தமிழ்நாட்ல தயாரிச்சு தமிழ்நாட்டுக்கே இல்லேனா எப்படி... தமிழ் மண்ணில் சீறிப்பாய்கிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!
தென் இந்திய மக்களின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கனவு ஒரு வழியாக வெகு விரைவில் நிறைவேறவுள்ளது.

இந்தியா முழுவதும் தற்போதைய ஒரே பேச்சு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள்தான். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பாராட்டியும், அதன் ஒரு சில குறைகளை சுட்டிக்காட்டியும் சமூக வலை தளங்களில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில் தென் இந்திய மக்களுக்கு தற்போது வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும் கனவாகவே இருந்து வருகின்றன.

சென்னை ஐசிஎஃப் (ICF) ரயில் பெட்டி தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை தமிழகம் உள்பட தென் இந்தியா முழுவதும் எங்குமே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவில்லை. மாறாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது தென் இந்திய மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், தற்போது வெளியாகியுள்ள அதிரடி அறிவிப்பு ஒன்று தென் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், தென் இந்தியாவில் முதல் முறையாக வந்தே பாரத் ரயில் சீறிப்பாயவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-மைசூர் இடையே இயக்கப்படும் என தற்போது வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் வழியே மைசூர் செல்லும் என தெரிகிறது. சென்னை-பெங்களூர்-மைசூர் இடையேயான இந்த வந்தே பாரத் ரயில் வரும் நவம்பர் 10ம் (November 10) தேதியில் இருந்து இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தென் இந்திய அளவில் பார்த்தால் இதுதான் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். ஆனால் இந்திய அளவில் பார்த்தால் இது 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (5th Vande Bharat Express) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) பச்சை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ ஒரு வழியாக தென் இந்தியாவிற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிடைத்திருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வந்தே பாரத் 2.0 என அழைக்கின்றனர். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெறும் 52 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டர்களாக உள்ளது.

எனவே பயண நேரத்தை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வெகுவாக குறைக்கும். நேரம் சேமிக்கப்படும் என்பதுடன், விமானத்தில் பயணம் செய்வது போன்ற அனுபவத்தையும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு வழங்கும். அதற்கு ஏற்ற வகையில் பயணிகளின் சௌகரியத்திற்கு தேவையான வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இடம்பெற்றுள்ளன.

முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எடை குறைக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முந்தைய வெர்ஷன் 430 டன்கள் எடையில் இருந்தது. ஆனால் மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் எடை வெறும் 392 டன்கள்தான். வரும் காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நம்மால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண முடியும்.


Click it and Unblock the Notifications








