பெங்களூர் மெஜஸ்டிக் ரயில் நிலையம் வரை கட்டாயம் பயணித்தாக வேண்டும். இதற்கு பயண நேரம் என்பது 4 மணி நேரம் 20 நிமிடமாக இருக்கிறது.
தற்போது இரண்டாம் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்பவர்கள் வெறும் 3 மணி நேரம் 48 நிமிடத்தில் பெங்களூருவை சென்றடைய முடியும். அதாவது சென்னையில் டீ குடித்துவிட்டு கிளம்பினால் பெங்களூருவில் இரவு உணவு சாப்பிட இறங்கி விடலாம்.
இந்த ரயிலில் உள்ள டிக்கெட் விலையை பொருத்தவரை சென்னையிலி ருந்து கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையம் வரை பயணிக்க ஏசி சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 1130 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கோச்சில் ஒரு நபருக்கு ரூபாய் 2020 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது முதல் வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலையை விட சற்று அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையும் பெங்களூரும் தென் இந்தியாவின் மிக முக்கியமான நகரங்கள் என்பதால் இந்த இரு நகரங்களுக்கும் இடையே தினம் தோறும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் குறைவான பயண நேரத்தில் இந்த வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது தான். இது பெங்களூர் வாழ் தமிழர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









